Saturday, January 24, 2026

வேலை இழந்த பிறகு சுலபமாக வேறு வேலை தேடுவது எப்படி?


வேலை இழந்த பிறகு சுலபமாக வேறு வேலை தேடுவது எப்படி?

வேலை இழக்கும் பொழுது மனதில் கோவம், எரிச்சல், இயலாமை என பல உணர்வுகள் மேலோங்கும். அவற்றை விடவும், அடுத்து எங்கு வேலை பார்ப்பது என்ற மிகப்பெரிய கேள்வி நம் கண்முன் நிற்கும். எனவே அடுத்து எவ்வாறு துவங்குவது வேலை தேடும் படலத்தை என்பதை முடிவு செய்ய வேண்டும். 

அந்நேரத்தில், வேறு வேலை தேடும் பொழுது என்ன என்ன முயற்சிகள் எடுப்பீர்களோ அவற்றை செய்ய வேண்டும். இந்த கட்டுரையில் அந்த முயற்சிகள் பற்றி பார்ப்போம்.

1. ஒரு இடைவெளி எடுக்கவும்:
உங்கள் கைகளில் எப்போதும் கிடைக்காத அளவு நேரம் இருக்கும். யாரும் கேள்விகள் கேட்க போவது இல்லை வேலைகள் கூறப்போவதும் இல்லை. எனவே அந்த நேரத்தில் எவ்வாறு மனதை ஒருநிலைப்படுத்தி, வலுவாக்கலாம் என்பதை யோசிக்கவேண்டும். குடும்பத்தோடு சிறிது நாட்கள் செலவிடலாம்.

2. உங்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதை நிப்பாட்டுங்கள்:
உங்கள் குறைகள் காரணமாக உங்களது வேலை பறிபோனது என்று யோசிக்க ஆரம்பிக்கும் முன்னர், கொஞ்சம் நிதானமாக சிந்திக்கவும். வேலை பறிபோக பல காரணங்கள் இருக்கலாம்.

3. புதிதாக என்ன திறமைகள் தேவை?

மீண்டும் வேலை தேடும் படலம் துவங்க இருப்பதால், திறமைகள் எவ்வாறு மாறியுள்ளன. வேறு என்ன என்ன திறமைகள் அவசியம் என்பதை தேடிப்பார்க்கவும். ஆட்கள் தேவை என்பது போன்ற விளம்பரங்களில் அவர்கள் கூறும் வரையரைக்குள் தாங்கள் உள்ளீர்களா என்பதை கவனிக்கவும். காலத்திற்கு ஏற்ப மாறுவது அவசியம்.

4. திறமைகளை மேம்படுத்துங்கள்:
வேலை இருக்கும் பொழுது என்ன தேவையோ அதனை மட்டும் செய்துவிட்டு விட்டுவிடுவோம். ஆனால் அப்படி இல்லாமல், தொடர்ந்து தேவையான திறமைகளை வளர்த்து வருவது அவசியம். எனவே இணையத்தில் உள்ள வலைதளங்கள் மூலம் கற்கலாம்.

5. ரெஸ்யூமில் மாற்றம் செய்யுங்கள்:
கிடைக்கும் ஒவ்வொரு ரெஸ்யூமையும் வேலை தருபவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்கு வரும் 90% விண்ணப்பங்கள் சமந்தமில்லாமல் இருக்கும்.
விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றவாறு தேவையான வார்த்தைகள் அதனில் இருத்தல் வேண்டும். முதல் பக்கத்தில் உங்கள் வேலைக்கு தொடர்பான வார்த்தைகளை எழுதவும். சுருக்கமாக உங்கள் வேலைகளை அதில் குறிப்பிடவும். அதில் தேர்வு பெற்றால்தான், அடுத்த பக்கத்திற்கு செல்லுவார்கள்.

6. நேர்மறையான எண்ணங்களை மனதில் கொள்ளவும்:
வேலை இல்லை என்பதால், அடுத்த வேலை கிடைத்த உடன் அதில் சேருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டும். இது அடுத்த வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.

7. உங்கள் நட்பு வட்டத்தில் இயங்கவும்:
உங்களோடு வேலை செய்தவர்கள், நண்பர்கள், உங்கள் வேலைக்கு தொடர்புடையவர்கள் என பலரோடும் பேசி, சிபாரிசு கிடைக்குமா என்று பாருங்கள்.

8. அறிவுப்புகளை மட்டும் நம்பி இருக்காதீர்கள்:
உங்களுக்கு தெரிந்த வேலை தேடும் தளங்களை தாண்டி, தற்போது நிறுவனங்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும் ஆட்களை எடுக்கின்றனர்.
மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் சமந்தப்பட்ட நிறுவனத்தை நீங்கள் நேரடியாக அணுக இயலும். அவை மூலம், நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளோடு பேச முடிகிறதா என பார்க்கலாம். சரியான சந்தர்ப்பம் அவ்வாறும் அமையலாம்.

9. பொறுமையாக இருங்கள்:
அதிக நாட்கள் பார்த்து பின்பு வேலையில் இருந்து நீக்கப்படுவது போன்று புதிதாக வேலையில் ஒருவரை நியமிக்கவும் நிறுவனங்கள் அதிக நாட்கள் எடுத்துக்கொள்வார்கள்.
குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் ஆகலாம். எனவே அது வரை பொறுமையாக காத்திருக்கவும். சில காலி இடங்கள் இருந்து, அதற்கு ஆல் சேர்க்க நீண்ட சோதனைகள் இருக்கலாம்.

எனவே சரியான கால அளவு கொண்டு வேலை தேடும் படலத்தை எதிர்கொள்ளுங்கள்.

#joblosses
#unemployment

(இது ஒரு மீள் பதிவு)

பிறப்பு சான்றிதழ் தொலைந்து விட்டதா? பெயர் திருத்தம் செய்வது எப்படி?


பிறப்பு சான்றிதழ் தொலைந்து விட்டதா? பெயர் திருத்தம் செய்வது எப்படி? 

பிறப்பு சான்றிதழ் என்பது ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்யும் மிக முக்கியமான சட்ட ஆவணம் ஆகும்.. இதில் பெயர் அல்லது எழுத்துப் பிழைகள் இருந்தால், கல்வி, வேலை, பாஸ்போர்ட், திருமணம் போன்ற பல்வேறு நிலைகளில் எதிர்காலத்தில் சட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், பிறப்புச் சான்றிதழில் உள்ள பிழைகளை உரிய முறையில் திருத்துவது அவசியமாகிறது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..

பிறப்பு சான்றிதழ் பெறுவது என்பது சமீப காலமாகவே ரொம்ப எளிமையான விஷயமாகிவிட்டது.. குழந்தை பிறந்ததும், அந்த தகவலை மருத்துவமனை அல்லது செவிலியர் நகராட்சி / பேரூராட்சி / ஊராட்சி அலுவலகத்திற்கு பதிவு செய்கிறார்கள். அந்த பதிவு செய்யப்பட்ட பிறகே பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

21 நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழ்
பொதுவாக குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்தால் எந்த அபராதமும் இல்லாமல் சான்றிதழ் கிடைக்கும். பதிவு செய்த பிறகு, உங்கள் பகுதியின் நகராட்சி அல்லது ஊராட்சி அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இப்போது ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கவும் முடியும்.. தமிழ்நாடு அரசு இணையதளம் மூலம் பதிவு எண் அல்லது குழந்தையின் விவரங்களை கொடுத்து சான்றிதழை டவுன்லோடு செய்யலாம்.

மருத்துவமனையில் கொடுக்கும் பிறப்பு அறிக்கை, பெற்றோரின் ஆதார் போன்ற அடையாள ஆவணங்கள் இருந்தாலே, சான்றிதழ் தயாராகி விடும். 21 நாட்களை கடந்த பிறகு பதிவு செய்ய வேண்டும் என்றால், கூடுதல் நடைமுறைகள் மற்றும் சிறிய அபராதம் இருக்கும். ஆனால் அதையும் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் எளிதாக செய்து முடிக்கலாம்.

பிறப்பு சான்றிதழில் எழுத்து பிழைகள்
அதேபோல பிறப்புச் சான்றிதழில் உள்ள சிறிய எழுத்துப் பிழைகளை சரி செய்வது எளிதான செயல்முறையாகும். இதற்காக சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி அல்லது ஊராட்சி அலுவலகத்தில் உள்ள சுகாதார ஆய்வாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலரை அணுகி மனு அளிக்க வேண்டும்.

குழந்தையின் பெற்றோரின் அடையாளச் சான்றுகள் மற்றும் மருத்துவமனை வழங்கிய டிஸ்சார்ஜ் சம்மரி போன்ற ஆவணங்களை சமர்ப்பித்தால், அதிகாரிகள் சரிபார்த்து பிழைகளைத் திருத்தித் தருவார்கள். இந்த வகை திருத்தங்களுக்கு அரசிதழ் அறிவிப்பு தேவையில்லை; பிரமாணப் பத்திரம் போதுமானதாகும்.

பெயரை மாற்ற வேண்டுமா?
ஆனால், பிறப்புச் சான்றிதழில் முழுப் பெயரை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கான நடைமுறை சற்று விரிவாக இருக்கும். இதற்காக முதலில் தமிழக அரசின் அரசிதழில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கான விண்ணப்பங்களில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் கையொப்பமிட வேண்டும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெயர் மாற்றம் செய்ய விரும்பினால், பதிவுபெற்ற மருத்துவரிடம் பெற்ற ஆயுள் சான்றிதழை இணைக்க வேண்டும். அரசிதழில் பெயர் மாற்றத்திற்கான கட்டணம் ரூ.750 ஆகும்; இது karuvoolam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் செலுத்தலாம்.

பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பப் படிவங்களை stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் பழைய பிறப்புச் சான்றிதழ், ஆதார், ரேஷன் கார்டு, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சமீபத்திய புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

பெயர் மாற்ற திருத்தங்கள்
அரசிதழில் பெயர் மாற்றம் வெளியான பிறகு, அந்த அறிவிப்பின் நகலை கொண்டு பிறப்பு பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து புதிய பிறப்புச் சான்றிதழைப் பெற முடியும். அதன் பிறகே ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட பிற ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய இயலும்.

அரசிதழில் பெயர் பிரசுரிக்கப்பட்ட பிறகு, ஐந்து நாட்களுக்குள் அதனை நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். ஒருமுறை பெயர் மாற்றம் செய்த பிறகு, "என்கிற" என்ற பெயரில் மீண்டும் பிரசுரிக்க அனுமதி இல்லை. அரசிதழில் ஏற்பட்ட அச்சுப் பிழைகள் இருப்பின், ஆறு மாதங்களுக்குள் திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க விதியாகும்.

பிறப்பு சான்றிதழ் தொலைந்தால்?
இதேபோல், பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டாலும் கவலைப்பட தேவையில்லை. தற்போது டிஜிட்டல் வசதிகள் மூலம் அதை மீண்டும் எளிதாகப் பெற முடியும்.

தமிழ்நாடு அரசு வழங்கும் crstn.org என்ற இணையதளம் வழியாக பிறப்பு சான்றிதழை ஆன்லைனில் தேடி, PDF வடிவில் பதிவிறக்கம் செய்யலாம். பிறந்த நபரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், மாவட்டம் போன்ற விவரங்களை உள்ளீடு செய்தால், பதிவு இருந்தால் உடனடியாக சான்றிதழ் கிடைக்கும். இந்த வசதி 01.01.2018க்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கு உள்ளது.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற மாநகரங்களில் மாநகராட்சி இணையதளங்களின் மூலமாகவும் பிறப்பு சான்றிதழை நேரடியாக டவுன்லோடு செய்யலாம்.... 2018க்கு முந்தைய பதிவுகளுக்கு சில இடங்களில் நேரில் அலுவலகம் செல்ல வேண்டிய தேவை இருக்கலாம். இருந்தாலும், பழைய பதிவுகளையும் டிஜிட்டல் வடிவில் மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதால், எதிர்காலத்தில் அவையும் ஆன்லைனில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: Oneindia Tamil

வெளிநாட்டுக் கல்வியில் ஜெர்மனி முதலிடம் பிடிக்க 10 முக்கிய காரணங்கள்!

