வங்கி அதிகாரி ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்? மற்றும் என்ன தேர்வு எழுத வேண்டும்?
அடுத்த 30–35 வருசத்துக்கு நல்ல சம்பளத்துடன் நாடு முழுவதும் 'வலம்' வர முடிவு பண்ணீட்டீங்க. வாழ்த்துக்கள்..
35 வருடங்களில் 5 கோடி சம்பளம் லட்சியம், 3 கோடி நிச்சயம்.
வீட்டு வாடகை, காருக்கு பெட்ரோல், நியூஸ் பேப்பர், மருத்துவத்திலிருந்து மேற் படிப்பு செலவுகள் வரை வங்கியே செலவுகளை ஏற்றுக்கொள்ளும். குறைந்த வட்டியில் பல கடன் வசதிகள், பென்ஷன், 4 வருடங்களுக்கு ஒருமுறை பணியுயர வாய்ப்பு, 5 வருடங்களுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு..
அனைத்து அரசு வங்கி பணிகளுக்கும் துவக்க புள்ளி ஐ.பி.பி.எஸ்.தான்.
ஐ.பி.பி.எஸ். (Institute of Banking Personnel Selection) என்ற அமைப்புதான் பொதுவான தேர்வுகளை நடத்துகிறது. (பாரத ஸ்டேட் வங்கி மட்டும், தானே தேர்வு நடத்தித் தானே தேர்வுசெய்து கொள்கிறது).
வங்கிகளில் எழுத்தர், அதிகாரிகள் என்று இரண்டு பிரிவுகளில் பணி கிடைக்கும் . எழுத்தராக சேர்ந்து, சில வருடங்களில் அதிகாரியாக பதவி உயர்வு பெறலாம்.
படிப்புத்தகுதி
அடிப்படைத் தேவை ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு.
பி.காம். படித்திருந்தால் மட்டுமே தேர்வு எளியது என்பது தவறு. எனது அனுபவத்தில் அறிவியல் பட்டதாரிகளே வங்கித் தேர்வில் அதிக வெற்றி பெறுகிறார்கள்.
வயது வரம்பு
* குறைந்தபட்சம் 20, அதிக பட்சம் 30.
* ஓ.பி.சி. 33
* எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினருக்கு 35.
* மாற்றுத் திறனாளிகளுக்கு 40.
*
ஐ.பி.பி.எஸ் (IBPS) தேர்வுகள்
இரண்டு வகை ஐ.பி.பி.எஸ் எழுத்துத் தேர்வுகள்.
1. முதல்நிலை,
2. மெயின் தேர்வு.
இரண்டிலும் தேர்வானால் எழுத்தராக பணிகிடைக்கும்.
வங்கி அதிகாரி பதவிக்கு தேர்வுகளோடு, நேர்காணலிலும் தேர்வாக வேண்டும்.
மதிப்பெண் முறை
முதல் நிலைத்தேர்வு 100 மதிப்பெண்கள். ஆன்லைன் , அப்ஜெக்டிவ், ஒரு மணி நேர தேர்வு.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு.
மெயின் தேர்வில் 200 மதிப்பெண்கள். இதுவும் ஆன்லைன் வழியில், அப்ஜெக்ட்டிவ் வினாக்கள். 3 மணி நேரத் தேர்வு.
இரு தேர்வுகளிலும் தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண்கள் உண்டு.
கவனம், மெயின் தேர்வு கடினமாக இருக்கும்.
சிவில் சர்வீஸ் தேர்வுகள் அளவுக்கு ஆழமில்லை, ஆனால் ஏறத்தாழ அந்த அகலம் இருக்கும்.
ஆங்கிலத்தில் விரிவாக விடையளிக்கும் தேர்வும் இடம்பெற்றிருக்கும். கட்டுரை எழுதுதல், கடிதம் எழுதுதல் ஆகிய 2 கேள்விகளுக்கு 25 மதிப்பெண். இதற்கு தனியாக அரை மணி நேரம்.
