Saturday, June 20, 2015

வீடு வாங்கும் முன் ஒரு நிமிஷம்

ரொம்ப நாளாக நீங்கள் யோசித்து, ஆலோசித்து கடைசியாக உங்கள் கனவான சொந்த வீட்டை வாங்கப் போகிறீர்களா? வீடு கட்டுவது மட்டுமல்ல, வீடு வாங்குவது கல்யாணப் பரபரப்புக்கு இணையானதுனால் எனச் சொல்லலாம்.
அந்தப் பரபரப்பில் வீட்டிற்குத் தேவையான அடிப்படையான சில விஷயங்களை மறந்துபோகக் கூடும். லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து வாங்கும் வீட்டில் சில விஷயங்களைக் கவனிக்கத் தவறி அது பெரும் சிக்கலில் கொண்டு போய் விட்டுவிடும்.
கொஞ்சம் நிதானமாகப் பொறுமையாக வீட்டைக் குறித்த உங்கள் எல்லாச் சந்தேகங்களையும் கேள்விகளை எழுப்பித் தெரிந்து, தெளிவுபெற வேண்டும். இதில் உங்களுக்குத் தயக்கமோ, கூச்சமோ வேண்டாம். பல லட்சம் ரூபாய் செலவு செய்து வீட்டை வாங்கும்போது நமக்குத் தெரிய வேண்டிய விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
அடுத்த விஷயம் வாங்கப் போகும் வீடு அமைந்திருக்கும் பகுதி. அது மிகவும் முக்கியம். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் இடமாகப் புது வீடு இருக்க வேண்டும். அலுவலகம், குழந்தைகளுக்கான பள்ளி ஓரளவு அருகில் இருக்க வேண்டும். பிறகு வீட்டுக்குத் தேவையான அன்றாட பொருட்களுக்கான கடைகளும் அருகில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் சுற்றுப்புறம் அமைதியாகவும், தூய்மையாகவும் இருப்பது அவசியம். முக்கியமாகப் பாதுகாப்பான பகுதியாகவும் இருக்க வேண்டும்.
பிறகு வீட்டை மேலோட்டமாகப் பார்த்து வாங்கத் தீர்மானிக்க வேண்டாம். வீட்டின் ஒவ்வொரு அறையையும் நன்கு பார்த்து உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்பதை யோசித்து முடிவுசெய்ய வேண்டும்.
வீடு வாங்குவது தொடர்பான ஆவணங்களைச் சரியாகப் பார்க்க வேண்டும். அதற்கான சட்டரீதியிலான பத்திரப் பதிவைச் செய்ய வேண்டும். அந்த வீடு தொடர்பான எல்லா ஆவணங்களும் உங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறாதா என்பதையும் பார்க்க வேண்டும்.

அழகும் பாதுகாப்பும்

சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் நெடுநாள் கனவாக இருக்கும். அறைகள் எப்படி இருக்க வேண்டும். ஜன்னல்கள், கதவுகள், சுவர் எப்படி இருக்க வேண்டும் எனப் பலவிதமான எதிர்பார்ப்புகள் நமக்கு இருக்கும். மேலும் வீடு என்பது வெறும் செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல. நம் வாழ்க்கையின் ஆதாரமாக விளங்கப்போகும் ஓர் இடம். அதனால் சொந்த வீடு கட்டும் கட்டுமானப் பணிகள் விஷயங்களில் மற்றவர்கள் ஆலோசனைகள் சொல்கிறார்கள் என்பதற்காக ஏனோதானோ என முடிவு எடுக்கக் கூடாது.
வீடு கட்டும்போது அஸ்திவாரத்தில் தொடங்கி வீட்டிற்கு வண்ணம் அடிப்பதுவரை உங்களுடைய தேர்வு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
* கட்டிடப் பணிகளுக்குத் தண்ணீரின் தரம் முக்கியமானது. உப்புச் சுவை உள்ள தண்ணீர் என்றால் அது கட்டிடத்தின் உறுதிக்குப் பங்கம் விளைவிக்கும். அதனால் கட்டிடப் பணிகளுக்கு நல்ல தண்ணீர் உபயோகிக்க வேண்டும். அதைக் கவனிக்க வேண்டும். கட்டிடப் பணிகளுக்காக முதலில் ஆழ்துளைக் கிணறு அமைத்துக்கொள்ள வேண்டும்.
* வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.
* கட்டிடத்தின் உறுதிக்கான மற்றொரு விஷயங்களில் ஒன்று, சிமெண்ட். அந்த சிமெண்டின் தரத்தை அதன் நிறத்தை வைத்தே ஒரளவு தீர்மானித்துவிடலாம். லேசான பச்சை நிறத்தில் இருந்தால் அது நல்ல சிமெண்ட் என ஊகித்துக்கொள்ளலாம். அதுபோல சிமெண்ட் மூட்டைக்குள் கைவிடும்போது குளுமையாக இருந்தால் அது சிறந்த தரம் என அறிந்துகொள்ளலாம்.
சிமெண்டின் தரத்தை அறிய மற்றொரு முறை, அதைத் தண்ணீருக்குள் இடும்போது அது மிதந்தால் தரம் சரியில்லை என அறிந்துகொள்ள முடியும். சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ. அது சரியாக இருக்கிறதா எனச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஓரளவு குறைவாக இருந்தால் சரி. 1 கிலோவுக்கும் அதிகமாகக் குறைந்திருந்தால் அதை வாங்கிய இடத்தில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும்.
