என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ?
எந்த படிப்பை படிப்பது, எந்த கல்லூரியில் சேர்வது என மாணவர்களும், பெற்றோர்களும் ஆலோசனை கேட்கும் காலம் இது. கல்வி நிறுவனங்களோ "உயர்தர கல்வி, உடனடி வேலைவாய்ப்பு" என மக்களை கவரும் வாக்குறுதிகளோடு விளம்பரங்கள் செய்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பற்றிய தெளிவு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இருப்பது அவசியம்.
என்ன படித்தால், எங்கு படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்ற கேள்விக்கான எளிதான விடை, எந்த படிப்பையும் எங்கு படித்தாலும் கவனமாக, சிறப்பாக படித்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும். படிப்பில் கவனமில்லாமல் கோட்டைவிட்டால் வேலைவாய்ப்பு என்பது சிரமமே. கல்வி அறிவை வளர்ப்பதற்க்கும், சிறந்த வேலைவாய்ப்பை பெறுவதற்க்கும் அதிக கட்டணம் செலுத்தி படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் படிக்கும் படிப்பு மட்டுமோ, அல்லது படிக்கும் கல்லூரி மட்டுமோ நமக்கு வேலை வாங்கி தருவதில்லை, மாணவரின் திறமை , அறிவு, ஆற்றல், ஆங்கில மொழி தொடர்பு திறன் ஆகியவைதான் வேலை வாய்ப்பை பெறுவதற்க்கான பிரதான காரணிகளாக இருகின்றன.
அதிக வேலைவாய்ப்புள்ள படிப்புகளை தேர்ந்தெடுத்தால் அதில் போட்டி (Competition) அதிகமாக இருக்கும், போட்டி (Competition) குறைவாக இருக்கும் படிப்புகளை தேர்ந்தெடுத்தால் வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறைவாக இருகும். எனவே எந்த படிப்பை தேர்ந்தெடுத்தாலும் சில சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும். இதற்க்கான தீர்வு எதை படிப்பதாக இருந்தாலும் சிறப்பாக படிப்பதே.
என்ன படிக்கலாம் ?
மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இது எல்லோரும் சொல்லும் அறிவுறை இதற்க்கான காரணம் என்ன வென்றால்
விருப்பமில்லாத படிப்பை படிக்க மாணவர்களை நிர்பந்தித்தால் படிப்பதில் ஆர்வம் இல்லாமல் கல்வியில் பின்தங்ககூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
விரும்பிய படிப்பை படிகும்போது ஆர்வம் இருக்கும், கவனம் இருக்கும், மாணவர்கள் பெற்றோர்கள் மீது பழி போட முடியாது, அவசியம் ஏற்படும் போது மாணவர்களே கடினமாக உழைத்து படிப்பார்கள்.
மிக முக்கியமாக மாணவர்களுக்கு ஆர்வமிருக்கின்றது என்பதற்க்காக பயனற்ற படிப்பை படிக்க அனுமதிக்ககூடாது.
'இறைவா உன்னிடம் நான் பயனற்ற கல்வியை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.''(முஸ்லிம் 5266) என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
நாம் தேர்ந்தெடுக்கும் படிப்பு மார்க்கத்திற்க்கு முரணில்லாததாக இருக்க வேண்டும். சினிமா துறை, வங்கி (வட்டி) துறை போன்ற படிப்புகளை தவிர்த்துவிடுங்கள்.
சில மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கும், விளையாட்டு சம்மந்தமாக நிறைய படிப்புகள் இருக்கின்றன, இவை அனைத்தும் மாணவர்களின் எதிர்காலத்திற்க்கு உதவாது. எனவே விளையாட்டில் ஆர்வம் இருந்தால் அதில் பயனளிக்கும் படிப்புகளாக தேர்வு செய்து படிக்கலாம்.
கல்வியில் சிறந்து விளங்குவது எப்படி ?