வெளிநாட்டுக் கல்வியில் ஜெர்மனி முதலிடம் பிடிக்க 10 முக்கிய காரணங்கள்!

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஜெர்மனியில், வெளிநாட்டு மாணவர்கள் அதிகமானோர் கல்வி கற்க ஆண்டுதோறும் வருகிறார்கள். அதுபோல, இந்தியாவிலும் வெளிநாட்டு மொழியை படிக்க விரும்புவோரின் முதல் தேர்வாகவும் இருப்பது ஜெர்மனிதான்.

மாணவர்களுக்கு ஜெர்மனி இந்த அளவுக்கு பிடிக்க முக்கிய காரணங்கள் என்னென்ன?

சிறந்த பல்கலைக்கழகங்கள்

உயர்தர கல்வியை வழங்கும் சிறந்த பல்கலைக்கழகங்கள் ஜெர்மனியில் உள்ளன. ஜெர்மனி பல்கலைக்கழகங்கள் பல, உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடங்களில் உள்ளன.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களும் ஜெர்மனியில் உள்ளன. ஜெர்மனி பல்கலைகள் கொடுக்கும் சான்றிதழ்களின் மதிப்பும் பெரியது.

முதல் மற்றும் முக்கியம் பாதுகாப்பு

இதர நாடுகளுடன் ஒப்பிட்டால் ஜெர்மனி பாதுகாப்பான நாடு. இரவோ, பகலோ அங்கு பாதுகாப்புக்கு எந்த குறைபாடும் இல்லை. பொதுப்போக்குவதை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாகவும் ஜெர்மனி உள்ளது. எனவே பிள்ளைகளை படிக்க வைக்க பெற்றோரும் அதிகம் விரும்புகிறார்கள்.

ஆங்கிலம் பயிற்று மொழி

ஜெர்மனி கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை, இங்குள்ள பல பல்கலைக்கழகங்களில் பயிற்று மொழியாக ஜெர்மனி போல ஆங்கிலமும் உள்ளது.

கல்விக் கட்டணம்

ஜெர்மனியில் கல்விக் கட்டணம் குறைவு. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் ஜெர்மனியில் கல்விக் கட்டணம் வெகு குறைவு. பல கல்லூரிகளில் இந்திய ரூபாயில் சில ஆயிரங்கள்தான் கல்விக் கட்டணமே நிர்ணயிக்கப்படுகிறது.

செலவினம்

அங்கு தங்கு படிக்க வேண்டும் என்றால், செலவினங்களும் வெகு குறைவு. பொதுப் போக்குவரத்துகள் சிறப்பாக இருப்பதால் போக்குவரத்துச் செலவும் அதிகம் ஏற்படாது. மேலும் மாணவர்களாக இருப்பின் அவர்களுக்கு பல சலுகைகளும் கிடைக்கும்.

பணி வாய்ப்பு

படித்துக் கொண்டே வேலை செய்யவும் அனுமதி கிடைக்கும், மாணவர்கள் பகுதிநேர வேலை செய்துகொண்டே படிக்கலாம். வாரத்தில் 20 மணி நேரமும், ஆண்டுக்கு 120 நாள்கள் முழுமையாக வேலை செய்ய அனுமதி உள்ளது.

மாணவர்கள் விசா நடைமுறை

ஜெர்மனியில் படிக்க மாணவர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, அதற்கான நடைமுறைகள் எளிமையாக உள்ளன. விசாக்கள் வழங்குவதிலும் சிறந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

ஜெர்மனி படிப்பது எளிது

மற்ற மொழிகளைப் போல அல்லாமல் ஜெர்மனி சென்றுவிட்டால் தனியா பயிற்சிகள் எடுக்க வேண்டாம். எளிதாகவே ஜெர்மனி கற்றுக் கொள்ளலாம்.

சிறந்த கலாசாரம்

ஜெர்மனி சிறந்த வரலாறும், கலாசாரமும் கொண்ட நாடு. அங்குள்ள மக்கள் பழக எளிமையானவர்கள். புதுமைகளுக்கு ஊக்குவிப்பும், வாழ்வதற்கு எளிமையானதாகவும் இருக்கும்.

வாழ்வதற்கு ஏற்றது

படித்து முடித்த மாணவர்கள், அங்கு தங்கி பணியாற்ற விரும்பினால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

முதற்கட்டமாக தங்குவதற்கான அனுமதி முடிந்துவிட்டாலும் அதனை 18 மாதங்கள் நீட்டித்துக் கொண்டு பணி வாய்ப்பை தேடிக் கொள்ளலாம்.

இதுபோன்ற எண்ணற்ற காரணங்களால், வெளிநாட்டு மாணவர்கள் ஜெர்மனியை அதிகம் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

#studyingermany

குழந்தைகளின் அறிவுத்திறன் குறைபாடு (Intellectual Disability)


குழந்தைகளின் அறிவுத்திறன் குறைபாடு (Intellectual Disability)

Dr. சித்ரா அரவிந்த்

தடுப்பு மற்றும் சிகிச்சை அறிவுத்திறன் குறைபாடு ஒரு வருக்கு வராமல் காக்கும் முயற்சி மற்றும் அறிவுத்திறன் குறைபாடால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முயற்சியை மூன்று கட்டமாக வகைப்படுத்தலாம்.

1.முதல் கட்ட நடவடிக்கை 

(வரும் முன் காப்பது...)  குடும்பத்தில், ஏற்கெனவே மரபணு குறைபாடுகள் பிரச்னை இருப்பின், குழந்தை பெற்றுக் கொள்ள தயாராக இருக்கும் பெற்றோர்/கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள், மரபணு ஆலோசனைக்கு (Genetic Counseling) செல்வது அவசியம். கர்ப்பத்தின் ஆரம்ப நிலையிலேயே, சில மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். கருவிற்கு மரபணு பிரச்னை இருக்கலாம் என சந்தேகம் இருந்தால், அது குறித்து என்ன முடிவு எடுக்கலாம் எனவும் ஆலோசனை வழங்கப்படும்.

குழந்தை வயிற்றில் இருக்கும்போது, தாய், தன் சேயின் நலன் கருதி தன் ஆரோக்கியத்தை பேணிக் காக்க வேண்டியது மிக அவசியம்.  தகுந்த, சத்து மாத்திரைகள் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்வது மற்றும் மது அருந்தாமல் இருப்பது போன்ற விஷயங்களைக் கடைப்பிடித்தால் அறிவுத்திறன் குறைபாடுடன் குழந்தைப் பிறக்கும் ஆபத்து குறையும்.

நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது முக்கியம். ஏற்கெனவே நீரிழிவு மற்றும் பினைல் கீட்டோனூரியா (Phenylketonuria) உள்ள தாய் கர்ப்பத்தின் போது சரியான உணவு பழக்கத்தைக் (Strict diet) கடைப்பிடிப்பதன் மூலம், குழந்தைக்குப் பாதகம் விளைவதைத் தடுக்க முடியும். கர்ப்ப காலத்தில் சரியாக பார்த்துக் கொள்வது மூலம், குறைப்பிரசவத்தையும் அதனால் ஏற்படக்கூடிய அறிவுத்திறன் குறைபாட்டையும் தடுக்க முடியும்.குழந்தை பிறந்தவுடன் தகுந்த தடுப்பூசிகள் போடுவது மூலம் மூளைக்காய்ச்சல், அம்மை போன்ற மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் தொற்றிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கலாம்.

2. இரண்டாம் கட்ட நடவடிக்கை  

(தகுந்த சிகிச்சையின் மூலமாக பாதிக்கப்பட்டவரை, நோயின் கடும் விளைவிலிருந்து காப்பது...) சில நேரங்களில் அறிவுத்திறன் குறைபாடை ஏற்படுத்தும் கோளாறுடன் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. உதாரணம்... பினைல் கீட்டோனூரியா  பாதித்த 
குழந்தைகளை பிறந்தவுடனே சில மருத்துவ சோதனை மூலம் கண்டுபிடித்தால், தகுந்த உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் மூளைக்கு ஏற்படும் பாதிப்பை தடுத்து நிறுத்த முடியும்.

3.மூன்றாம் கட்ட நடவடிக்கை 

(பாதிக்கப்பட்டவரை அவரவர் ஆற்றலுக்கேற்ப நிறைவாக வாழ வைக்க உதவும் முயற்சி...) 

அறிவுத்திறன் குறைபாட்டை பூரணமாகக் குணப்படுத்த முடியாது. ஆனால், குறைபாட்டின் தன்மைக்கேற்ப, அவரவர் முழுத் திறமையை உபயோகித்து செயல்பட வைப்பதற்கு சிறப்புப் பயிற்சி (Special education) பெருமளவு உதவும். இதன் மூலம் டவுன்ஸ் சிண்ட்ரோம், ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள் பலரும் நன்மை அடையும் வாய்ப்புகள் அதிகம். 

ஆரம்ப கால சிகிச்சை

ஏழ்மை மிகுந்த சமுதாயத்தில் வாழும் குழந்தைகளுக்கு லேசான அறிவுத்திறன் குறைபாடு பெரும்பாலும் காணப்படுகிறது. அறிவுத்திறன் குறைபாடு ஆபத்திலிருக்கும் இவர்களுக்கு ஆரம்ப காலத்திலேயே, இவர்களின் அறிவுத்திறனைக் கூட்டும் பயிற்சிகள் கொடுப்பதன் மூலமாக, பெரியவர்களான பின், மற்றவர் போல இயல்பாக, பள்ளியில் சிறப்பாகக் கற்று நல்ல வேலையும் செய்ய முடியும்.குழந்தையின் தேவைக்கேற்ற, பேச்சுப் பயிற்சி (Speech therapy), வேலைப் பயிற்சி (Occupational therapy), உடற்பயிற்சி, குடும்ப ஆலோசனை, தகுந்த ஊட்டச்சத்து போன்ற ஆரம்ப கால சிகிச்சை மூலம் குழந்தையின் அறிவித்திறனைப் பேண முடியும். 

சிறப்புக் கல்வி

அறிவுத்திறன் குறைபாடுள்ளவர்கள், அதன் தீவிரத்தைப் பொறுத்து பல்வேறு விஷயங்களைக் கற்க முடியும். குறிப்பாக அதிகம் காணப்படும் லேசான அறிவுத் திறன் குறைபாடு உள்ளவர்கள் கற்கவே முடியாது எனக் கூற முடியாது.  அவர்களால் நிச்சயம் புது விஷயங்களையும் திறன்களையும் கற்க முடியும். சராசரி மனிதா–்களைக் காட்டிலும் சற்று மெதுவாக கற்க முடியும். பாதிக்கப்பட்டவரின் நிறை குறை அறிந்து, அவரவரின் தேவைக்கேற்ப பாடத்திட்டம் வகுக்கப்பட்டு, சிறப்புப் பள்ளியில் (Special school) பயிற்சி அளிக்கப்படுகிறது.