* இன்றைக்குத் தங்கத்தைப் போல விலை மதிப்பான பொருளாக மணல் மாறிவிட்டது. விலை மதிப்பு அதிகமாக, அதிகமாக அதில் கலப்படம் வந்துவிடும் அல்லவா? ஆற்று மணலில் தூசியைக் கலக்கிறார்கள். சிலர் ஆற்று மணலுடன் கடல் மணலைக் கலக்கிறார்கள்.
அதனால் மண்ணை முறையாகப் பார்த்து வாங்க வேண்டும். கடல் மணலைக் கண்டுபிடிக்க மணலின் உப்புச் சுவை பரிசோதித்தாலேயே போதும். கடல் மணலில் உப்புச் சத்து அதிகமாக இருக்கும். மணலில் அதிகமாகக் குருணை இருந்தால் பயன்படுத்தத் தகுதியில்லாததாக இருக்கும். குருணை அதிகமாக உள்ள மணல் சிமெண்டுடன் கலக்காது.
* இப்போதுள்ள நவீனத் தொழிற்நுட்பத்தைத் துணிச்சலாகப் பயன்படுத்த வேண்டும். அதனால் நேரமும் கூலியும் மிச்சமாகும். உதாரணமாக ரெடிமேட் கட்டுமானக் கம்பிகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. கட்டிடத்தின் வரைபடத்திற்குத் தகுந்தாற்போல் அவர்களே கம்பியை வளைத்துக் கொண்டுவந்து இடத்திலேயே இறக்கிவிடுவார்கள்.
முன்புபோல கட்டுமான இடத்தில் தனியான இடத்தை நிர்மானித்துக் கம்பிகளை வளைத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமல்ல. அதுபோல சிமெண்ட் கலவையிலும் தேவையான அளவு ரெடி மிக்ஸைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
* கட்டுமானத்திற்குப் பிரித்துப் பார்க்க முடியாத அளவில் உறுதியும் உருவமும் தருவது செங்கல். இதன் தரத்தை அறிய ஓர் எளிய வழிமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது நாலைந்து செங்கற்களை எடுத்து நீரினுள் இட வேண்டும்.
24 மணி நேரத்திற்குப் பிறகு அதை எடுத்து விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் அந்தச் செங்கற்கள் தரம் குறைவானவை என அறிந்துகொள்ளலாம். இப்போது பலவகையான மாற்றுச் செங்கற்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் விலையும் மிச்சமாகும்; தரத்திலும் சிறந்தவையாக இருக்கும்.
அதுபோல தேவையப் பொறுத்து அதற்குத் தகுந்த கற்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சுற்றுச் சுவர்களுக்கு ஹல்லோ செங்கல் உகந்தவையாக இருக்கும். இப்போது வீடு கட்டுவதற்கும் இவ்வகையான மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்துவது நல்லது எனப் பசுமைக் கட்டிட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
பாரம்பரிய முறையிலான செங்கற்கள் தயாரிக்க ஆகும் ஆற்றலால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. அவற்றுடன் ஒப்பிடும்போது மாற்றுச் செங்கற்கள் சுற்றுச் சூழலுக்கு உகந்தவை. அதனால் கூடியவரை நாம் மாற்றுச் செங்கற்களைக் கட்டிடப் பணிகளுக்குப் பயன்படுத்துவோம்.
* கட்டுமானப் பொருள்களைக் கையாளும்போது அவற்றில் சிறிதளவு வீணாகக்கூடும். அவை சிறிய அளவாக இருந்தால் சரி. அப்படியில்லாமல் அஜாக்கிரதையாகக் கட்டுமானப் பொருள்களைக் கையாண்டு அதன் மூலம் ஆகும் கட்டுமானச் சேதாரத்திற்கு நாம் பொறுப்பாக வேண்டிய அவசியமில்லை.
அதனால் பணிகள் நடக்கும் இடத்தில் இருந்து சேதாரத்தைக் கண்காணிக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் சேதாரம் என ஒப்பந்தக்காரர்கள் கூறினால் அதைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.
* கான்கிரீட்டுக்கு வலுச் சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகைக் கம்பிகளைப் பயன்படுத்தும் போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கம்பிகளில் உள்ள பிசிறுகளை நீக்கிவிட்டே பயன்படுத்த வேண்டும். துரு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கம்பியின் மீது எவ்விதமான கறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது அடையாளத்திற்காகக் கம்பிகள் மீது பெயிண்ட் அடித்திருக்கக்கூடும். அதுபோல எண்ணெய்க் கறை, சேறு இது போன்ற கறைகளையும் நீக்க வேண்டும். இம்மாதிரியான கறைகளுடன் கம்பியைக் கட்டிடப் பணிகளுக்கு உபயோகித்தால் கம்பி, சிமெண்டுடன் வலுவான பிணைப்பை உண்டாக்காமல் போய்விடும்.
* மின்சார இணைப்பைப் பொறுத்தவரை தரமுள்ள வயர்களை வாங்குங்கள். விலை குறைவாகக் கிடைக்கிறது என்று அதிக ஆற்றல் வீணாகும் வயர்களை வாங்காதீர்கள். அதனால் மின்சாரம் வீணாகி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு உண்டாகும். சுவிட்சுகளின் விஷயத்திலும் கவனம் தேவை. மலிவான வகை சுவிட்சுகள் விபத்தை உண்டாக்கக்கூடியவையாக இருக்கும். வீட்டுக்கு விளக்குகளை அமைக்கும்போது முன்கூட்டியே திட்டமிடுங்கள். அறைக்குத் தகுந்தவாறு வண்ண விளக்குகளை அமையுங்கள்.