நன்றாக படித்தால் வாழ்வில் முன்னேற முடியும் என்பதை அறிந்த நாம் அதை எவ்வாறு சாதிப்பது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் நாம் எதற்க்காக படிக்கின்றோம், அதனால் நமக்கு கிடைக்கும் நன்மை என்ன என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது பெற்றோர்கள் புரியவைக்க வேண்டும்.
பிரார்த்தனை : சிறந்த கல்வியையும் , நல்ல வேலை வாய்ப்பையும் அடைய அல்லாஹ்விடம் பிரார்திக்க வேண்டும்,
"......என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து எனக் கூறுவீராக!": (குர்ஆன் 20 : 114)
"என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்……" (குர்ஆன் 28 : 24)
நமது உறுதியான பிராத்தனையின் மூலம் இறைவன் நமது இலக்கை அடைவதற்க்கான வழியை எளிதாக்க கூடும்.
நம்பிக்கை : நன்றாக படித்து வாழ்வில் முன்னேற எவ்வளவுதான் தடைகள் வந்தாலும் அல்லாஹ் நம்மோடு இருகின்றான், நிச்சயம் அல்லாஹ் நமக்கு உதவி செய்வான் , கடினமான பாடத்தை எளிதாக்கி அல்லாஹ் கற்று தருவான் என்ற நம்பிக்கை எப்போதும் இருக்க வேண்டும். நாம் படிக்கும் பாடங்களை பார்த்தோ, நுழைவு தேர்வுகளை பார்த்தோ பயந்து ஒதுங்கி விட கூடாது, முடியாது, இயலாது என நம்பிக்கை இழந்து விட கூடாது, பேரறிவாளனாகிய அல்லாஹ் நமக்கு அறிவை வழங்குவான் என்ற நம்மையுடன் தொடர்ந்து முயற்சி செய்து படிக்க வேண்டும்.
".....நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது" (குர்ஆன் : 30: 47)
யாராலும் தொடர்ந்து வெற்றிகளை பெற முடியாது, எனவே படிப்பில் தோல்விகள் வரலாம், அதற்காக கவலைபட்டு முடங்கிவிட கூடாது. தொடர்ந்து முயற்ச்சி செய்ய வேண்டும், இறைவன் நமது நன்மைக்குதான் தற்காலிக தோல்வியை கொடுத்திருப்பான், இறைவன் நாடினால் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்ற உறுதியுடன் கல்வி பாதையை நோக்கி நடைபோட வேண்டும்.
தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள். (குர்ஆன் 3:139)
கடின உழைப்பு : வீண் விளையாடுட்களிலும், வீண் பேச்சுகளிலும் நேரத்தை விரயமாக்காமல் படிப்பிற்க்கு அதிக நேரம் செலவிடுங்கள். புரியாத பாடங்களை பலமுறை படியுங்கள், எழுதி பாருங்கள், ஆசிரியர்களிடம் கேளுங்கள், நண்பர்களிடம் கேளுங்கள் (கல்வி கற்க வெட் கப்படாதீர்கள்). இலக்கை அடையும் வரை தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், தியாகங்கள் இல்லாமல் வெற்றிகள் கிடையாது. எனவே உங்கள் நேரத்தை கல்வி கற்ற தியாகம் செய்யுங்கள்,
ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட பொருப்புகள் பற்றி மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான் என நபி (ஸல்) கூறினார்கள் (புஹாரி 893). மாணவர்களாகிய உங்களுக்கு இறைவன் வழங்கிய பொருப்பு கல்வி கற்பது, அல்லாஹ்விற்க்கு அஞ்சி உங்களுக்கு வழங்கப்பட்ட பொருப்பை சரிவர நிறைவேற்ற நன்றாக படியுங்கள்.
எங்கு படிக்கலாம் ?