மெயின் தேர்வில் மொத்தம் 4 பிரிவுகள்:-
1. நுண்ணறிவு, காரணமறிதல் கணினி அறிவு
2. பொருளாதாரம், வங்கியியல்
3. பொது ஆங்கிலம்
4. டேட்டா அனலசிஸ், இன்டர்பிரட்டேஷன்
ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்க வேண்டும்.
மெயின் தேர்ந்து விட்டால் நேர்முகத் தேர்வு.
மெயின் தேர்வு + நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வங்கி அதிகாரிகள் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.
நேர்முகத் தேர்வு
நம்மை பற்றி சொல்வதில் இருந்தே 90% கேள்விகள் ஆரம்பிக்கும். நிதானமாக, யோசித்து பதிலளிக்க வேண்டும். சமயோசிதம், உடை, பேச்சில் தெளிவு என்று தனித்தனியே மதிப்பெண்கள்.
கண்ணாடி, மொபைல் முன்பு அமர்ந்து, புன்முறுவலுடன் பேசி, நேர்முகத் தேர்வுக்கு பயிற்சி பெறுங்கள்.
முக்கியமான விஷயம்
தேர்வு விண்ணப்பத்தில் சான்றிதழில் உள்ளப்படி பெயர், பிறந்த நாள், இதர விவரங்களை குறிப்பிடுங்கள். இதில் தவறு செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் போது நிராகரிக்க பட்டவர்கள் நிறைய பேர்.
முப்பது வயது வரை தேர்வு எழுதலாம். ஆனால் பட்டபடிப்பின் இரண்டாம் வருடத்திலிருந்து தேர்வுக்குத் தயாராகத் தொடங்குங்கள்.
* பலர் தவறுவது ஆங்கிலத்தில். கிட்டத்தட்ட 60% பேர் இதிலேயே பெயில் ஆகிவிடுகிறார்கள்.
* தேர்வு நாள் அறிவித்த பின்னர் அல்ல, தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கவேண்டும். முழு அளவில் நேரத்தை ஒதுக்கினால் ஆறு மாதத்தில் வெற்றி பெற்று விடலாம்.
* ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமாவது பயிற்சி வேண்டும். நண்பர்களை குறையுங்கள்.
* டிஎன்பிஎஸ்சி, விஏஓ தேர்வு என்று சிதறாமல் வங்கி தேர்வுகளுக்கு மட்டும் முழு கவனம் செலுத்துங்கள் .
* வங்கித் தேர்வுகளுக்கான வாய்ப்புகள், தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அடுத்தடுத்த தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.
* மாதிரித் தேர்வுகள் பெரிய அளவில் உதவும். 50 மாதிரித் தேர்வுகளாவது பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
* அட்டவணை தயாரித்து அதன்படி படிக்க வேண்டும்.
* ஆறு மாதத்திற்கு வாட்ஸ்அப், பேஸ்புக், டிவி, சினிமா, கோரா எல்லாவற்றையும் தவிர்க்கவும். தேர்வில் மட்டும் முழு கவனத்தையும் நிறுத்தவும்.
மாதிரி தேர்வுகளில் 100க்கு 90% வாங்க ஆரம்பித்தால் வங்கித் தேர்வுக்கு நீங்கள் தயார்.
பணி கிடைக்க நல் வாழ்த்துக்கள்.
(எதற்கும் அப்ளை பண்ணுவதற்கு முன்னர் இந்த இரண்டு பதில்களையும் படித்து விடுங்கள்… 👇🏿 )
வங்கி பணிகளில் சந்திக்க கூடிய சவால்கள் என்னென்ன?
ஒன்றை அழுத்தமாக சொல்ல வேண்டுமானால், வங்கி பணி என்பது அதன் முதல் நிலை பணியாளர்களில் இருந்து அதன் இயக்குநர்கள் குழு வரை (Clerical cadre to Board of Directors) பணியில் எச்சரிக்கையுடனும், ஆபத்தை முன்னறியும் திறனுடனும், நேர்மையுடனும், அழுத்தத்துக்கு பணியாத துணிவுடனும் இயங்க தேவையுள்ள பணி.