* வீட்டுக்கான கதவுகள், ஜன்னல்கள் செய்யும்போது வீண் கவுரவத்திற்காக எல்லாவற்றையும் மரத்தால் செய்ய வேண்டாம். சில முக்கியமான நுழைவு வாயிலை மட்டும் மரத்தைக் கொண்டு செய்யலாம். ஜன்னல்களையும் மரத்தால் செய்யலாம். ஆனால் கழிவறைக் கதவு போன்றவற்றிற்கு ரெடிமேர் பிளாஸ்டிக் கதவுகளைப் பயன்படுத்தினாலேயே போதுமானது. மரப் பொருள்களின் பயன்பாடு வீடு கட்டுவதில் அதிகம் செலவுவைக்கக்கூடியது. அதனால் அதில் கவனமாக இருங்கள். அழகும் பாதுகாப்பும்தான் முக்கியமே தவிர ஆடம்பரம் அல்ல.
* வீட்டை ஒப்பந்த முறையில் கட்ட வேண்டுமா அல்லது பணியாளர்களை நியமித்து நீங்களே கட்டப் போகிறீர்களா என்பதை முன்பே முடிவுசெய்துகொள்ள வேண்டும். 5000 சதுர அடி அளவு வீடு கட்ட நினைப்பவர்கள் தனியாகக் கட்டுமானப் பொறியாளர்களை நியமித்துக்கொள்ளலாம். ஆனால் 800 சதுர அடிக்கும் குறைவான இடத்தில் வீடுகட்ட நினைப்பவர்களுக்குத் தனி கட்டுமானப் பொறியாளர்கள் தேவையில்லை.
அதுபோல கிராமப்புறமாக இருந்தால் ஒப்பந்தம் இல்லாமல் வீடு கட்டும் சாத்தியம் உண்டு. நகர்ப்புறமாக இருந்தால் ஒப்பந்தம்தான் சிறந்தது. அதிலும் ஒரு குழப்பம் வரும்; தொழிலார்களை மட்டும் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாமா, அல்லது கட்டுமானப் பொருள்களுக்கும் சேர்த்து ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாமா என்று.
உங்களுக்கு அலுவலகத்தில் கட்டிடப் பணிகளைக் கவனிக்க விடுமுறை கிடைக்குமா என்பன போன்ற பல விஷயங்களைக் கணக்கில் எடுத்துப் பாருங்கள். நீங்கள் அருகில் இருந்து கவனிக்க முடியவில்லை என்றால் கட்டுமானப் பொருள்களுக்கும் சேர்த்து ஒப்ப்ந்தம் போட்டுக்கொள்வது சரி. எந்த முறையாக இருந்தாலும் தரத்தில் கவனமாக, உறுதியாக இருங்கள்.
* கட்டுமானத்தைப் பொறுத்தவரை சில புதிய யுக்திகளைப் பயன்படுத்தலாம். அதாவது கட்டிட நிபுணர் லாரிபேக்கர் கண்டுபிடித்த எலிப் பொறித் தொழில்நுட்பம் மூலம் சுவர் கட்டும்போது கட்டிடத்திற்கு ஆக வேண்டிய செங்கல் மிச்சமாகும். அதுபோல வீட்டின் அறைகளைப் பிரிப்பதற்கான சுவர்களை அதிகக் கனம் உள்ளதாக உருவாக்க வேண்டியதில்லை.

அடுக்கடுக்கான பிரச்சினைகள்: தீர்ப்பது எப்படி?

சென்னை போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மிக அதிகம். நகரின் இட நெருக்கடியை வைத்துப் பார்க்குபோது அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் இருப்பிடத் தேவைக்குச் சரியான தேர்வு. பல முன்னணி நிறுவனங்கள் நகரின் இடநெருக்கடியைக் கணக்கில் கொண்டு, இப்போது புறநகரில் தங்கள் கட்டுமானத் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அடுக்குமாடிக் குடியிருப்புகள் இன்னும் சென்னை, கோவையைத் தாண்டி தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பிரபலம் அடையவில்லை. இவற்றுக்கு அடுத்தபடியாக மதுரையில், திருச்சியில் சிறிய அளவில் வந்துள்ளன.
ஆனால் இன்னும் அங்கு தனி வீடுகளையே மக்கள் விரும்புகிறார்கள். ஏனென்றால் இந்த அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்கள் குறித்து அவர்களுக்கு அவ நம்பிக்கைகளே மேலோங்கி உள்ளன. ஒரே இடத்தை அந்தக் குடியிருப்பைச் சேர்ந்த எல்லோரும் பகிர்ந்துகொள்வது அவர்களுக்குக் குழப்பமாக இருக்கிறது.
அதை உண்மையாக்குவதுபோல் இன்று அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பலதரப்பட்ட பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன.
உதாரணமாக அடுக்குமாடிக் குடியிருப்பில் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் மற்ற குடியிருப்புவாசிகளிடம் அனுமதி வாங்க வேண்டும். வெளிப்புறச் சுவர்களுக்கு வண்ணம் பூசுவது எல்லோரும் ஒத்துழைத்தால்தான் சாத்தியம். குடியிருப்பில் ஏற்படும் சின்னச் சின்ன பராமரிப்புக்கும் குடியிருப்புவாசிகளே பொறுப்பு.