சரியான உதவி, ஆதரவு மற்றும் சிறப்புக் கல்வி மூலம் இவர்கள் யாரையும் சாராமல் தனித்து, வெற்றிகரமாக வாழவும் முடியும். அறிவுத்திறன் குறைபாடு உள்ளவர்கள் 
அவரவரின் அறிவுத்திறனை (பலம், பலவீனம் அறிந்து) முழுமையாக பயன்படுத்த சரியாக வழிகாட்டினால், அவர்களால் ஓரளவு நிறைவான வாழ்வை வாழ முடியும். வேலை மற்றும் சமூகத்திறன் பயிற்சிவேலை செய்யவும், அதை தக்க வைத்துக் கொள்வதற்கும் தேவையான வாழ்வியல் திறன் (Life Skills) மற்றும் சமூகத்திறன் பயிற்சியும் மிகவும் அவசியம். உதாரணம்... வேலையின் போது ஏதெனும் பிரச்னை ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது மற்றும் கோபத்தை எப்படி சமாளித்தல் போன்றவை. 

தங்களின் பாலினத்தூண்டுதல் குறித்து எது சரி, தவறு என இவர்களால் புரிந்து கொள்ள இயலாது. சமுதாயத்துடன் ஒன்றி வாழும் போது, இவர்களின் அறியாமையால், பண ரீதியாகவும், உடல்ரீதியாகவும் அலைக்கழிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். இவற்றிலிருந்து எப்படி தங்களை பாதுகாப்பது என்பது குறித்த பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

மனநலப் பிரச்னைக்கு சிகிச்சை

அறிவுத்திறன் குறைபாடு உள்ள பெரும்பாலானவர்களுக்கு மனநலப் பிரச்னைகள் மற்றும் உணர்ச்சி/ நடத்தை பிரச்னைகளும் அதிகம் பாதித்து இருக்கும். அதற்கும் சேர்த்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இக்குழந்தைகளின் எதிர்காலம் நல்லவிதத்தில் அமைவதற்கு பெற்றோரின் பங்கும் மிகவும் அவசியம்.

பெற்றோர் செய்ய வேண்டியவைஅறிவுத்திறன் குறைபாட்டைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளவும். அப்போதுதான் உங்கள் குழந்தையின் செயல்பாடுகளைப் புரிந்து அவா்களுக்கு உதவ முடியும்.

1.குழந்தை சுதந்திரமாக இருக்க ஊக்குவியுங்கள். புது விஷயங்களை உங்கள் குழந்தை கற்கும் போது, சரியாக வழிகாட்டி உற்சாகப்படுத்துங்கள். இது அவர்கள் திறமையை வளர்க்க உதவும். அவர்கள், தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள உதவியாக இருங்கள். உதாரணம்... குளிக்க, உண்ண, உடை உடுத்த…

2.வேறு பல வகுப்புகளில் உங்கள் குழந்தையை சேர்த்து விடுங்கள் (ஓவிய வகுப்பு, ஏதாவது விளையாட்டு). இது அவர்களின் சமூகத் திறன் மற்றும் உற்சாகத்தை வளர்க்க உதவும்.

3.குழந்தையின் ஆசிரியரிடம் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வது மூலம் குழந்தையின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்க முடியும்.  பள்ளியில் பயின்றதை வீட்டில் பழகி பார்க்க உதவலாம் (உதாரணம்... பணத்தைப் பற்றி பள்ளியில் பயின்றால், அன்றைக்கே கடைக்கு அழைத்துச் சென்று, அதன் உபயோகத்தைப் புரிய வைக்கலாம்).

4.அறிவுத்திறன் குறைபாடுள்ள மற்ற குழந்தைகளின் பெற்றோரைத் தெரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் பயனுள்ளதாகவும் ஆதரவாகவும் இருக்கும்.

5.குழந்தையின் திறமை மற்றும் ஆர்வத்துக்கேற்ப, அவர்கள் மேலே என்ன படிக்கலாம் மற்றும் என்ன வேலை செய்யலாம் என தேர்ந்தெடுக்க நல்ல வழிகாட்டியாக 
இருங்கள்.

6.பொறுமையாகவும் நம்பிக்கையோடும் இருப்பது மிகவும் அவசியம். பெற்றோர் கவலையோ, கோபமோ பட்டால், அது குழந்தையின் தன்னம்பிக்கையையே பாதிக்கும்.

7.குழந்தையின் வயது, திறனுக்கேற்ப, சிறுசிறு வேலைகளைச் செய்யச் செய்யலாம். பெரிய வேலையாக இருந்தால், அதை பகுதியாக பிரித்து, கொஞ்சம் கொஞ்சமாக, பொறுமையாக அவர்களை தயார் செய்யலாம். செய்ய வேண்டிய வேலையை எப்படி செய்ய வேண்டும் என அவர்களுக்கு செய்து காட்டி, தேவைப்படும்போது 
உதவலாம்.

8.எல்லாவற்றுக்கும் மேலாக... உங்கள் குழந்தை உங்களின் அரிய பொக்கிஷம்.  அவர்களை கடவுளின் குழந்தை என பாவித்து சொத்து போல பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமைதானே!

அதிர்ச்சி மற்றும் மன உளைச்சல் விளைவிக்கும் சம்பவங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநலப் பிரச்னைகள் (Trauma and Stressor-related disorders) குறித்து அடுத்த இதழில்  பார்ப்போம்.

கமலா ஏன் கவனிப்பதில்லை?

கமலாவை 3 வயதில் பள்ளியில் சேர்த்தனர். அப்போது அவளுக்கு சில வார்த்தைகள் மட்டுமே பேசத் தெரிந்திருந்தது. சக மாணவர்களைப் போல, ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை அவளால் புரிந்து கொள்ள முடியாததும் தெரிய வந்தது. அவளால் குறைந்த நேரம் கூட எதைக் குறித்தும் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால், திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்கும் போது, தாமதமானாலும், நன்றாக புரிந்துகொண்டாள்.

எவ்வளவு முயற்சித்தும், அவளால் ஓரளவுக்கு மேல் கற்க இயலவில்லை. அவள் வளர வளர அவளைக் குறித்த கவலையும் வளர்ந்தது. அவள் என்ன படிக்க வேண்டும், என்ன வேலைக்கு போக வேண்டும் என்ற பிரச்னையும் இப்போது சேர்ந்து கொண்டது. பொதுவாக யார் என்ன கேட்டாலும் கமலாவுக்கு ‘முடியாது’ என்றே கூற தெரியாது. இதனாலேயே, அவளில் இந்த வெகுளித்தனத்தை, அவளை சுற்றி இருப்பவர் தவறாக பயன்படுத்த ஆரம்பித்தனர். 

கமலாவின் இந்த நிலை சுற்றத்தாருக்கு தெரிந்தால் அவமானம் என கருதி அவளை எங்குமே அழைத்துச் செல்வதில்லை. இதனால், கமலாவுக்கு எப்படி மற்றவரிடம் பழக வேண்டுமென சுத்தமாகத் தெரியவில்லை. ஆலோசனைக்கு வந்த கமலாவின் பெற்றோரை சமாதானப்படுத்தி, அவளின் அறிவுத்திறன் குறைபாடு பிரச்னை பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டது. 

அதன் பின்னே கமலாவிடம் தங்கள் அணுகுமுறையை மாற்றி, பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டனர். வீட்டிலும் அவளின் தனித்துவத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவளின் ஆர்வத்தைக் கண்டுபிடித்து, சிறுசிறு வெற்றிகளை ஊக்குவித்து, முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களின் பொறுமையும் நம்பிக்கையும் வீண்போகாவண்ணம், கமலா இப்போது தன் முழுத்திறமையையும் பயன்படுத்தி ஒரு வேலையில் நிலைத்து, மன நிறைவோடு வாழ்கிறாள்!

Dr. சித்ரா அரவிந்த்
நன்றி: குங்கும்ம் டாக்டர் (2016)

(இது ஒரு மீள் பதிவு)

வங்கி அதிகாரி ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்? மற்றும் என்ன தேர்வு எழுத வேண்டும்?


வங்கி அதிகாரி ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்? மற்றும் என்ன தேர்வு எழுத வேண்டும்?

அடுத்த 30–35 வருசத்துக்கு நல்ல சம்பளத்துடன் நாடு முழுவதும் 'வலம்' வர முடிவு பண்ணீட்டீங்க. வாழ்த்துக்கள்..

35 வருடங்களில் 5 கோடி சம்பளம் லட்சியம், 3 கோடி நிச்சயம்.

வீட்டு வாடகை, காருக்கு பெட்ரோல், நியூஸ் பேப்பர், மருத்துவத்திலிருந்து மேற் படிப்பு செலவுகள் வரை வங்கியே செலவுகளை ஏற்றுக்கொள்ளும். குறைந்த வட்டியில் பல கடன் வசதிகள், பென்ஷன், 4 வருடங்களுக்கு ஒருமுறை பணியுயர வாய்ப்பு, 5 வருடங்களுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு..

அனைத்து அரசு வங்கி பணிகளுக்கும் துவக்க புள்ளி ஐ.பி.பி.எஸ்.தான்.
ஐ.பி.பி.எஸ். (Institute of Banking Personnel Selection) என்ற அமைப்புதான் பொதுவான தேர்வுகளை நடத்துகிறது. (பாரத ஸ்டேட் வங்கி மட்டும், தானே தேர்வு நடத்தித் தானே தேர்வுசெய்து கொள்கிறது).

வங்கிகளில் எழுத்தர், அதிகாரிகள் என்று இரண்டு பிரிவுகளில் பணி கிடைக்கும் . எழுத்தராக சேர்ந்து, சில வருடங்களில் அதிகாரியாக பதவி உயர்வு பெறலாம்.

படிப்புத்தகுதி

அடிப்படைத் தேவை ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு.

பி.காம். படித்திருந்தால் மட்டுமே தேர்வு எளியது என்பது தவறு. எனது அனுபவத்தில் அறிவியல் பட்டதாரிகளே வங்கித் தேர்வில் அதிக வெற்றி பெறுகிறார்கள்.

வயது வரம்பு

* குறைந்தபட்சம் 20, அதிக பட்சம் 30.
* ஓ.பி.சி. 33
* எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினருக்கு 35.
* மாற்றுத் திறனாளிகளுக்கு 40.
ஐ.பி.பி.எஸ் (IBPS) தேர்வுகள்
இரண்டு வகை ஐ.பி.பி.எஸ் எழுத்துத் தேர்வுகள்.

1. முதல்நிலை,
2. மெயின் தேர்வு.

இரண்டிலும் தேர்வானால் எழுத்தராக பணிகிடைக்கும்.
வங்கி அதிகாரி பதவிக்கு தேர்வுகளோடு, நேர்காணலிலும் தேர்வாக வேண்டும்.

மதிப்பெண் முறை

முதல் நிலைத்தேர்வு 100 மதிப்பெண்கள். ஆன்லைன் , அப்ஜெக்டிவ், ஒரு மணி நேர தேர்வு.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு.

மெயின் தேர்வில் 200 மதிப்பெண்கள். இதுவும் ஆன்லைன் வழியில், அப்ஜெக்ட்டிவ் வினாக்கள். 3 மணி நேரத் தேர்வு.
இரு தேர்வுகளிலும் தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண்கள் உண்டு.

கவனம், மெயின் தேர்வு கடினமாக இருக்கும்.

சிவில் சர்வீஸ் தேர்வுகள் அளவுக்கு ஆழமில்லை, ஆனால் ஏறத்தாழ அந்த அகலம் இருக்கும்.
ஆங்கிலத்தில் விரிவாக விடையளிக்கும் தேர்வும் இடம்பெற்றிருக்கும். கட்டுரை எழுதுதல், கடிதம் எழுதுதல் ஆகிய 2 கேள்விகளுக்கு 25 மதிப்பெண். இதற்கு தனியாக அரை மணி நேரம்.