பண நடவடிக்கை மேற்கொள்ளும் (பண நீக்க நடவடிக்கை அல்ல!) எல்லா அலுவலகங்களும் அப்பிடித்தான் இயங்க வேண்டும் என்றாலும், வங்கி கடனளிக்கும் பணம், அதன் டெபாசிட் தாரர்களிடம் இருந்து திரட்டியது என்ற ஒரு அம்சம், மற்ற நிறுவனங்களில் இருந்து வங்கியின் செயல்பாடுகளை தனித்து நிறுத்துகிறது.
ஒருவங்கி அதிகாரி அவர் பணி ஒய்வு பெறுவதற்குள் பல்லாயிரம் கோடி பண நடவடிக்கைகளை (Financial Transactions) செய்திருப்பார் - அவற்றில் ஒன்று தவறானாலும் கடும் நடவடிக்கைக்கு ஆளாகி தலைகுனிவுக்கும் சம்பள குறைப்புக்குக்கும் உள்ளாகவேண்டிவரும். வங்கி அதிகாரிகள் எப்பவும் சீரியஸ் லுக் தருகிறார்கள் என்றால், இந்த பணி சார்ந்த மன அழுத்தம் தான் காரணம்.
இதையும் தாண்டி வாடிக்கையாளர்களையும் சக ஊழியர்களையும் பார்த்து புன்னகை செய்ய கற்று கொண்ட வங்கி அதிகாரிகள் அலுவலகத்தில் வெற்றியுடன் வலம் வருகிறார்கள் ! மனதில் உள்ளதை காட்டாமல், உதட்டில் புன்னகை தவழ இல்லம் செல்லும் இவர்கள், இல்வாழ்க்கையிலும் தம் மனைவியிரிடம் பெரும் நன் மதிப்பு பெறுவார்கள் என்பதை சொல்ல வேண்டியது இல்லை ! (இதை நேரம் வரும்போது தனியாக எழுதுகிறேன்! )
தவிர, இந்த பணிக்கே உரிய சில தனி பண்புகள்:
1. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பணியிட மாற்றம்
2. பல மொழிகள் கற்க நேரும்
3. பிள்ளைகளின் படிப்பு மாறுதல்களுக்கு ஆக வேண்டியுள்ளது
4. அல்லது குடும்பத்தை பிரிந்து தனித்து இருக்க வேண்டும்
5. பணியில் டீம் சரியாக அமையாவிட்டால், அவ்வளவுதான் எல்லாம் போச்சு
6. பத்து மணிநேரத்துக்கு குறையாமல் வேலை செய்ய வேண்டும்.
7. பல்வேறு தேர்வுகள், படிப்புகளை முடிக்க வேண்டும் - பணிக்காலம் முடியும் வரை!
8. உடலை பேணாவிட்டால், பெரும் தொல்லைகள் நேரும் - BP இல்லாத வங்கி அதிகாரியை நீங்கள் பார்ப்பது அரிது !
9. மிக மிக முக்கியமானது : இந்த பணியில் இருப்பவர் பிரச்சினைகள் எதுவும் இன்றி பணி ஓய்வு பெற வேண்டுமேயென்றால் பிரச்சினைக்குரிய (உறவினர், நண்பர்கள் , உடன்பணிபுரிவோர், மேலதிகாரிகள்) நபர்களிடமிருந்து விலகுவதை தவிர வேறு வழியில்லை. என் பணி வேறு: என் நட்பு, சுற்றம் வேறு என்று இயங்கினால் இந்த பணியில் நிலைக்க முடியாது.
“பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது”.(811)
[ உறவு பாராட்டுவார் என்றாலும் பண்பிலார் நட்பை வளர்காமல் விலகிவிடுதலே இனிமையானது ]
வங்கி பணி சிலர் தொல்லை நிறைந்த பணி என்றே கருதுவார்கள் - என்னை பொறுத்தவரை அப்படி நினைப்பதில்லை. இது வரை அண்டை மாநிலம் உட்பட 13 பணியிட மாறுதல்கள் பெற்றுள்ளேன். மனைவியும் மகளும் மலையாள மொழியில் தெளிவாக பேசுவார்கள். (எனக்கு "மலையாளம் கொறச்சி அறியும்"). மகள் 7 பள்ளிகள், 3 கல்லூரிகளில் படித்துள்ளார்! நானும் பல உயரிய பட்டய படிப்புகளை நல்ல முறையில் முடிக்க முடிந்தது. நாங்கள் அனைவரும் குறுகிய காலத்தில் அண்டை அயலாரிடம் (உதட்டில் புன்னகை தவழ) பழக கற்றுகொண்டடோம் . முக்கியமானது - எந்த பணியிடமும் நிரந்திரமில்லை; எனவே எந்த தொல்லைகளும் தற்காலிகமானதே!
வங்கிப்பணியில் சேருங்கள் - ஒரு மூன்று வருடங்களில் ஒரு சிறிய ஊரை உங்களால் மாற்றம் செய்ய முடியும். கண்ணெதிரே பலர் முன்னேற்றம் காண்பதை உணர்வீர்கள். ஊரே உங்களை மதிக்கும். பணி மாற்றம் செய்ய பட்ட பின்னரும் பாசத்துடன் நினைவு கூறுவார்கள். மாவட்ட துணை ஆட்சியருக்கு நிகரான பணியிது!
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளைவிட வங்கித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கடினம் என்று சொல்லப்படக் காரணங்கள் என்ன?
ஒரு தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமா, எளிதா என்பது, தேர்வு எழுதுபவர்கள் எத்தனை பேர், காலியிடங்கள் எத்தனை, நமது தயார் நிலை என்ன (preparation) - இந்த மூன்றையும் பொறுத்தது.
எந்த தேர்வானாலும் வெற்றி பெறுவது ரொம்ப எளிது. இரண்டே விஷயம் தான். பொறுங்கள், சொல்லுகிறேன்.
சுருக்கமாக இரண்டு தேர்வுகளையும் பற்றி.
டி.என்.பி.எஸ்.சி: தமிழ்நாடு பொது சேவை ஆணையம் என்பது தமிழக அரசின் ஒரு துறை. இது 1929 இல் தமிழகத்தில் பொது சேவை பணியாளர்களை தேர்ந்தெடுக்க ஏற்படுத்தப்பட்ட "மதராஸ் சேவை ஆணையத்தின்" வாரிசு.
மதராஸ் சேவை ஆணையம் இந்தியாவின் முதல் மாகாண பொது சேவை ஆணையம். அப்போதைய மதராஸ் சட்டமன்றத்தின் சட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வந்தது. எல்லாருக்கும் பாட்டன்!
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் இந்திய அளவில் புகழ் பெற்றவை. அனைத்து டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக இருக்கும். (குழு I முதல் IV வரை)
வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளால் 12.08.2012 அன்று நடைபெற்ற குழு II தேர்வு முதல்முறையாக ரத்து செய்ய பட்டது. இந்த வருட டி.என்.பி.எஸ்.சி தேர்வு குளறுபடிகள் உலகறிந்தவை. சில அகில இந்திய புரோக்கர்கள் பணத்தாட்களை பெற்றுக்கொண்டு வினாத் தாட்களை கடத்தியதால், டிஎன்பிஎஸ்சி-யின் பெயரே பெரும் சேதமாகிவிட்டது.
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வெற்றிபெறுவது பொதுவாக கடினம். போதிய நிதியிருக்கும் பட்சத்தில் இப்போதெல்லாம் கவலையில்லை.