அதுபோல அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும்போது சில பிரச்சினைகள் தொடங்கிவிடும். ஒப்பந்தம் போட்டு எத்தனை மாதத்திற்குள் வீட்டைக் குடியிருக்கத் தயாராகும் என்பதைத் தெரிவிக்க வேண்டும். ஆனால் சில கட்டுமான நிறுவனங்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வீட்டைக் கட்டித் தருவதில்லை.
அதனால் வங்கிக் கடன் ஒரு பக்கம், வீட்டுக் கடன் ஒரு பக்கம் எனக் கொட்டும் தவிலைப் போல் இரு பக்கமும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு என்ன தீர்வு எனக் கேட்கிறீர்களா?
ஒப்பந்தத்தில் இம்மாதிரி விஷயங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில் வீட்டைக் கட்டி முடிக்கவில்லை என்றால் இப்போதுள்ள வீட்டிற்கான வாடகையை அவர்கள் தர வேண்டும் எனப் பொறுப்பேற்கும்படி ஒப்பந்தத்திலேயே குறிப்பிட வேண்டும்.
கட்டுமான நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை மீறும் பட்சத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் கூட்டமைப்பான கிரடெய்யின் உறுப்பினராக இருக்கும்பட்சத்தில் அங்கு இந்த நிறுவனத்தைப் பற்றிப் புகார் தெரிவிக்கலாம். பொதுவாக அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும் முன் அந்நிறுவனத்தைப் பற்றித் தெளிவாக விசாரித்து வாங்குவதும் உத்தமம்.
கிரெடாய் நுகர்வோர் 
குறைதீர்க்கும் அமைப்பு 
தொடர்புக்கு 1800-11-4000. 
www.credaichennai.in.

சிக்கனம் தரும் வருமானம்


சிக்கனமாக இல்லாதவன் சந்தோஷமாக வாழ முடியாது, எவ்வளவு வருமானம் உள்ளவர்களுக்கும் சிக்கனம் என்பது நன்மை தரும். இதிலென்ன பெரிதாகச் செலவாகிவிடப் போகிறது என்று நாம் நினைக்கும் விஷயங்கள்தான் பெரும்பாலும் செலவுகளை இழுத்துவைக்கும். ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பது சேமிப்புக்கு மட்டுமல்ல, செலவுக்கும் பொருந்தும். பணம் செலவு செய்ததை எழுதிவைக்க வேண்டும். செலவு செய்வது தேவைதானா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வரவுக்குள் செலவை நிறுத்த வேண்டும். இது குடும்ப அமைதியை காக்கும். வீண் செலவுகள் குடும்ப அமைதியைச் சீர்குலைக்கும்.
சிக்கனம் அவமானம் அல்ல
‘எலி வளையானாலும் தனி வளையாக இருக்க வேண்டும்’ என்பதற்கிணங்க ஒவ்வொருவருக்கும் அவரவர் சக்திக்கேற்ற வீடு கட்டாயம் இருக்க வேண்டும். நாளுக்கு நாள் வீட்டு வாடகை அதிகமாகிக்கொண்டே வருவதால் சொந்த வீடு இருந்தால் வாடகைப் பணம் மிச்சமாகும். தற்போது பல இடங்களில் வாடகை இருப்போர் குறிப்பிட்ட ஒரு தொகையை வீட்டு உரிமையாளரிடம் தந்துவிட்டு லீஸ் எடுத்துக்கொள்கின்றனர். லீஸூக்குக் கொடுக்க வைத்திருக்கும் பணத்தோடு வங்கியில் வீடு கட்டுவதற்கான கடனையும் பெற்றால், நமக்கு ஏற்ற வீடு ஒன்றைச் சொந்தமாகக் கட்டிக் கொள்ளலாம். சிக்கனமாகவும் இருக்கும். சிக்கனத்தை அவமானமாகக் கருத வேண்டாம்.
வீட்டில் சிக்கனம்
பழைய மரச்சாமான் கடையில் வேண்டிய கதவு ஜன்னல் அனைத்தையும் வாங்கிவிடலாம். வார்னிஷ் அல்லது பெயிண்ட் அடித்தால் புதியது போலவே இருக்கும். தற்போது பசுமைக் கட்டிடங்கள் வந்துவிட்டன. நீண்டகால நோக்கில் பசுமைக் கட்டிடங்கள் ஆண்டுக்கு 30 சதவிகிதம் மின்செலவை மிச்சப்படுத்துகின்றன. 50 சதவிகிதம் தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்கின்றன. கூடவே ஆரோக்கியத்தையும் அளிக்கின்றன.
பகலில் எந்த அறைகளிலும் மின்விளக்குகள் எரியாத வகையில் ஒவ்வொரு அறைகயையும் போதிய சூரிய வெளிச்சம் மற்றும் காற்று வரும்படி கட்ட வேண்டும். இல்லையென்றால் பெரிய ஜன்னல்கள் அமைக்கலாம். இதனால் வீட்டுக்குள் காற்றோட்டத்துடன் சூரிய வெளிச்சமும் கிடைக்கும். வீடுகளில் ஜன்னல் மற்றும் கதவுகளில் சூரிய பிரதிபலிப்பு மற்றும் ‘டில்டட்’ கண்ணாடிகளைப் பயன்படுத்துவதால் வெளியிலுள்ள வெப்பம் அறைகளுக்குள் வராது.
இதனால் அதிக நேரம் ஏசி, மின்விசிறி போன்றவற்றை இயக்க வேண்டிய தேவையில்லை. ஏசி இருந்தால் அதன் ஏர்பில்டரை மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும் அல்லது மாற்றிட வேண்டும். கூரைகளில் தெர்மாகோல், மரப்பலகை போன்றவற்றால் பால்ஸ்சீலிங் செய்தால் அதிக வெப்பம் இறங்காது. வீட்டைச் சுற்றிலும் அழகிய செடி கொடிகள், மூலிகைகள் வைத்தால் போதும்; சுத்தமான காற்று கிடைப்பதுடன் வீடு அழகாகத் தோன்றும்.