மெயின் தேர்வில் மொத்தம் 4 பிரிவுகள்:-

1. நுண்ணறிவு, காரணமறிதல் கணினி அறிவு
2. பொருளாதாரம், வங்கியியல்
3. பொது ஆங்கிலம்
4. டேட்டா அனலசிஸ், இன்டர்பிரட்டேஷன்
ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்க வேண்டும்.

மெயின் தேர்ந்து விட்டால் நேர்முகத் தேர்வு.

மெயின் தேர்வு + நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வங்கி அதிகாரிகள் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

நேர்முகத் தேர்வு

நம்மை பற்றி சொல்வதில் இருந்தே 90% கேள்விகள் ஆரம்பிக்கும். நிதானமாக, யோசித்து பதிலளிக்க வேண்டும். சமயோசிதம், உடை, பேச்சில் தெளிவு என்று தனித்தனியே மதிப்பெண்கள்.
கண்ணாடி, மொபைல் முன்பு அமர்ந்து, புன்முறுவலுடன் பேசி, நேர்முகத் தேர்வுக்கு பயிற்சி பெறுங்கள்.

முக்கியமான விஷயம்

தேர்வு விண்ணப்பத்தில் சான்றிதழில் உள்ளப்படி பெயர், பிறந்த நாள், இதர விவரங்களை குறிப்பிடுங்கள். இதில் தவறு செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் போது நிராகரிக்க பட்டவர்கள் நிறைய பேர்.

முப்பது வயது வரை தேர்வு எழுதலாம். ஆனால் பட்டபடிப்பின் இரண்டாம் வருடத்திலிருந்து தேர்வுக்குத் தயாராகத் தொடங்குங்கள்.

* பலர் தவறுவது ஆங்கிலத்தில். கிட்டத்தட்ட 60% பேர் இதிலேயே பெயில் ஆகிவிடுகிறார்கள்.
* தேர்வு நாள் அறிவித்த பின்னர் அல்ல, தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கவேண்டும். முழு அளவில் நேரத்தை ஒதுக்கினால் ஆறு மாதத்தில் வெற்றி பெற்று விடலாம்.
* ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமாவது பயிற்சி வேண்டும். நண்பர்களை குறையுங்கள்.
* டிஎன்பிஎஸ்சி, விஏஓ தேர்வு என்று சிதறாமல் வங்கி தேர்வுகளுக்கு மட்டும் முழு கவனம் செலுத்துங்கள் .
* வங்கித் தேர்வுகளுக்கான வாய்ப்புகள், தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அடுத்தடுத்த தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.
* மாதிரித் தேர்வுகள் பெரிய அளவில் உதவும். 50 மாதிரித் தேர்வுகளாவது பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
* அட்டவணை தயாரித்து அதன்படி படிக்க வேண்டும்.

* ஆறு மாதத்திற்கு வாட்ஸ்அப், பேஸ்புக், டிவி, சினிமா, கோரா எல்லாவற்றையும் தவிர்க்கவும். தேர்வில் மட்டும் முழு கவனத்தையும் நிறுத்தவும்.

மாதிரி தேர்வுகளில் 100க்கு 90% வாங்க ஆரம்பித்தால் வங்கித் தேர்வுக்கு நீங்கள் தயார்.
பணி கிடைக்க நல் வாழ்த்துக்கள்.

(எதற்கும் அப்ளை பண்ணுவதற்கு முன்னர் இந்த இரண்டு பதில்களையும் படித்து விடுங்கள்… 👇🏿 )

வங்கி பணிகளில் சந்திக்க கூடிய சவால்கள் என்னென்ன?

ஒன்றை அழுத்தமாக சொல்ல வேண்டுமானால், வங்கி பணி என்பது அதன் முதல் நிலை பணியாளர்களில் இருந்து அதன் இயக்குநர்கள் குழு வரை (Clerical cadre to Board of Directors) பணியில் எச்சரிக்கையுடனும், ஆபத்தை முன்னறியும் திறனுடனும், நேர்மையுடனும், அழுத்தத்துக்கு பணியாத துணிவுடனும் இயங்க தேவையுள்ள பணி.
பண நடவடிக்கை மேற்கொள்ளும் (பண நீக்க நடவடிக்கை அல்ல!) எல்லா அலுவலகங்களும் அப்பிடித்தான் இயங்க வேண்டும் என்றாலும், வங்கி கடனளிக்கும் பணம், அதன் டெபாசிட் தாரர்களிடம் இருந்து திரட்டியது என்ற ஒரு அம்சம், மற்ற நிறுவனங்களில் இருந்து வங்கியின் செயல்பாடுகளை தனித்து நிறுத்துகிறது.
ஒருவங்கி அதிகாரி அவர் பணி ஒய்வு பெறுவதற்குள் பல்லாயிரம் கோடி பண நடவடிக்கைகளை (Financial Transactions) செய்திருப்பார் - அவற்றில் ஒன்று தவறானாலும் கடும் நடவடிக்கைக்கு ஆளாகி தலைகுனிவுக்கும் சம்பள குறைப்புக்குக்கும் உள்ளாகவேண்டிவரும். வங்கி அதிகாரிகள் எப்பவும் சீரியஸ் லுக் தருகிறார்கள் என்றால், இந்த பணி சார்ந்த மன அழுத்தம் தான் காரணம்.

இதையும் தாண்டி வாடிக்கையாளர்களையும் சக ஊழியர்களையும் பார்த்து புன்னகை செய்ய கற்று கொண்ட வங்கி அதிகாரிகள் அலுவலகத்தில் வெற்றியுடன் வலம் வருகிறார்கள் ! மனதில் உள்ளதை காட்டாமல், உதட்டில் புன்னகை தவழ இல்லம் செல்லும் இவர்கள், இல்வாழ்க்கையிலும் தம் மனைவியிரிடம் பெரும் நன் மதிப்பு பெறுவார்கள் என்பதை சொல்ல வேண்டியது இல்லை ! (இதை நேரம் வரும்போது தனியாக எழுதுகிறேன்! )

தவிர, இந்த பணிக்கே உரிய சில தனி பண்புகள்:
1. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பணியிட மாற்றம்
2. பல மொழிகள் கற்க நேரும்
3. பிள்ளைகளின் படிப்பு மாறுதல்களுக்கு ஆக வேண்டியுள்ளது
4. அல்லது குடும்பத்தை பிரிந்து தனித்து இருக்க வேண்டும்
5. பணியில் டீம் சரியாக அமையாவிட்டால், அவ்வளவுதான் எல்லாம் போச்சு
6. பத்து மணிநேரத்துக்கு குறையாமல் வேலை செய்ய வேண்டும்.
7. பல்வேறு தேர்வுகள், படிப்புகளை முடிக்க வேண்டும் - பணிக்காலம் முடியும் வரை!
8. உடலை பேணாவிட்டால், பெரும் தொல்லைகள் நேரும் - BP இல்லாத வங்கி அதிகாரியை நீங்கள் பார்ப்பது அரிது !
9. மிக மிக முக்கியமானது : இந்த பணியில் இருப்பவர் பிரச்சினைகள் எதுவும் இன்றி பணி ஓய்வு பெற வேண்டுமேயென்றால் பிரச்சினைக்குரிய (உறவினர், நண்பர்கள் , உடன்பணிபுரிவோர், மேலதிகாரிகள்) நபர்களிடமிருந்து விலகுவதை தவிர வேறு வழியில்லை. என் பணி வேறு: என் நட்பு, சுற்றம் வேறு என்று இயங்கினால் இந்த பணியில் நிலைக்க முடியாது.
“பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது”.(811)

[ உறவு பாராட்டுவார் என்றாலும் பண்பிலார் நட்பை வளர்காமல் விலகிவிடுதலே இனிமையானது ]
வங்கி பணி சிலர் தொல்லை நிறைந்த பணி என்றே கருதுவார்கள் - என்னை பொறுத்தவரை அப்படி நினைப்பதில்லை. இது வரை அண்டை மாநிலம் உட்பட 13 பணியிட மாறுதல்கள் பெற்றுள்ளேன். மனைவியும் மகளும் மலையாள மொழியில் தெளிவாக பேசுவார்கள். (எனக்கு "மலையாளம் கொறச்சி அறியும்"). மகள் 7 பள்ளிகள், 3 கல்லூரிகளில் படித்துள்ளார்! நானும் பல உயரிய பட்டய படிப்புகளை நல்ல முறையில் முடிக்க முடிந்தது. நாங்கள் அனைவரும் குறுகிய காலத்தில் அண்டை அயலாரிடம் (உதட்டில் புன்னகை தவழ) பழக கற்றுகொண்டடோம் . முக்கியமானது - எந்த பணியிடமும் நிரந்திரமில்லை; எனவே எந்த தொல்லைகளும் தற்காலிகமானதே!
வங்கிப்பணியில் சேருங்கள் - ஒரு மூன்று வருடங்களில் ஒரு சிறிய ஊரை உங்களால் மாற்றம் செய்ய முடியும். கண்ணெதிரே பலர் முன்னேற்றம் காண்பதை உணர்வீர்கள். ஊரே உங்களை மதிக்கும். பணி மாற்றம் செய்ய பட்ட பின்னரும் பாசத்துடன் நினைவு கூறுவார்கள். மாவட்ட துணை ஆட்சியருக்கு நிகரான பணியிது!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளைவிட வங்கித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கடினம் என்று சொல்லப்படக் காரணங்கள் என்ன?

ஒரு தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமா, எளிதா என்பது, தேர்வு எழுதுபவர்கள் எத்தனை பேர், காலியிடங்கள் எத்தனை, நமது தயார் நிலை என்ன (preparation) - இந்த மூன்றையும் பொறுத்தது.
எந்த தேர்வானாலும் வெற்றி பெறுவது ரொம்ப எளிது. இரண்டே விஷயம் தான். பொறுங்கள், சொல்லுகிறேன்.