வங்கிப்பணி எப்பொழுதுமே வங்கிப்பணி பலரும் விரும்பும் பணிதான். சில சவால்கள், பல சலுகைகள். கவனமாக செய்தால் வங்கி வேலை மனதுக்கு நிறைவானது. அதைப்பற்றி அறிய இங்கே …
ஐ.பி.பி.எஸ் (IBPS) வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS-Institute of Banking Personnel Selection), பொதுத்துறை வங்கிகளில் அலுவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்வுகளை நடத்துகிறது. ஐபிபிஎஸ் (IBPS) ஒரு தன்னாட்சி நிறுவனம்.
நிர்வாக குழுவில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI), இந்திய நிதி அமைச்சகம் (MOF), மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (Mumbai-IIT), இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனம் (IIBF), தேசிய வங்கி மேலாண்மை நிறுவனம் (NIBM), இந்திய வங்கிகளின் சங்கம் (IBA), பொதுத்துறை வங்கிகள், என்று பல அரசு நிறுவனங்களின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு நுழைவு தேர்வுகள் உட்பட பல சேவைகளை, ஐ.பி.பி.எஸ் தருகிறது.
வங்கி வேலைகளுக்கு விண்ணப்பிக்க, ஐ.பி.பி.எஸ் தேர்வின் தேர்ச்சி சான்றிதழ் ஒரு அடிப்படை தேவை. அதாவது ஐ.பி.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே நீங்கள் விண்ணப்பிக்கவே முடியும்.
இது அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஒரு போட்டி தேர்வு. 2018–2019 வருடத்தில் மட்டும் ஒரு கோடி தேர்வர்கள் ஐ.பி.பி.எஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்தனர்!
வருடங்கள் போக போக, தேவை இருக்கும் இடங்களுக்கும், தேர்வு எழுதுபவர்களுக்கும் உள்ள விகிதம் அதிகமானதால் இது ஒரு கடினமான தேர்வு என்று பெயர் பெற்றுவிட்டது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் 1 முதல் 4 வரை தொகுப்புகள் (Groups) உள்ளது போல, ஐபிபிஎஸ் தேர்வுகளில் பல நிலை வங்கி வேலைகளுக்கும் தனித்தனி தேர்வுகள் உள்ளன. நீங்கள் ஒரே சமயத்தில் ஒன்று அல்லது பல தேர்வுகளை தேர்ந்தெடுத்து எழுதலாம்.
அனைத்து போட்டிதேர்வுகள் போலவே, இதிலும் குறைந்தபட்ச cut off மதிப்பெண்கள், எதிர்மறை மதிப்பெண்கள் எல்லாம் உண்டு. இந்த தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனங்களின் மொத்த ஆண்டு வர்த்தகம் மட்டுமே பல கோடிகளில்!
கல்லூரி தேர்வுகளில் நான் கேவலமான மதிப்பெண்களை பெற்றவன். பின்னாட்களில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராவது எப்படி என்ற சூட்சமத்தை தெரிந்து கொண்டு சில உலகத்தரமான தேர்வுகளையே இடதுகையால் தட்டியெறிந்திருக்கிறேன். எல்லாராலும் இது முடியும். நம்புங்கள்.
தேர்வுகளை எப்படி எழுதுவது ?
* பயிற்சி நிறுவனங்களில் சேராமல், நாமே படித்து (Self Study) எழுதுவது நல்லது. எளியது. முடியும்.
* அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களை மட்டுமே வாங்கவும்.
* கிடைத்த எல்லாப் புத்தகத்தையும் வாங்கி புரட்டிக் கொண்டிருக்காதீர்கள். தவறான தகவல்களை படித்து குழம்பி போவீர்கள்.
* உங்களுக்கு எதில் அதிக தன்னம்பிக்கை இருக்கிறதோ, அந்த பாடத்திலிருந்து தொடங்குங்கள். தேர்வுக்கான ஆயுத்தத்தில் உங்கள் நம்பிக்கை சரேலென்று உயரும்.
* தேர்வுகளின் எண்ணிக்கை, மொத்த பாடங்கள், தேர்வு நாள், இந்த மூன்றையும் கணக்கிட்டு ஒரு துல்லியமான கால அட்டவணையை நீங்கள் போடவேண்டும்.