மின்சாதனங்களின் கவனம் வேண்டும்
சாதாரணமாக பல்புகளை மாற்றி விட்டு, குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் சில்.எல்.எப் அல்லது காம்பாக்ட் புளோரசண்ட் விளக்குகளைப் பொறுத்த வேண்டும். சிது ‘சாதாரண பல்புகளைவிட 20 சதவிகிதம் மின்சாரத்தைக் குறைவாக எடுத்துக்கொண்டு, அதே நேரத்தில் 10 மடங்கு கூடுதலாக உழைக்கும். ‘ஆரிசன்ஸ்வெட்’ என்பவர் “சிக்கனம் என்பது பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவிடுகிறார்கள் என்பதைப் பொறுத்ததல்ல; அதை எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறார்கள்” என்பதேயாகும் என்கிறார்.
சூரியஒளி விளக்குகளையும் சூரியஒளி மின்சாரத்தையும் பயன்படுத்தினால் மின்கட்டணத்தில் 80 சதவிகிதம்வரை குறைவு ஏற்படும் (உம்) தண்ணீர் சுட வைப்பதற்குச் சூரிய சக்தியைப் பயன்படுத்தலாம். நடைபாதை மற்றும் பொதுவாக உபயோகிக்கும் இடங்களில், ஆட்கள் நடமாட்டம் இருக்கும்போது மட்டும் எரியும் வகையிலான விளக்குகள் உள்ளன. ‘டிம்மர்’ மற்றும் ‘டைமர்’ விளக்குகளைப் பொறுத்துவதன் மூலம் மின்சாரச் செலவை மிக அதிக அளவில் குறைக்கலாம்.
தேவையான நேரம் தவிர மற்ற நேரங்களில் மின் விளக்கு, மின்விசிறி, தொலைக்காட்சி, அலைபேசி போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. தேவையான நேரத்தில் மட்டும் பயன்படுத்தி மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தலாம்.
வீட்டைவிட்டு வெளியேறும்போது அனைத்து விளக்குகளையும் மின் உபகரணங்களையும் அணைக்க மறக்கக் கூடாது. எப்போதாவது பயன்படுத்தும் மின் உபகரணங்களின் பிளக்கை மாட்டியே வைத்திருக்கக் கூடாது. புதியதாக மின் உபகரணங்களை வாங்கும்போது அவை மின்சக்தியைச் சேமிக்கும் திறன் பெற்றவையா என்பதற்கான எனர்ஜி ஸ்டோர் லேபிளைப்
பார்த்து வாங்க வேண்டும். மின்சக்தியை அதிகமாக இழுக்கும் பழைய மின் உபகரணங்களுக்குப் பதிலாக, புதியவற்றை வாங்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியை அதிக நேரம் திறந்து வைக்காமலும், விரிய திறந்து வைக்காமலும், அடிக்கடி திறக்காமலும் இருக்க வேண்டும். இதனால் மின்சாரம் மிச்சமாகும்.
தண்ணீர்க் குழாய்களில்...
தண்ணீர் புழங்கும் சமையலறைக்கு அருகிலேயே குளியல் அறைக் கழிவறை போன்றவற்றை அமைப்பதால் பிளம்பிங் செலவு குறையும். சமையலறைக்கு மாடுலர் கிச்சன் போன்றவை செலவு அதிகரிக்கும் என்பதால், கடப்பா கற்களை நம் தேவைக்கேற்ப வடிவமைக்கலாம். காய்கறி உட்பட சமையலுக்குத் தேவையான பொருட்களைத் தயாராகப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும். கொதி வந்ததும் தீயின் அளவைக் குறைக்க வேண்டும். முக்கியமாக அடுப்பை சிம்மில் வைத்துச் சமைத்தால் எரிவாயுவைச் சிக்கனப்படுத்தலாம்.
குளியலறையில் உள்ள ஷவர்களில் காற்றுடன் நீர் வெளியேறும் ஷவர்களைப் பயன்படுத்துவதால் குறைவான தண்ணீரே செலவாகும். இது தண்ணீர் சிக்கனத்துக்கு உதவும். குளியலறை மற்றும் சமையலறைகளில் பயன்படுத்திய தண்ணீரைத் தோட்டங்களிலுள்ள செடி கொடிகளுக்குப் பயன்படுத்தலாம். குளியலறை, கழிப்பறை போன்ற வற்றுக்குப் பிளாஸ்டிக் கதவுகளை உபயோகிக்கலாம். முகம், கை துடைக்கப் பயன்படுத்தித் தூக்கி எறியும் டிஷ்யூ பேப்பர்களுக்குப் பதிலாகத் துண்டையே பயன் படுத்தலாம்.
வீடுகளில் ஆங்காங்கே தண்ணீர் குழாய்களை அமைக்காமல் ஒன்றி ரண்டு இடங்களில் மட்டும் குழாய்களை அமைக்க வேண்டும். அதனால் தண்ணீரைச் சிக்கனப்படுத்தலாம். ஆடைகள் அதிகமாக இருக்கும்போது மட்டும் வாஷிங் மிஷின் பயன்படுத்த வேண்டும்.