சுருக்கமாக இரண்டு தேர்வுகளையும் பற்றி.
டி.என்.பி.எஸ்.சி: தமிழ்நாடு பொது சேவை ஆணையம் என்பது தமிழக அரசின் ஒரு துறை. இது 1929 இல் தமிழகத்தில் பொது சேவை பணியாளர்களை தேர்ந்தெடுக்க ஏற்படுத்தப்பட்ட "மதராஸ் சேவை ஆணையத்தின்" வாரிசு.
மதராஸ் சேவை ஆணையம் இந்தியாவின் முதல் மாகாண பொது சேவை ஆணையம். அப்போதைய மதராஸ் சட்டமன்றத்தின் சட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வந்தது. எல்லாருக்கும் பாட்டன்!
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் இந்திய அளவில் புகழ் பெற்றவை. அனைத்து டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக இருக்கும். (குழு I முதல் IV வரை)
வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளால் 12.08.2012 அன்று நடைபெற்ற குழு II தேர்வு முதல்முறையாக ரத்து செய்ய பட்டது. இந்த வருட டி.என்.பி.எஸ்.சி தேர்வு குளறுபடிகள் உலகறிந்தவை. சில அகில இந்திய புரோக்கர்கள் பணத்தாட்களை பெற்றுக்கொண்டு வினாத் தாட்களை கடத்தியதால், டிஎன்பிஎஸ்சி-யின் பெயரே பெரும் சேதமாகிவிட்டது.
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வெற்றிபெறுவது பொதுவாக கடினம். போதிய நிதியிருக்கும் பட்சத்தில் இப்போதெல்லாம் கவலையில்லை.
வங்கிப்பணி எப்பொழுதுமே வங்கிப்பணி பலரும் விரும்பும் பணிதான். சில சவால்கள், பல சலுகைகள். கவனமாக செய்தால் வங்கி வேலை மனதுக்கு நிறைவானது. அதைப்பற்றி அறிய இங்கே …
ஐ.பி.பி.எஸ் (IBPS) வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS-Institute of Banking Personnel Selection), பொதுத்துறை வங்கிகளில் அலுவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்வுகளை நடத்துகிறது. ஐபிபிஎஸ் (IBPS) ஒரு தன்னாட்சி நிறுவனம்.
நிர்வாக குழுவில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI), இந்திய நிதி அமைச்சகம் (MOF), மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (Mumbai-IIT), இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனம் (IIBF), தேசிய வங்கி மேலாண்மை நிறுவனம் (NIBM), இந்திய வங்கிகளின் சங்கம் (IBA), பொதுத்துறை வங்கிகள், என்று பல அரசு நிறுவனங்களின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு நுழைவு தேர்வுகள் உட்பட பல சேவைகளை, ஐ.பி.பி.எஸ் தருகிறது.
வங்கி வேலைகளுக்கு விண்ணப்பிக்க, ஐ.பி.பி.எஸ் தேர்வின் தேர்ச்சி சான்றிதழ் ஒரு அடிப்படை தேவை. அதாவது ஐ.பி.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே நீங்கள் விண்ணப்பிக்கவே முடியும்.
இது அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஒரு போட்டி தேர்வு. 2018–2019 வருடத்தில் மட்டும் ஒரு கோடி தேர்வர்கள் ஐ.பி.பி.எஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்தனர்!
வருடங்கள் போக போக, தேவை இருக்கும் இடங்களுக்கும், தேர்வு எழுதுபவர்களுக்கும் உள்ள விகிதம் அதிகமானதால் இது ஒரு கடினமான தேர்வு என்று பெயர் பெற்றுவிட்டது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் 1 முதல் 4 வரை தொகுப்புகள் (Groups) உள்ளது போல, ஐபிபிஎஸ் தேர்வுகளில் பல நிலை வங்கி வேலைகளுக்கும் தனித்தனி தேர்வுகள் உள்ளன. நீங்கள் ஒரே சமயத்தில் ஒன்று அல்லது பல தேர்வுகளை தேர்ந்தெடுத்து எழுதலாம்.
அனைத்து போட்டிதேர்வுகள் போலவே, இதிலும் குறைந்தபட்ச cut off மதிப்பெண்கள், எதிர்மறை மதிப்பெண்கள் எல்லாம் உண்டு. இந்த தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனங்களின் மொத்த ஆண்டு வர்த்தகம் மட்டுமே பல கோடிகளில்!

கல்லூரி தேர்வுகளில் நான் கேவலமான மதிப்பெண்களை பெற்றவன். பின்னாட்களில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராவது எப்படி என்ற சூட்சமத்தை தெரிந்து கொண்டு சில உலகத்தரமான தேர்வுகளையே இடதுகையால் தட்டியெறிந்திருக்கிறேன். எல்லாராலும் இது முடியும். நம்புங்கள்.

தேர்வுகளை எப்படி எழுதுவது ?

* பயிற்சி நிறுவனங்களில் சேராமல், நாமே படித்து (Self Study) எழுதுவது நல்லது. எளியது. முடியும்.
* அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களை மட்டுமே வாங்கவும்.
* கிடைத்த எல்லாப் புத்தகத்தையும் வாங்கி புரட்டிக் கொண்டிருக்காதீர்கள். தவறான தகவல்களை படித்து குழம்பி போவீர்கள்.
* உங்களுக்கு எதில் அதிக தன்னம்பிக்கை இருக்கிறதோ, அந்த பாடத்திலிருந்து தொடங்குங்கள். தேர்வுக்கான ஆயுத்தத்தில் உங்கள் நம்பிக்கை சரேலென்று உயரும்.
* தேர்வுகளின் எண்ணிக்கை, மொத்த பாடங்கள், தேர்வு நாள், இந்த மூன்றையும் கணக்கிட்டு ஒரு துல்லியமான கால அட்டவணையை நீங்கள் போடவேண்டும்.
கால அட்டவணைதான் வெற்றிக்கு அடிப்படை. கால அட்டவணை, இல்லாமல் எந்த போட்டித் தேர்விலும் வெற்றிபெற முடியாது.
* அட்டவணையை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.
* ஒருநாள் அட்டவணையில் குறித்த பாடத்தை எதாவது காரணத்தால் படிக்க முடியாமல் போனால், அடுத்த நாள் இரண்டு நாள் பாடங்களை சேர்த்து படிக்க வேண்டும்.

தேர்வுக்கு முதல் நாள் கணக்கெடுத்தால், பாட புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் குறைந்தது நான்கு முறை நீங்கள் படித்திருக்க வேண்டும். அதற்கேற்றது போல் உங்கள் அட்டவணையை தயாரிக்கவேண்டும்.

ஏன் சுயமாக படிப்பது நல்லது?

* படிக்கும் போது பல சந்தேகங்களை எதிர்கொண்டு, அவற்றை போக்கிக்கொள்ள நீங்களே, பதில்களை தேட ஆரம்பிப்பீர்கள்.
* தொடர்புடைய அனைத்து சந்தேகங்களையும் இந்த நேரத்தில் போக்கிக்கொள்ளமுடியும்.
* சுயபடிப்பு, உங்கள் சவால் ஏற்றுக்கொள்ளும் திறனை உயர்த்துகிறது, உங்கள் சிந்தனை திறனை கூட்டுகிறது.
* ஐ.க்யூவை (IQ test) சோதிக்கும் கேள்விகளை பயிற்சி நிறுவனத்தில் சரியாக சொல்லித்தரமாட்டார்கள். இது சுயபடிப்பின் மூலமே கற்றுக்கொள்ள முடியும் .
* அங்கே வழங்கப்படும் எல்லோருக்கும் பொதுவான குறிப்புகளை விட உங்களுக்காக, நீங்களே தயாரிக்கும் குறிப்புகள் சிறந்தவை. குறிப்புகள் என்றால் பிட்டுகள் இல்லை!
* தகவல்களை தேடித்தேடி ஒருகுறிப்பை தயாரிக்கும்போது், பலமுறை படித்த பயனை அடையமுடியும்
சுய படிப்புக்கான சில குறிப்புகள் -
* படிப்பில் மட்டுமே உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்,
* ஒவ்வொரு நாளும் புதிதாக, முழுமையாக பயிற்சி செய்யுங்கள்.
* படிப்படியாக தலைப்புகளைத் தேர்ந்தெடுங்கள்.
* ஆங்கில ஹிந்து நாளிதழை தினமும் படிக்கவேண்டும்
* நூலகங்களில் சேருங்கள். நூலகம், படிப்பதற்கான ஒரு நல்ல சூழலையும், நேர்மறை அதிர்வுகளையும் தருகிறது. உங்கள் உள் சக்தி அதிகரிக்கும். மேலும் மேலும் படிக்க அதிக ஆர்வம், கவனம் வரும்.
* குழுக்களாக படிப்பதும் நல்லதுதான். அது சேர்பவர்களை பொறுத்தது. சந்தேகங்களை பரிமாறிக்கொண்டு தீர்வுகளைக் காணலாம். அறிவு பரிமாற்றம், முக்கிய தகவல்களைப் பெறுவது முடியலாம்.
* குழு சரியாக இல்லையென்றால் விலகிவிடவும்.
* இணையத்தில் ஒவ்வொரு பாடத்திலும் நிறைய பயிற்சிகள் உள்ளன. எல்லா பயிற்சிகளையும் பின்பற்ற முயற்சிக்காதீர்கள். உங்கள் ஆற்றலையும் விலைமதிப்பற்ற நேரத்தையும் அது வீணடித்துவிடும்.
* உங்கள் கால அட்டவணையில் இருந்து மாற வேண்டாம். படிப்புகளை் ஒரு நாள் தவிர்ப்பதுகூட, நீங்கள் அந்த நாள் வரை நீங்கள் செய்த முழு தயாரிப்பையும் கெடுத்துவிடும்.
* மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இதில் எச்சரிக்கையாக இருங்கள்!
* கேள்விகளைப் பற்றி ஒரு தெளிவு கிடைக்க முந்தைய மூன்று ஆண்டு கேள்வித்தாள்களை ஆழ்ந்து படியுங்கள்.
* மாதிரி கேள்வித்தாள்களை தீர்க்கும்போது உங்கள் நேரத்தையும் நிர்வகிக்க மறக்காதீர்கள்; இது முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது.
மிக முக்கியமானது. தேர்வுக்கு முதல் நாள் கணக்கெடுத்தால், பாட புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் குறைந்தது நான்கு முறை நீங்கள் படித்திருக்க வேண்டும்.
பயிற்சியின் இறுதிகட்டங்களில் உங்களுக்கு எந்த பாடத்திலும் சந்தேகமே இருக்கக் கூடாது.

தேர்வு மையத்தில்
* ஒரு மணி நேரத்துக்கு முன்னேரே தேர்வு மையத்துக்கு போய்விடுங்கள்
* தேவைக்கு அதிகமான பென்சில்கள், அழிப்பான்களை எடுத்துச்செல்லுங்கள்.
* தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு போகவேண்டாம்.
* அந்த ஒருமணி நேரமும், படிப்பதையும் பரபரப்பு அடைவதையும் தவிருங்கள். அமைதியாய், அடுத்தவரை கலவரப்படுத்தாமல் இருங்கள்.
* தேர்வு எழுத மணி அடித்த உடன் விடை தர ஆரம்பிக்க வேண்டும்
* முழு நம்பிக்கையுடன் பதில் அளிக்க கூடிய கேள்விகளை முதலில் முடியுங்கள்.
* இது உங்கள் நேரத்தை நிறைய மிச்சப்படுத்தும். தேர்வுக்கு தேவையான பதில்களை நேரத்திற்குள் முடிக்க இது முக்கியம்.
* நம்பிக்கை இல்லாத கேள்விகளை முதலில் முயற்சிப்பதை தவிர்க்கவும்.
* கடினமான, சரியாக பதில் தெரியாத, அதிகம் நேரம் எடுக்கும் கேள்விகளை முடிவில் முயற்சிக்கவும்.
* எதிர்மறை மதிப்பெண்கள் உண்டென்பதால், எத்தனை கேள்விகளுக்கு ரிஸ்க் எடுத்து பதில் அளிப்பது என்ற கணக்கு, தேர்வுக்கு முன்னேரே உங்களுக்கு தெரியும். அந்த கணக்கை மீறிவிடாதீர்கள்.
போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது ரொம்ப எளிது. இரண்டே விஷயம் தான்.
1. ஒரு அட்டவணையை போடுங்கள். முழுவதுமாக பின்பற்றுங்கள்.
3. பாட புத்தகத்தின் எல்லா பக்கங்களையும், நான்கு முறை நன்றாக படியுங்கள்.
4. 
அவ்வளவுதான். இடதுகையால் தட்டியெறிந்து விடலாம்.
தேர்வு நாளுக்கு முதல் நாளே, நாம் தேர்வாகி விடுவோம் என்பது உங்களுக்கே தெரியும்.

Credits : Google
https://www.ibps.in/wp-content/uploads/FAQ_Help-Desk_21_09_2016.pdf

http://www.tnpsc.gov.in/recruitment-faq.pdf

Institute of Banking Personnel Selection - Wikipedia

You are being redirected...

83.4% of candidates appear for TNPSC Group IV examination

Over 4.50 lakh candidates appear for Group II exam

நன்றி: B.K. மதிவாணன்
தகவல் தொழில்நுட்ப தனிக்கையாளர்
(தமிழ் குவரா வழியாக)

தன்னம்பிக்கை டிரிக்ஸ்!


தன்னம்பிக்கை டிரிக்ஸ்!

நிறைய பேர்  "தாழ்வுமனப்பான்மையாகவே இருக்கிறது. எதிர்மறையான  எண்ணங்களாக தோன்றுகிறது,  எதையும் தைரியமாக எதிர்கொள்ள முடியவில்லை" என கவுன்சலிங்  எடுத்துக் கொள்வது தற்போது, அதிகரித்து வருவதாக ஆய்வுகள்  கூறுகின்றனர்.  