கால அட்டவணைதான் வெற்றிக்கு அடிப்படை. கால அட்டவணை, இல்லாமல் எந்த போட்டித் தேர்விலும் வெற்றிபெற முடியாது.
* அட்டவணையை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.
* ஒருநாள் அட்டவணையில் குறித்த பாடத்தை எதாவது காரணத்தால் படிக்க முடியாமல் போனால், அடுத்த நாள் இரண்டு நாள் பாடங்களை சேர்த்து படிக்க வேண்டும்.
தேர்வுக்கு முதல் நாள் கணக்கெடுத்தால், பாட புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் குறைந்தது நான்கு முறை நீங்கள் படித்திருக்க வேண்டும். அதற்கேற்றது போல் உங்கள் அட்டவணையை தயாரிக்கவேண்டும்.
ஏன் சுயமாக படிப்பது நல்லது?
* படிக்கும் போது பல சந்தேகங்களை எதிர்கொண்டு, அவற்றை போக்கிக்கொள்ள நீங்களே, பதில்களை தேட ஆரம்பிப்பீர்கள்.
* தொடர்புடைய அனைத்து சந்தேகங்களையும் இந்த நேரத்தில் போக்கிக்கொள்ளமுடியும்.
* சுயபடிப்பு, உங்கள் சவால் ஏற்றுக்கொள்ளும் திறனை உயர்த்துகிறது, உங்கள் சிந்தனை திறனை கூட்டுகிறது.
* ஐ.க்யூவை (IQ test) சோதிக்கும் கேள்விகளை பயிற்சி நிறுவனத்தில் சரியாக சொல்லித்தரமாட்டார்கள். இது சுயபடிப்பின் மூலமே கற்றுக்கொள்ள முடியும் .
* அங்கே வழங்கப்படும் எல்லோருக்கும் பொதுவான குறிப்புகளை விட உங்களுக்காக, நீங்களே தயாரிக்கும் குறிப்புகள் சிறந்தவை. குறிப்புகள் என்றால் பிட்டுகள் இல்லை!
* தகவல்களை தேடித்தேடி ஒருகுறிப்பை தயாரிக்கும்போது், பலமுறை படித்த பயனை அடையமுடியும்
சுய படிப்புக்கான சில குறிப்புகள் -
* படிப்பில் மட்டுமே உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்,
* ஒவ்வொரு நாளும் புதிதாக, முழுமையாக பயிற்சி செய்யுங்கள்.
* படிப்படியாக தலைப்புகளைத் தேர்ந்தெடுங்கள்.
* ஆங்கில ஹிந்து நாளிதழை தினமும் படிக்கவேண்டும்
* நூலகங்களில் சேருங்கள். நூலகம், படிப்பதற்கான ஒரு நல்ல சூழலையும், நேர்மறை அதிர்வுகளையும் தருகிறது. உங்கள் உள் சக்தி அதிகரிக்கும். மேலும் மேலும் படிக்க அதிக ஆர்வம், கவனம் வரும்.
* குழுக்களாக படிப்பதும் நல்லதுதான். அது சேர்பவர்களை பொறுத்தது. சந்தேகங்களை பரிமாறிக்கொண்டு தீர்வுகளைக் காணலாம். அறிவு பரிமாற்றம், முக்கிய தகவல்களைப் பெறுவது முடியலாம்.
* குழு சரியாக இல்லையென்றால் விலகிவிடவும்.
* இணையத்தில் ஒவ்வொரு பாடத்திலும் நிறைய பயிற்சிகள் உள்ளன. எல்லா பயிற்சிகளையும் பின்பற்ற முயற்சிக்காதீர்கள். உங்கள் ஆற்றலையும் விலைமதிப்பற்ற நேரத்தையும் அது வீணடித்துவிடும்.