மின்சார விரயம் தவிர்ப்போம்
கணினி இணைப்பு வயர்கள், ஸ்பீக்கர்கள், இங்க் கேட்ரிட்ஜ், சி.டிக்கள், டிவிடிக்கள் போன்ற கணினி பயன்பாட்டுப் பொருட்களில் பெரும்பாலானவை மறு பயன்பாட்டிற்கு உரியனவாக உருவாக்கப்பட்டுள்ளன. செல்போனில் சார்ஜ் ஆனவுடன் சார்ஜர்களை அனைத்துவிட வேண்டும். அவை சார்ஜில் இருந்தால் மின்சாரம் வீணாகும். அறைகளைச் சுத்தம் செய்ய ரசாயன கிளீனர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கையான கிளீனர்களைப் பயன்படுத்தலாம். ஆரோக்கியத்திற்கும் நல்லது.
வருமானம் என்பது உழைத்துப் பணம் கொண்டுவருவது மாத்திரமல்ல. சிக்கனமும்தான் என்பதை மனதில் கொள்ள வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.

வீட்டை அழகாக்கும் விளக்குகள்

 விளக்குகள் தேவாலயங்களில் காணப்படுவது போல் அறையில் நடுவில் வீட்டின் கூரைகளின் உட்புறம் தொங்கவிடப்படும். இந்த விளக்குகளில் வெளிச்சம் பிரகாசமாக இருக்க வேண்டும், அதே சமயத்தில் அறையில் உள்ளவர்கள் கண்களைக் கூசவைக்க கூடிய அளவில் அதிக பிரகாசமும் நல்லதல்ல. ஆகவே முதன்மை விளக்குகளை பொருத்துவதற்கு முன்னர் இதைப் போன்ற விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
வேலைக்கான விளக்குகள்
நாம் வீட்டில் படிப்பது, தையல், சமையல் போன்ற தினசரி வேலைகளை மேற்கொள்வோம். இந்த வேலைகளைப் பார்க்கத் தேவையான வெளிச்சத்தை நமக்களிக்கும் விளக்குகள் இவை. குறிப்பிட்ட ஒரு பகுதியில் செறிவான ஒளியைப் பெற இந்த விளக்குகளே பயன்படும். எடுத்துக்காட்டாக அறையில் அமர்ந்து படிக்கும்போது, அறை விளக்கை ஒளிரவிடுவதைவிட மேசை விளக்கை ஒளிரவிட்டுப் படிப்பதால் நமது புத்தகத்திற்குப் போதுமான வெளிச்சம் வந்து விழும்.
புத்தகத்தின் மீது போதிய வெளிச்சம் விழுந்தால் உறுத்தலின்றிப் படிக்க முடியும். இதேபோல் ஒப்பனை செய்துகொள்ளும் கண்ணாடி முன் நிற்கும்போது நம்மீது செறிவான வெளிச்சம் விழ உதவுபவையும் இத்தகைய விளக்குகளே. ஒளியின் நிழல் விழாத வகையில் இவை அமைக்கப்பட வேண்டும். இவற்றின் வெளிச்சத்தால் கண்கள் கூசக் கூடாது, மங்கலாக இருந்துவிடவும் கூடாது.
சிருங்கார விளக்குகள்
அலங்காரத்திற்குப் பயன்படும் விளக்குகள் இவை. வீட்டை அழகுபடுத்த சுவர்களில் ஓவியம், காட்சிப் பொருட்கள் போன்றவற்றைத் தொங்க விட்டிருப்போம். இவற்றின் மீது வெளிச்சத்தைப் படரவிட்டுக் காண்போரைக் கவர்ந்திழுக்க இந்த விளக்குகள் உதவும். பெரும்பாலும் இவை கண்களை ஈர்க்கும் வகையிலும், அதேநேரத்தில் கண்களுக்குக் குளுமையான உணர்வைத் தரும் வகையிலும் அமைய வேண்டியது அவசியம்.
வரவேற்பறை விளக்குகள்
வீடுகளின் நுழையும் நண்பர்களும் விருந்தினர்களும் வந்தமர்வது வரவேற்பறையிலேயே. ஆகவே இங்கு ரம்மியமான ஒளி படர்ந்திருந்தால் வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு சந்தோஷமான உணர்வு கிடைக்கும். மிதமான வெளிச்சம் தரத்தக்க விளக்குகளை இந்த அறையில் இடம்பெறச் செய்ய வேண்டும். கலைநயமிக்க அலங்காரமான விளக்குகளை இங்குப் பொருத்தினால் நமது ரசனை வெளிப்படும்.
நண்பர்களிடம் நமது மதிப்பும் உயரும். குறைந்த அடர்த்தி கொண்ட ஒளியைத் தரும் ஹேலஜன் விளக்குகளை இங்கு பொருத்தலாம். ஒளியைக் கூட்டிக் குறைக்கும் வகையிலான விளக்குகளை இங்கு அமைத்தால் தேவையைப் பொறுத்து நாம் வெளிச்சத்தைக் கூட்டிக்கொள்ளவோ குறைத்துக்கொள்ளவோ முடியும்.
சமையலறை விளக்குகள்
சமையலறையில் நாம் சமையல் செய்வதுடன் அதனுடன் தொடர்புள்ள காய்கறிகளை நறுக்குவது, தேங்காய் துருவுவது போன்ற பிற சமையல் வேலைகளையும் செய்வோம். வேலைகளுக்கு உதவும் வகையில் அமைய வேண்டும். சமையலறையின் விளக்குகள் சமையல் மேடையை நன்கு ஒளியூட்ட வேண்டும். அதேபோல் அறை முழுவதும் நன்கு வெளிச்சம் படர வேண்டியதும் முக்கியம். இந்த அறையுடன் இணைந்திருக்கும் பகுதியில் உணவு மேசைக்கு மேலே தொங்கும் விளக்குகளை அமைத்தால் சாப்பிடும்போது நல்ல வெளிச்சம் கிடைக்கும்.