இந்நிலையில் இருந்து வெளியே வந்து  எப்படி இயற்கையாகவே தன்னம்பிக்கையை  வளர்த்துக் கொள்வது என பகிர்ந்து கொள்கிறார்  நேச்ரோபதி மருத்துவர் என்.ராதிகா.

1. தவறாக தோன்றுவதை செய்யாதீர்கள்!

உங்களுக்கு ஒரு விஷயம் தப்பு  என்று  தோன்றினால், அதனால் உங்களுக்கு  பிரச்னை வரும் என்று தோன்றினால்  அதை எதற்காகவும், யாருக்காகவும் ஒருபோதும் செய்யாதீர்கள்.  

2. சொல்ல வேண்டியதைத் தெளிவாகச்  சொல்லுங்கள். 

எதையாவது சொல்ல வேண்டும் என்று  நினைத்தால் அதை தெளிவாக  சொல்லுங்கள். இதை  சொல்லுவதனால், மற்றவர்கள் என்ன  நினைப்பார்களோ என்று தயங்காதீர்கள். நீங்கள்  சொல்ல வேண்டியதை பொறுமையாகவும்,  தெளிவாகவும் சொல்லும்போது,  என்ன  சொல்ல நினைக்கிறீர்களோ அதை  மற்றவர்கள் அழகாக புரிந்து கொள்வார்கள். சொல்ல நினைத்ததை  சொல்லிவிட்டால்  மனதில் அழுத்திக் கொண்டிருக்கும் விஷயமும்  சரியாகிவிடும்.

3. அடுத்தவர்களுக்காக வாழாதீர்கள்

நீ நீயாக வாழ கற்றுக் கொள். சிலர் உன்னை விரும்புவார். சிலர் உன்னை வெறுப்பார், கவலைப் படாதே. நம்மை சுற்றி இருப்பவர்களையும், நம்மை  சார்ந்திருப்பவர்களையும் எப்போதும்  எல்லா நேரத்திலுமே திருப்தி செய்து விட முடியாது. அதனால், உங்களுக்கு சரி என்று படுவதை தயங்காமல்  செய்யுங்கள். மனதறிந்து யாருக்கும் கெடுதல் நினைக்காத எண்ணம்  இருந்தால் போதும். உங்களுக்கானது  உங்களிடம்  வந்து சேரும். அடுத்தவர்களை குறைசொல்வதோ, அடுத்தவர்களை திருப்திபடுத்துவதாக  நினைத்து உங்களை நீங்களே  வருத்திக் கொள்வதோ கூடாது. 

4. உள்ளுணர்வுக்கு மதிப்பளியுங்கள்

உங்கள் உள்ளுணர்வு எது நல்லது என்று சொல்கிறதோ அதை  செய்யுங்கள்.  உங்கள் மனசுக்கு  சரியாக  படவில்லை, இது சரியாக  வராது என்று  தோன்றினால்   அதை ஒருபோதும் செய்யாதீர்கள்.  ஏனென்றால்  உங்களது  உள்ளுணர்வு  ஒரு போதும்  உங்களிடம் பொய் சொல்லாது. நல்லது, கெட்டது எது  என்பதை நிச்சயம்  உணர்த்தும் 

5. தரகுறைவாகப் பேசாதீர்கள்

உங்களை நீங்களே தவறாக   பேசுவதோ, குறைத்து மதிப்பிடுவதோ, தாழ்வாக பேசுவதோ கூடாது. கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொருவருமே ஒரு தனித்துவம்  வாய்ந்தவர்கள்தான். எல்லோரிடமும்  தனித்துவமான குணங்கள்  நிச்சயம் இருக்கும். அதை உணராமல்தான்  நிறையபேர் கஷ்டப்படுகிறார்கள்.  அதனால் உங்களைப்பற்றி நீங்களே  தவறாக ஒருபோதும் பேசாதீர்கள்.  அப்படி பேசும்போது உங்களிடம்  உள்ள பாஸிட்டிவ்வான விஷயங்களை நீங்களே மறைத்துவிடுகிறீர்கள்.  

6. கனவுகளை தொலைக்காதீர்கள்

உங்களுக்கு என்று  இருக்கும் குறிக்கோள்கள், கனவுகளை  எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்.  அதிலிருந்து எப்போதும் பின் வாங்காதீர்கள். இன்று இல்லை என்றாலும், நாளை அது நிச்சயம்  நடக்கும் என்று  நம்புங்கள். கனவுகளுக்கான முயற்சியை  படிப்படியாக வளர்த்துக் கொள்ளுங்கள்.  நிச்சயம் அது ஒருநாளில் நிறைவேறும்.

7. “நோ” சொல்லத் தயங்காதீர்கள்: 

உங்களுக்கு  பிடிக்காத விஷயமாக  இருந்தால்,  வேண்டாம், இது ஒத்துவராது  என்று  தோன்றினால்   தயங்காமல்  நோ சொல்லிவிடுங்கள்.  சொன்னால்  என்ன நினைப்பார்களோ  என்று  தயங்கி  அதில்  சிக்கி கொண்டு வெளி வர முடியாமல்  வருந்தாதீர்கள்.  

8 . “ஆம்” என்பதை  தைரியமாகச்   சொல்லுங்கள்

உங்களுக்கு பிடித்த விஷயங்களுக்காக  ஆம்  என்று  சொல்ல  ஒருபோதும்  பயப்படாதீர்கள். தாழ்வு  மானப்பான்மையாலோ அல்லது பயத்தாலோ  யாருக்காகவும் வேண்டாம் என்று  கூறாதீர்கள். உங்களை  நோக்கி  வரும் நல்ல  வாய்ப்புகளை  எதற்காகவும்  தவற விடாதீர்கள்.  

9. பாஸிட்டிவ்வான  விஷயங்களை  எண்ணுங்கள்

எப்போதும்  சோர்ந்து போய்  இருக்காமல்  உங்களை  நீங்களே  உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.  உங்கள்  மீது  அனுதாபத்தையோ, பச்சாதாபத்தையோ  எதிர்பார்க்காதீர்கள்.  எதுவாக இருந்தாலும்,  உங்களால் முடியும் என்று  நம்புங்கள். 

10. முடியாத  விஷயங்களைத்  தவிர்த்துவிடுங்கள்

உங்களால் கட்டுப்படுத்த முடியாத  விஷயமாக  இருந்தால்  அதை  விட்டுவிடுங்கள், அது  எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும்  சரி. போனால் போகட்டும் என்று விட்டுவிட்டு அடுத்து செய்ய வேண்டியதை  பற்றி  சிந்தியுங்கள்.  உதட்டளவில்  சிரித்து பேசுபவர்களிடம் இருந்து  விலகி இருங்கள்.  

10. அன்பு செலுத்துங்கள்

பெற்றோர்,  உடன் பிறந்தோர்,  உறவினர்,  நண்பர்கள்  என   உங்களை  சுற்றி  இருப்பவர்கள்  அனைவரிடத்திலும்  அன்பு செலுத்துங்கள். அன்பு மட்டும் தான்  நாம்  செலுத்த செலுத்த  நமக்கு  நல்ல விஷயங்களை  பெருக்கிக் கொண்டே இருக்கும்.நமது தாழ்வு மனப்பான்மையும்,  பயமும்  நமது முன்னேற்றதையும்  தடை  செய்கின்றன. எனவே,  மனதைரியம் கொடுத்து  முன்னேறிச் செல்வதில்  அக்கறையாய்  இருங்கள். வெற்றி நிச்சயம்.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

நன்றி: குங்குமம் டாக்டர்

கலை பட்டதாரிகளுக்கு தேடி வரும் வேலைவாய்ப்புகள்!


கலை பட்டதாரிகளுக்கு தேடி வரும் வேலைவாய்ப்புகள்!

உயர் படிப்புகளில் சேரும் மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.

பிளஸ்-2 முடித்தவுடன் கண்டிப்பாக உயர்கல்விக்கு செல்லவேண்டும் என்ற உணர்வு மாணவர்களிடம் இப்போது மேலோங்கி இருக்கிறது. அரசு பள்ளிகளில் படித்துவிட்டு உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமும், மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டம் மூலமும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வந்த பிறகு உயர் படிப்புகளில் சேருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது. இந்தியாவிலேயே பிளஸ்-2 படித்தவுடன்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை என்ஜினீயரிங், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற தொழிற்படிப்புகளே மாணவர்களின் முதல் தேர்வாக இருந்தது. இதற்கு காரணம் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கைதான். ஆனால் இந்த ஆண்டு இந்த நிலை மாறிவிட்டது. தொழிற்படிப்புகளில் சேருவதற்கான ஆர்வத்துக்கு இணையாக, கலை கல்லூரிகளில் சேருவதற்கும் ஆர்வம் அதிகரித்துவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை கல்லூரிகளில் மட்டும் ஒரு லட்சத்து 26 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. இதுபோல 140-க்கும் அதிகமான அரசு உதவிபெறும் கல்லூரிகள், 650-க்கும் மேற்பட்ட சுயநிதி கலை கல்லூரிகள் இருக்கின்றன. மாணவர் சேர்க்கை முடிந்தபிறகும் இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் படிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்க ஆணை பிறப்பித்ததைத்தொடர்ந்து அந்த கல்லூரிகளும் தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது.

எனினும் இன்னும் அதிகமான மாணவர்கள் சேர கல்லூரிகளில் இடம் இல்லை என்பதை உயர் கல்வித்துறை செயலாளர் பி.சங்கர், முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றதைத்தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீதம், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15 சதவீதம் மற்றும் தனியார் கல்லூரிகளில் 10 சதவீத இடங்களை உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் கல்லூரிகளில் சேர்ந்து பட்டப்படிப்பு படிக்கவேண்டும் என்ற அனைத்து மாணவர்களின் கனவும் நனவாகப்போகிறது. இந்த அளவுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் படையெடுப்பதற்கு பல்கலைக்கழக தேர்வில் சிறந்து விளங்கி அதிக மதிப்பெண்கள் பெறும் கலை பட்டதாரிகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைப்பதுதான் காரணம்.

ஆங்கில புலமை இருக்கும் மாணவர்களுக்கு ஐ.டி. கம்பெனிகளில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதுபோல பல தனியார் நிறுவனங்கள் நல்ல அறிவாற்றல் மிகுந்த மாணவர்களை ‘கேம்பஸ் இண்டர்வியூ’ மூலம் தேர்ந்தெடுத்து வேலையில் அமர்த்திவிடுகிறார்கள். வேதியியல் மற்றும் இயற்பியல் படித்து சிறப்பாக தேர்ச்சி பெறும் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு மருந்து கம்பெனிகளிலும், விண்வெளி ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களிலும், கணிதம் படிக்கும் மாணவர்களுக்கு பல நிறுவனங்களிலும், வணிகவியல் படித்த மாணவர்களுக்கு அதுதொடர்பான நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதுதவிர இப்போது மத்திய, மாநில அரசுகளிலும் நிறைய வேலைகளுக்கு தேர்வு நடக்கிறது. மொத்தத்தில் கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் வேலைவாய்ப்புகள் அவர்களுக்காக காத்து இருக்கும்.

2026-ம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் (JEE Main 2026) முதற்கட்ட தேர்வு நாளை


2026-ம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் (JEE Main 2026) முதற்கட்ட தேர்வு நாளை (ஜன. 21) துவக்கம். 