* உங்கள் கால அட்டவணையில் இருந்து மாற வேண்டாம். படிப்புகளை் ஒரு நாள் தவிர்ப்பதுகூட, நீங்கள் அந்த நாள் வரை நீங்கள் செய்த முழு தயாரிப்பையும் கெடுத்துவிடும்.
* மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இதில் எச்சரிக்கையாக இருங்கள்!
* கேள்விகளைப் பற்றி ஒரு தெளிவு கிடைக்க முந்தைய மூன்று ஆண்டு கேள்வித்தாள்களை ஆழ்ந்து படியுங்கள்.
* மாதிரி கேள்வித்தாள்களை தீர்க்கும்போது உங்கள் நேரத்தையும் நிர்வகிக்க மறக்காதீர்கள்; இது முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது.
மிக முக்கியமானது. தேர்வுக்கு முதல் நாள் கணக்கெடுத்தால், பாட புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் குறைந்தது நான்கு முறை நீங்கள் படித்திருக்க வேண்டும்.
பயிற்சியின் இறுதிகட்டங்களில் உங்களுக்கு எந்த பாடத்திலும் சந்தேகமே இருக்கக் கூடாது.
தேர்வு மையத்தில்
* ஒரு மணி நேரத்துக்கு முன்னேரே தேர்வு மையத்துக்கு போய்விடுங்கள்
* தேவைக்கு அதிகமான பென்சில்கள், அழிப்பான்களை எடுத்துச்செல்லுங்கள்.
* தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு போகவேண்டாம்.
* அந்த ஒருமணி நேரமும், படிப்பதையும் பரபரப்பு அடைவதையும் தவிருங்கள். அமைதியாய், அடுத்தவரை கலவரப்படுத்தாமல் இருங்கள்.
* தேர்வு எழுத மணி அடித்த உடன் விடை தர ஆரம்பிக்க வேண்டும்
* முழு நம்பிக்கையுடன் பதில் அளிக்க கூடிய கேள்விகளை முதலில் முடியுங்கள்.
* இது உங்கள் நேரத்தை நிறைய மிச்சப்படுத்தும். தேர்வுக்கு தேவையான பதில்களை நேரத்திற்குள் முடிக்க இது முக்கியம்.
* நம்பிக்கை இல்லாத கேள்விகளை முதலில் முயற்சிப்பதை தவிர்க்கவும்.
* கடினமான, சரியாக பதில் தெரியாத, அதிகம் நேரம் எடுக்கும் கேள்விகளை முடிவில் முயற்சிக்கவும்.
* எதிர்மறை மதிப்பெண்கள் உண்டென்பதால், எத்தனை கேள்விகளுக்கு ரிஸ்க் எடுத்து பதில் அளிப்பது என்ற கணக்கு, தேர்வுக்கு முன்னேரே உங்களுக்கு தெரியும். அந்த கணக்கை மீறிவிடாதீர்கள்.
போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது ரொம்ப எளிது. இரண்டே விஷயம் தான்.
1. ஒரு அட்டவணையை போடுங்கள். முழுவதுமாக பின்பற்றுங்கள்.
3. பாட புத்தகத்தின் எல்லா பக்கங்களையும், நான்கு முறை நன்றாக படியுங்கள்.
4.
அவ்வளவுதான். இடதுகையால் தட்டியெறிந்து விடலாம்.
தேர்வு நாளுக்கு முதல் நாளே, நாம் தேர்வாகி விடுவோம் என்பது உங்களுக்கே தெரியும்.
Credits : Google
https://www.ibps.in/wp-content/uploads/FAQ_Help-Desk_21_09_2016.pdf
http://www.tnpsc.gov.in/recruitment-faq.pdf
Institute of Banking Personnel Selection - Wikipedia
You are being redirected...
83.4% of candidates appear for TNPSC Group IV examination
Over 4.50 lakh candidates appear for Group II exam
நன்றி: B.K. மதிவாணன்
தகவல் தொழில்நுட்ப தனிக்கையாளர்
(தமிழ் குவரா வழியாக)