பிற விளக்குகள்
படுக்கையறையில் மெல்லிய வெளிச்சம் பாய்ச்சும் விளக்குகள் அமைய வேண்டும். மனதுக்கு அமைதி தரும் வகையிலான வண்ணத்தில் ஒளியைப் படரவிடும் விளக்குகளை இங்கே பொருத்த வேண்டும். குறைந்த ஆற்றலிலும் அதிக வெளிச்சம் தரும் சிஎஃப்எல் பல்புகளைக் குளியலறையில் பொருத்தலாம். இதுபோக ஷேவிங் போன்றவற்றுக்கு உதவ வாஷ் பேசின் மேலே வெளிச்சத்தைப் படரவிடும் வகையில் பிரத்யேக பல்பைப் பொருத்திக் கொள்ளலாம்.
தனி வீடுகளுக்கு பிரத்யேகமான அழகை அளிக்கவும் விளக்குகள் உதவுகின்றன. வீட்டைச் சுற்றி அமைக்கப்படுபவை இவை. இரவு முழுவதும் ஒளிர வேண்டியவை என்பதால் அதிக மின்னாற்றல் தேவைப்படாத விளக்குகளை இங்கே அமைக்கலாம்.
இவையெல்லாம் சரி. மின்சாரச் செலவைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவசியமற்ற நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட வேண்டும் என்பது இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது.

இனிய இல்லக் குறிப்புகள்

சொந்த வீடு கட்ட வேண்டும் என எல்லோருக்கும் கனவு இருக்கும். ஆனால் அப்படிக் கட்ட முடிவுசெய்த பிறகு சில விஷயங்களில் நாம் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அவசர, அவசரமாக இடத்தைத் தேர்வுசெய்துவிட்டால் பின்னால் சிரமப்படுவது நாமாகத்தான் இருப்போம். அதனால் ஆயுள் முழுக்க இருக்கப்போகும் இடத்தை நிதானத்துடன் தேர்வுசெய்ய வேண்டும்.
இடம் தேர்வு செய்தல்
முதலில் எந்த ஊரில் எங்கு மனை வாங்குவது என்பது குறித்துத் தெளிவாக முடிவு செய்யுங்கள். அந்த மனைக்குச் செல்லும் வழி முக்கியமான பேருந்துகள் அதிகம் செல்லும் சாலையுடன் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியம். மனைக்குச் செல்லும் சாலை குறைந்தது இருபத்து மூன்று அடி அகலம் இருக்க வேண்டும். மனை வாங்கும் ஏரியா வளர்ச்சி பெறக் கூடியதாக (development) இருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாகவும், வீடுகட்ட உபயோகிக்கக் கூடியதாகவும் இருத்தல் அவசியம். மனைக்கு அரசு ஒப்புதல் கிடைத்திருக்க வேண்டும். மனை வாங்குமிடம், மனைவி மற்றும் குழந்தைகள் மனதுக்குப் பிடித்திருக்க வேண்டும். அக்கம் பக்க மனைகளில் ஒரு சில வீடுகளாவது உள்ளதா, அப்படியானால் எத்தனை ஆண்டுகளாக அவர்கள் அங்கு வசிக்கிறார்கள் என்ற விவரங்களைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அப்போதுதான் அந்தப் பகுதியின் வளர்ச்சி வேகத்தைத் தெரிந்துகொள்ள முடியும். எதிர் காலத்தில் அந்தப் பகுதியில் அரசு அல்லது தனியார் எவரேனும் ஏதேனும் கட்டுமானப் பணிகள் செய்ய இருக்கின்றனரா என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அப்படி இருக்கும்பட்சத்தில் அதனால் நாம் வாங்க இருக்கும் மனைக்குப் பாதிப்பு ஏற்படுமா என்ற விவரங்களை நமக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் நேரே சென்று அந்தந்தத் துறையினரைச் சந்தித்து விவரங்கள் கேட்பது நல்லது. குறைந்தது வீட்டிற்கு வெளியே தினமும் செல்லும் குழந்தைகளின் கல்விச்சாலை அல்லது கணவன் மனைவி இவர்களின் அலுவலகம் வீட்டிலிருந்து எளிதில் சென்று வரக்கூடியதாக அமைய வேண்டும். அவசரத்தேவைகளுக்குச் சிறிய பெட்டிக் கடையாவது அந்தப் பகுதியில் இருக்க வேண்டும். ஆவணங்களைச் சரிபார்த்தல் இப்போது நாம் வாங்க இருக்கும் மனை விற்பவரிடம் சென்று, அவரிடம் உள்ள ஆவணங்களைப் பார்க்க வேண்டும். ஆவணங்கள் பார்க்கத் தெரிந்தவர்கள் எவரேனும் உடன் இருத்தல் அவசியம். அந்த இடத்திற்கு வில்லங்கச் சான்றிதழ் (Encumbrance Certificate - EC) வாங்க வேண்டும். வில்லங்கம் எதுவும் இல்லை என்று தெரிந்த பிறகு பத்திரப்பதிவு செய்யலாம். தேவைப்பட்டால் வழக்கறிஞர் அறிவுரைக்குப்பின் பத்திரம் பதிவுசெய்யலாம்.