2026-ம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் (JEE Main 2026) 2 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

மெயின் தேர்வு மட்டும் 2 கட்டமாக நடத்தப்படும். ஜனவரி மாதம் ஒரு கட்டத் தேர்வும், ஏப்ரல் மாதம் இரண்டாம் கட்டத் தேர்வு நடத்தப்படும். இதில் இரண்டு கட்டத் தேர்வை இணைத்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்

ஜேஇஇ (JEE) எனப்படும் ‌ ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் என்ற இந்த தேர்வானது, நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள B.E., B.Tech. போன்ற படிப்பில் சேருவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. 

இது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் என்டிஏ (NTA) எனப்படும் தேசிய தேர்வு முகமை என்ற ஒரு அமைப்பால் நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். 

இந்த என்டிஏ (National Testing Agency) என்பது தேசிய அளவிலான பொறியியல், மருத்துவம், பார்மசி, விவசாயம் ஆகிய படிப்புகளுக்கான பல்வேறு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

ஜேஇஇ நுழைவுத்தேர்வு இதற்கு முன் சிபிஎஸ்சி-யால் நடத்தப்பட்டு வந்தது. தற்போது என்டிஏ என்ற அமைப்பு இத்தேர்வை நடத்துகிறது.

இந்த ஜேஇஇ என்பது தேசிய அளவிலான மத்திய அரசின் உயர் கல்வி நிறுவ பொறியியல் கல்லூரிகளில் என் ஐ டி (National Institute of Technology, previously it was known as Regional College of Engineering), என்ஐ ஐ டி, (National Institute of of information Technology), ஐஐடி (Indian Institute of Technology) மற்றும் மத்திய அரசு நிதிபெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் (Centrally funded Technical universities ) உள்ள பொறியியல் படிப்புக்கான சேர்க்கை நுழைவுத் தேர்வாகும்.

இது ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும்.

இந்தத் தேர்வு JEE Main தேர்வு மற்றும் JEE Advanced தேர்வு என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.

JEE தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

NIT, IIIT போன்றவற்றில் சேருவதற்கு JEE Main தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றால் போதும். ஆனால் IITயில் சேருவதற்கு JEE Main தேர்வு மற்றும் JEE Advanced தேர்வு இரண்டிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

முதல்முறை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி அடுத்த முறை ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதம் முதல் வாரத்தில் தேர்வு நடைபெறும். இவ்விரண்டிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் எது அதிகமோ அதை பயன்படுத்தி ஜேஇஇ அட்வான்ஸ்ட் எனப்படும் அடுத்த நிலைக்கு செல்லலாம்.

இந்த தேர்வு ஜேஇஇ முதல் நிலை மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ் என இரண்டு கட்டங்களாக நடைபெறும் ஜேஇஇ முதல்நிலை தேர்வில் வெற்றி பெறும் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் ஜேஇஇ அட்வான்ஸ்டு (JEE advanced) தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

இந்த JEE advancedல் வெற்றி பெறுபவர்கள் மட்டும் இந்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி (Indian Institute of Technology) எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பொறியியல் படிப்பை தொடர முடியும்.

JEE அட்வான்ஸ் தேர்வினை IIT மும்பை, IIT டெல்லி, IIT Guwahati, IIT கான்பூர், IIT கரக்பூர், IIT சென்னை, IIT ரூர்க்கி ஆகியவை கூட்டாக சேர்ந்து தேர்வினை நடத்துகிறது.

இந்த ஐஐடியில் நான்காண்டு, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பொறியியல் படிப்புகள், நான்காண்டு மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு தொழில்நுட்ப படிப்புகள் என மொத்தம் 106 வகையான பிரிவுகள் உள்ளன.

ஜேஇஇ எக்ஸாமினேஷன் இந்த மெயின் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய உயர்கல்வி நிறுவனங்களான என்ஐடி(NIT) (நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி,) மற்றும் என்ஐஐடி(NIIT) எனப்படும் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனங்களிலும் மற்றும் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் மத்திய அரசின் நிதி உதவியால் நடத்தப்படும் தொழிற்கல்வி நிறுவனங்களிலும் பொறியியல் படிப்பை மேற்கொள்ளலாம்.

இந்தக் கல்வி நிறுவனங்களில் நான்காண்டு பொறியில் படிப்பு அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த பொறியியல் படிப்பு அல்லது அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த பொறியியல் படிப்பை நாம் தொடரலாம். இதன் மூலம் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி உண்டு.

JEE Advanced இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் தேசிய உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி-யில் சேரமுடியும்.

இங்கு நான்கு ஆண்டு பொறியியல் படிப்பு மற்றும் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த பொறியியல் படிப்பு, மற்றும் நான்கு ஆண்டு தொழில்நுட்ப படிப்பு மற்றும் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப படிப்புகள் படிப்புகள் உள்ளன. 106 பிரிவுகளின்கீழ் இந்த பொறியியல் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி வழங்கப்படுகிறது.

இந்த படிப்புகள் அனைத்தும் வளாகத் தேர்வில் வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை அளிக்கும். இதில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கான உதவித் தொகையும் கிடைக்கும். பிற மேற்கத்திய நாடுகளில் இக்கல்வி நிறுவனங்களின் படிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

.

தேர்வு தேதிகள் அறிவிப்பு 
* முதல் கட்டத் தேர்வு 2026-ம் ஆண்டு ஜனவரி 21 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும். இதற்கான விண்ணப்பம் அக்டோபர் இறுதியில் தொடங்கி தற்போது முடிந்துவிட்டது.
*  இரண்டாம் கட்டத் தேர்வு 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும். இதற்கான விண்ணப்பம் ஜனவரி 2026 இறுதி வாரத்தில் தொடங்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?
ஜேஇஇ மெயின் தேர்வை எழுத உள்ள மாணவர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 31 முதல் விண்ணப்பம் தொடங்கிய நிலையில், நவம்பர் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையம் அமைந்துள்ள நகரம் குறித்த விவரம் ஜனவரி முதல் வாரம் வெளியாகும். அதனைத்தொடர்ந்து, அட்மிட் கார்டு வெளியிடப்படும். ஜனவரி 21 முதல் 30 வரை தேர்வு நடைபெறும். இதற்கான முடிவுகள் தோராயமாக பிப்ரவரி 12-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இத்தேர்வு மொத்தம் 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. தேர்விற்கான முழு விவரங்களை தகவல் அறிவிக்கையில் ( https://cdnbbsr.s3waas.gov.in/s3f8e59f4b2fe7c5705bf878bbd494ccdf/uploads/2025/11/202511021649722475.pdf ) அறிந்துகொள்ளலாம்.

ஜேஇஇ மெயின் தேர்வுகள்: ஐஐடி அல்லாமல் எந்தெந்த கல்லூரிகளில் படிக்கலாம்?


ஜேஇஇ மெயின் தேர்வுகள்: ஐஐடி அல்லாமல் எந்தெந்த கல்லூரிகளில் படிக்கலாம்?

ஜேஇஇ மெயின் தேர்வு குறிப்பாக ஐஐடியில் நுழைவதற்காகவே எழுதப்படுகிறது. ஜேஇஇ எழுதி தேர்வாகி, ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அதுவே பொறியியலுக்கான முதல் ரக கல்வி நிலையம் என்று கருதப்படும் ஐஐடியின் உள்ளே நுழையும் வழியாகும்.

இந்த ஆண்டு, நாட்டில் 12 லட்சத்துக்கும் மேலானவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வு எழுதினர். இதில் சுமார் 2.5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்களைக் (JEE Main exam score) கொண்டு இந்தியாவில் சுமார் 100 அரசு கல்வி நிலையங்களிலும் சேர முடியும். இவை தவிர பல்வேறு தனியார் கல்லூரிகளும் ஜேஇஇ மெயின் தேர்வுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். 

பொறியியல் படிப்பில் சேர வேண்டும் என்றால், ஜேஇஇ மெயின் தேர்வு எழுத வேண்டும், அதில் தேர்ச்சி பெற்று ஜேஇஇ அட்வான்ஸ்ட் எழுத வேண்டும், ஐஐடியில் சேர வேண்டும் என்ற நிலை கிடையாது. மாணவர்களுக்கு வேறு பல வாய்ப்புகள் உள்ளன.

ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு இந்தியாவில் உள்ள 30க்கும் மேற்பட்ட நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (NIT) 30க்கும் மேற்பட்ட இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (IIIT), சுமார் 40 அரசு நிதி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் (GFTI) சேர முடியும்.

தமிழ்நாட்டில் எங்கு விண்ணப்பிக்கலாம்?

ஜேஇஇ மெயின் மதிப்பெண்கள் கொண்டு தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் விண்ணபிக்கலாம். 

இந்த கல்லூரிகளில் ஜேஇஇ மெயின் மதிப்பெண்கள் தவிர 12ஆம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். இதில் முக்கியமானது என்னவென்றால், எந்தக் கல்லூரியில் எப்போது விண்ணப்பம் வழங்கப்படுகிறது என்பதைக் கவனித்து குறித்த நேரத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த கல்வி நிறுவனங்களுக்கு சேர்க்கை அடிப்படை ஜேஇஇ மெயின் என்ற பொதுத் தேர்வு என்றாலும், ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களும் பெற்றோர்களும் கோச்சிங் வகுப்புகளுக்கு செலவு செய்யும் அளவு விண்ணப்பிக்க செலவு செய்வதில்லை,”

திருச்சியில் இருக்கும் என்ஐடி கல்லூரி, இந்தியாவில் உள்ள சிறந்த என்ஐடி கல்லூரிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கல்லூரியில் பிஇ மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்கள் போதுமானது. இதே போன்று என்ஐடி கர்நாடகா, என்ஐடி ரூர்கேலா, என்ஐடி, வாரங்கல், என்ஐடி காலிகட் உள்ளிட்ட பிற என்ஐடி கல்லூரிகளில் சேரவும் ஜேஇஇ மெயின் மதிப்பெண்கள் போதுமானது. வேறு நுழைவுத் தேர்வுகள் கிடையாது.

இந்தக் கல்லூரிகள் தவிர, அரசு நிதி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (GFTI) நாட்டில் பல உள்ளன. இந்த வகை கல்லூரிகளில் தமிழ்நாட்டில் பிரபலமானது காஞ்சிபுரத்தில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, டிசைன் அண்ட் மேனுஃபாக்சரிங் (IITDM). இந்தக் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கணினி அறிவியல் படிப்பு கற்றுத் தரப்படுகிறது.

இதுதவிர பிற பி.டெக் படிப்புகளுக்கும் ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதே போன்று திருச்சியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (IIIT) கல்லூரியிலும் சேரலாம்.

காரைக்குடியில் சென்ட்ரல் எலெக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (CECRI)இல் கெமிக்கல் மற்றும் எலக்ட்ரோ கெமிக்கல் படிப்புகளில் பி.டெக் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. 

மேலும் தஞ்சாவூரில் உள்ள நேஷ்னல் இன்ஸ்டிடியூட் அப் ஃபுட் டெக்னாலஜியில் (NIFTEM) உணவு தொழில்நுட்பத்தில் பி.டெக் படிப்பு உள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்கள் கொண்டு இந்தப் படிப்பிலும் சேரலாம்.

இவை மட்டுமல்லாமல் சில தனியார் கல்லூரிகளும் ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். சில கல்வி நிலையங்களில் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் ஜேஇஇ மதிப்பெண்கள் இரண்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன (உதா. SASTRA Tanjore).

விஐடி, எஸ்ஆர்எம் போன்ற நிகர்நிலை பல்கலைகழகங்கள் தங்களுக்கான தனி நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றனர். சில நேரங்களில் ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மேலும், பி.ஆர்க் எனப்படும் கட்டடக் கலை படிப்பில் சேர ஜேஇஇ மெயின் மதிப்பெண்கள் அவசியம். அதோடு நேஷ்னல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர் என்ற NATA தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருந்தால் மட்டுமே எந்த கட்டடக் கலை படிப்பிலும் ஒரு மாணவர் சேர முடியும்.

கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் மாநில பொறியியல் நுழைவு தேர்வுகள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் பொறியியலுக்கான மாநில நுழைவுத் தேர்வுகள் எதுவும் கிடையாது.

அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் உள்ள 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டுமே போதுமானது.
அண்ணா பல்கலைகழகம் நடத்தும் கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்கள் தவறாமல் விண்ணப்பித்தால் மட்டுமே இந்தக் கல்லூரிகளில் நுழைய முடியும்.
இதற்கு 12ஆம் வகுப்பின் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களின் மதிப்பெண்கள் அவசியம். ஒவ்வோர் ஆண்டும் நிறைய பொறியியல் கல்லூரி இடங்கள் காலியாக இருக்கின்றன. மாணவர்கள் கலந்தாய்வு மூலம் இடம் கிடைக்காதோ என்ற பயத்தில், மதிப்பெண் மூலம் கிடைத்திருக்கும் அதே இடத்தில் காசு கொடுத்துச் சேர்கின்றனர்.

கலைப் பாடங்களும் கை கொடுக்கும்!


கலைப் பாடங்களும் கை கொடுக்கும்!

அறிவியல் துறை மாணவர்கள் பொறியியல், மருத்துவம் போன்ற தொழில் கல்வி கிடைக்காவிட்டால் கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட துறைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வர். கலைப் பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் கல்லூரியில் நுழையும் போது பி.காம்., பி.பி.ஏ. போன்ற பாடங்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கின்றனர். ஆனால், தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் ஆகிய பாடங்களைத் தேர்வு செய்து படிக்கும் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன.

தமிழ் இலக்கியம் (Tamil literature)

தமிழ் இலக்கியம் கற்போருக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பலர் தமிழ் படித்தால் எதிர்காலமே இல்லை; வாழ்க்கை வீணாகப் போய்விடும் என்றெல்லாம் தவறாகக் கருதுகின்றனர். இத்தகைய தாழ்வு மனப்பான்மையை முதலில் தூக்கி எறிய வேண்டும். இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தால் கணிதம், இயற்பியல், வரலாறு உள்ளிட்ட மாணவர்களுக்கு உரிய அனைத்து வேலைவாய்ப்புகளும் இவர்களுக்கும் கிடைக்கும் என்பதே உண்மை.

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) தேர்வு முதல் இளங்கலைப் பட்டத்தைத் தகுதியாகக் கொள்ளப்படும் அனைத்து வேலைவாய்ப்புத் தேர்வுகளையும் தமிழ் படித்தோர் எழுதிவேலைவாய்ப்புப் பெற முடியும். பெறவும் செய்கிறார்கள். மேலும், இளங்கலை கல்வித் தகுதி தேவைப்படுகிற வங்கித் தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், அனைத்தும் தமிழ் படித்தோர் எழுதி பணி வாய்ப்புப் பெறலாம். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, 2 உள்ளிட்ட தேர்வுகளையும் எழுதலாம். மேலும், இளங்கலையுடன் பி.எட் அல்லது புலவர் பட்டயம் (டிபிடி) படித்திருந்தால் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாகப் பணிக்குச் செல்லலாம். அது மட்டுமல்லாமல் முதுகலையில் தமிழ் இலக்கியத்துடன் இதழியல் உள்ளிட்ட பல்வேறு விதமான படிப்புகள் தமிழ் இலக்கியத்தில் உள்ளன. முதுகலை இதழியல் படித்தோருக்கு பத்திரிகை, ஊடகத் துறையில் செய்தியாளர், உதவி ஆசிரியர் உள்ளிட்ட பணி வாய்ப்புகள் கிடைக்கும்.

இன்று தமிழைப் பிழையின்றிப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் பெருமளவில் ஆள்கள் தேவைப்படுகின்றனர். அவர்களுக்கு ஊடகத் துறை சார்ந்த தொலைக்காட்சி, வானொலி, பண்பலை (எப்.எம்) ஆகியவைகளில் செய்தி வாசிப்பவர், நிகழ்ச்சி அறிவிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிய பணியிடங்கள் காத்திருக்கின்றன. நம் நாட்டில் மட்டுமல்லாமல் சீனா, மோரீஷஸ், ஜப்பான், லண்டன் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் வானொலியில் தமிழ் அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணி வாய்ப்பு கிடைக்கும்.

மேலும், எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., பட்டங்கள் பெற்றவர்கள் பல்கலைக்கழகக் கல்லூரிகளின் பேராசிரியர்களாகச் செல்ல முடியும். மேலும், தமிழ் இலக்கியத்துடன் கல்வெட்டு ஆய்வு,, கூடுதலாக சுவடி வாசித்தல், சுற்றுலாவியல் போன்றவற்றில் பட்டயங்கள் (டிப்ளமா) பெற்றால் தமிழக அளவில் தொல்லியல் துறையில் பணியாற்ற வாய்ப்பு உள்ளது என்றார்.

ஆங்கில இலக்கியம் (English literature)

இப்போது நிலவும் கல்விச் சூழலில் ஆங்கில இலக்கியப் பாடத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. ஆங்கில மொழி பொது மொழியாக உள்ளதாலும், நம் நாட்டில் பலரும் அறிந்துள்ள மொழி என்பதாலும், உயர் கல்வி நிலையங்களில் ஆங்கில மொழி மற்றும் இலக்கியப் படிப்புகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் சுய நிதிக் கல்லூரிகளில் BA, MA, MPhil (இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் பட்டம்) எனப் பல நிலைகளில் ஆங்கில இலக்கியப் பாடம் கற்பிக்கப்படுகிறது. ஆங்கில மொழியில் புலமை பெற்றவர்கள் ஆங்கிலத்திலிருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கும் இலக்கியம் உள்ளிட்ட தகவல்களை மொழிப் பெயர்ப்பது, பல்வேறு கல்லூரிகளில் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) நிதியுதவியுடன் மொழி பெயர்ப்பியலில் சான்றிதழ், டிப்ளமோ, உயர் டிப்ளமோ படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் பி.எட் படித்து விரைவில் ஆசிரியர் பணியில் சேர முடியும். எம்.ஏ. படித்தவர்கள் எம்.பில் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்ள முடியும். முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் நிலையிலேயே பல்கலைக்கழக நிதியுதவிக் குழு நடத்தும் கல்லூரி விரிவுரையாளர் பதவி ஆராய்ச்சிப் படிப்புக்கான உதவித் தொகை பெறுவதற்கான (NET Exam For Lecturership JRF) தேர்வு, தமிழக அளவில் நடத்தப்படும் (SLET) தேர்வுகள் எழுதித் தேர்ச்சி பெற்றால் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணி வாய்ப்பைப் பெறுவது எளிது. ஆங்கில இலக்கியப் படிப்பில் இதழியல் (Journalism) படித்தால் ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. மேலும், படிப்பு, வேலை வாய்ப்புக்காக வெளி நாடு செல்ல விரும்புவோருக்கு பிரிட்டிஷ் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் TOEFL தேர்வில் பங்கேற்று வெற்றி பெற ஆங்கில அறிவுதான் அடிப்படையாக அமைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பி.பீ.ஓ., கால் சென்டர்களில் ஆங்கிலம், ஆங்கில இலக்கியப் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இத்தகைய காரணங்களால் ஆங்கிலப் பாடத்தை தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறதென்பது அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்று. வரலாறு படிக்க உதவித் தொகை வரலாற்றுப் படிப்பு மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு குறித்து வரலாற்றுத் துறை பேராசிரியர் சா. விஸ்வநாதன் கூறியது: வரலாறு படிப்பை நிறைய பேர் மதிப்புக் குறைவானதாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது தவறான கருத்து. இந்தப் பாடங்களைப் பட்டப் படிப்புடன் நிறுத்திவிடாமல் ஆராய்ச்சிப் படிப்பு வரை எல்லைகளை விரித்தால் நல்ல நிலையை எட்ட முடியும்.

ஓரளவு நடுத்தர மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இளங்கலை வரலாற்றுப் பாடத்தை எடுத்துக் கொண்டு நல்ல கல்லூரிகளைத் தேர்வு செய்து படிக்க வேண்டும். இதன் பிறகு முதுகலை பட்டப் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் அல்லது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தால் நல்லது. இதையடுத்து, எம்.பில். படிக்க புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தால் மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும். ஆங்கில மொழியில் நல்ல அனுபவத்தையும் பெற முடியும். மேலும், புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் நடைபெறும் இளநிலை ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பல்கலைக்கழக நிதியுதவிக் குழு மூலம் 5 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 15 ஆயிரம் உதவித் தொகை கிடைக்கும். அத்துடன் ஆண்டுக்கு ரூ. 27 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வாங்க உதவித்தொகை கிடைக்கும். எனவே, நன்றாகக் படிக்கக்கூடிய மாணவர்கள் இப் படிப்பில் சேர்ந்தால் 5, 6 ஆண்டுகளில் நல்ல நிலைக்கு வர முடியும். இப்படிப்பை முடித்தால் தொல்லியல் துறை, சர்வதேச அளவில் யுனெஸ்கோ நிறுவனத்தின் வரலாற்று ஆய்வு மையம், உலகம் முழுதும் உள்ள அருங்காட்சியகங்களில் வேலை வாய்ப்பை பெற முடியும். இன்றைய போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் 40 சதவீதக் கேள்விகள் வரலாற்று தொடர்புடையவைதான். குரூப் 1 தேர்வு எழுதும் பிற பாடங்கள் படித்த மாணவர்களின் விருப்பப் பாடமாக திகழ்வது வரலாற்றுப் பாடம்தான். அது போல ஐஏஎஸ் தேர்வுகளிலும், சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் வெற்றி பெறும் மாணவர்களில் 30 சதவிகிதம் பேர் வரலாற்றுப் பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்தவர்கள்தான். முறையாகத் தெரிந்து படித்தால் வரலாறு வாழ்க்கையைத் தரும் என்பதே உண்மை.

பொருளியல் (Economics) 

பொருளியல் படிப்பு மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு குறித்து பொருளியல் துறைத் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் கூறியது: பொருளாதாரம் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற தவறான கருத்து உள்ளது. பொருளாதாரம் சார்ந்த படிப்புகளின் எதிர்காலம் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளதே இதற்குக் காரணம். வேறு பாடம் படிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் படிக்கின்ற பாடம் என்ற நிலையை மாற்றி, பொருளியல் என்பது அனைவரும் அறிய வேண்டிய கட்டாயப் பாடம் என்பதே உண்மை. பொருளாதாரத்தில் 130 பாடப் பிரிவுகள் உள்ளன. இதைப் படித்தவர்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவுத் தணிக்கைத் துறை, புள்ளியல் துறை, இந்திய பொருளாதாரப் பணிகள், இந்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவு, இந்தியத் திட்டக் கமிஷன், வங்கித் துறை, காப்பீட்டுத் துறை, விற்பனை சந்தை, தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் அனைத்துப் பணிகளுக்கும் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிலும் பணி வாய்ப்பு பெறலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், பள்ளிகளில், பொருளாதாரப் பாடம் கற்பிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள சென்னை வளர்ச்சி படிப்பு மையம் மூலம் திட்ட அறிக்கை ஆய்வுகள், முனைவர் பட்டம் பெற முடியும். பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களில் எம்.எஸ்., அல்லது எம்.எஸ்சி., பட்டப் படிப்பு அறிவியலோடு சேர்த்துப் பயிற்றுவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே, இப்படிப்புக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

(இது ஒரு மீள் பதிவு)