உங்கள் மதிப்பெண்ணிற்க்கு எங்கு படிக்க இடம் கிடைக்குமோ அங்கு சேர்ந்து படியுங்கள், பல்லாயிரக்கணக்கான , பல லட்ச கணக்கான ரூபாய்களை கொடுத்து தேடி சென்று எந்த கல்வி நிறுவனத்திலும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அறிவை விலை கொடுத்து வாங்க முடியாது,
நாம் நல்ல மதிப்பெண் எடுத்தால் நல்ல கல்லூரியில் குறைந்த செலவில் படிக்க இடம் கிடைக்கும், மதிப்பெண் குறைவாக எடுத்தால் தரமில்லாத கல்லூரியில் இடம் கிடைக்கும். எவ்வளவு மோசமான கல்வி நிறுவனத்தில் படித்தாலும் மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தால், கடினமாக உழைக்க தயாராக இருந்தால் நல்ல கல்வியை பெற முடியும், நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும்.
பெற்றோர்களுக்கு : லட்ச கணக்கில் கல்வி கட்டணம் கேட்கும் கல்லூரிகளை தேர்வு செய்யாதீர்கள். கடன் வாங்கியோ, வட்டிக்கு வாங்கியோ சக்திக்கு மீறி சிரமபட வேண்டாம். வருடத்திற்க்கு 15 ஆயிரம் செலவு செய்து படிக்கும் எவ்வளவோ சிறந்த படிப்புகள் தமிழகத்தில் உள்ளன. இப்படிபட்ட படிப்புகளை படித்து மாதம் பல்லாயிரகணக்கான ரூபாய் சம்பளம் வாங்கும் எண்ணற்ற இளைஞர்கள் இருக்கின்றார்கள்.
இறைவன் பொருளாதாரத்தை வாரி வழங்கி இருந்தால் லட்சங்கள் செலவு செய்து படிக்க வைக்கலாம். பொருளாதாரம் குறைவாக இருந்தால் வசதிக்கு ஏற்றவாறு படிக்க வையுங்கள்.
படிப்பை தேர்ந்தெடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை :
1. மாணவர்களுக்கு ஆர்வமுள்ள படிப்புகளை தேர்ந்தெடுங்கள், அல்லது மாணவர்களுக்கு சிறந்த படிப்பை பற்றி ஆர்வமூட்டுங்கள்.
2. இஸ்லாம் தடை செய்த படிப்புகளையும், பயனற்ற படிப்புகளையும் தவிர்த்துவிடுங்கள்.
3. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறைந்த கல்வி கட்டணம் உள்ள படிப்பை தேர்ந்தெடுங்கள்.
4. எந்த நோக்கத்திற்க்காக படிக்கின்றோம் என்பதை இறுதி செய்து கொள்ளுங்கள். கல்வி அறிவை வளர்த்து கொள்ள, அல்லது நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பை பெற, அல்லது மத்திய, மாநில அரசு பணியில் சேர, அல்லது வெளி நாடுகளில் ஆராய்ச்சி படிப்புகள் படிக்க, அல்லது மார்க்கம் மற்றும் சமூக பணியாற்ற என நமது இலக்கை தீர்மானித்து அதற்க்கு ஏற்றார்போல் படிப்பை தேர்ந்தெடுங்கள்.
5. எந்த கல்வி நிறுவனதில் சேர முடிவு செய்துள்ளீர்களோ அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் சீனியர் மாணவர்களிடம் கல்வி நிறுவனத்தை பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.
இறுதியாக மாணவர்களுக்கு : நாம் சில படிப்பை படிக்க விருப்பபடலாம், அல்லது குறிபிட்ட கல்லூரியில் படிக்க வேண்டும் என விரும்பலாம், நமது குடும்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது நாம் எடுத்த மதிப்பெண் காரணமாகவோ அது இயலாமல் போகலாம். அதற்க்காக கவலைபட்டு நமக்கு கிடைத்த படிப்பை சரியான முறையில் படிக்காமல் விட்டுவிட கூடாது, நமக்கு எந்த படிப்பு, எந்த கல்லூரியில் கிடைததோ அதையே இறைவன் நமக்கு நாடியுள்ளான் என்பதை உணர்ந்து, கிடைத்த படிப்பை சிறந்து படித்தால் நிச்சியம் வாழ்கையில் சிறந்த நிலை அடையலாம் (இறைவன் நாடினால்).
“..... ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.” (குர்ஆன் 2:216)
No comments:
Post a Comment