பதிவுசெய்யப்பட்ட ஆவணங்கள் கிடைத்தவுடன், ஒவ்வொன்றிலும் நான்கு நகல்கள் எடுத்து வைத்துக்கொள்வது பின்னர் உதவிகரமாக இருக்கும். மனை சம்பந்தப்பட்ட மூல ஆவணங் களைத் தேவை இல்லாமல் வெளியேகொண்டு செல்வதைத் தவிர்க்கவும். நகல்களை மட்டுமே எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொள்ளவும்.
திட்டமிடல்
நமக்கு எத்தனை அறை தேவை, கழிப்பறை எத்தனை, சமையல் செய்ய அறை, ஹால், கார் நிறுத்தும் இடம், மற்ற தேவைகள் என்ன என்பதனையும், கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்துதல் முதலியவற்றையும் வீட்டில் உள்ள அனைவரும் உட்கார்ந்து பேசி முடிவு செய்ய வேண்டும். இதற்கிடையில் கடன் தரும் வங்கிகளில் வாங்கப் போகும் கடன் தொகைக்குத் தவணைத்தொகை (Equated Monthly Instalment -EMI) பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு எவ்வளவு செலுத்த வேண்டும் எனத் தெரிந்து வைத்துக்கொள்வது நலம். தரையில் இரண்டு படுக்கை அறைகள் போதுமானது. தேவைப்பட்டால் மாடியில் குளியலறையுடன் கூடிய ஓர் அறை கட்டிக்கொள்ளலாம். இதன் மூலம் கட்டுமானச் செலவுகள் கணிசமாகக் குறைய வாய்ப்பு உள்ளது. அனுமதி பெற்ற கட்டிடப் பொறியாளரிடம் உங்கள் தேவைகளைச் சொல்லி வீட்டின் வரைபடம் வரைந்து முறையான அனுமதிபெற வேண்டும்.
வீட்டுக் கடன்
இனி நீங்கள் எந்த வங்கியில் வீடு கட்ட கடன் வாங்க முடிவு செய்தீர்களோ அங்கு உங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி கடிதம், உங்கள் வருமானச் சான்று, மற்றும் கடன் விண்ணப்பம் இவற்றுடன் செல்லாம். அங்கு வீட்டு வசதி கடன் பிரிவு அதிகாரியை நேரில் சந்தியுங்கள். இடைத்தரகர் எவரும் தேவை இல்லை. நீங்கள் அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். அவர் கேட்கும் கேள்விகள் உங்கள் வருமானம், குடும்பத்தில் உள்ள நபர்கள், உங்களால் மாத தவணை எவ்வளவு செலுத்த இயலும், உங்களின் இதர கடன் சுமை போன்றவற்றைக் குறித்ததாக இருக்கும்.
பொறியாளரைத் தேட வேண்டும்
கடன் தொகை கிடைத்துடுவிடும் என்றவுடன் நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன? சுமார் பதினைந்து அல்லது இருபது வருடங்கள் அனுபவமிக்க பொறியாளரைத் தேடிப்பிடிக்க வேண்டும். பொருட்களை நீங்களே வாங்கித்தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்துகொள்வது நல்லது. அதற்கு முன் அவர் சமீபத்தில் கட்டிய இரண்டு அல்லது மூன்று கட்டிடங்களைப் பார்வையிடுவது அவசியம். அந்தந்த வீட்டு உரிமையாளர்களிடம் பேசி பொறியாளரின் பணிகள் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்வது நல்லது. அதனால் பின்னால் வரக்கூடிய பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
கட்டுமானப் பொருள்கள்
வேலை தொடங்கியவுடன் அடுத்த நாள் செய்யப்போகும் வேலைகள் என்ன? அதற்கு தேவையான பொருட்கள் நம்மிடம் உள்ளனவா எனத் தெரிந்து கொள்வதும் அவசியம். மற்றபடி இதற்கு முன்பு சமீபத்தில் வீடுகட்டிய உறவினர்கள் அல்லது நண்பர்கள் ஆலோசனை பெற்று தச்சர், பெயின்டர், கிரானைட் அல்லது மார்பிள் வேலை செய்பவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளலாம். இம்மாதிரி திட்டமிட்டு வேலைகள் செய்ய வேண்டும். கடைசியாகக் கட்டிடப் பணிகள் முடிந்ததும் மின் இணைப்புப்பெற விண்ணப்பிக்க வேண்டும். மின் இணைப்பு பெற்றதும், சொந்தவீட்டுக்குக் குடிபுகுந்து, ஆனந்த வாழ்க்கையைத் தொடங்க வேண்டியதுதான்.

பட்டா வாங்க பட்ட பாடு

ஒரு வீடு அல்லது வீட்டுமனை வாங்குவது என்ற கனவை நனவாக்குவது மிகவும் எளிதுதான். அதற்கு முதலில் சரியான திட்டமிடல் வேண்டும். அதன் பிறகு நிறைய இடங்களைச் சென்று பார்க்க வேண்டும். இதில் எங்கேயும் அலுப்போ தயக்கமோ கூடாது.
இதை எனது அனுபவத்தில் இருந்து சொன்னால் உங்களுக்கு எளிதாகப் புரியும். நானும் சென்னைக்கு வந்த புதிதில் சொந்த வீடு அல்லது வீட்டு மனை பற்றிக் கொஞ்சமும் நினைத்துப் பார்த்ததில்லைதான். ஆனால் நாளாக நாளாகச் சொந்தமாக வீடு அல்லது வீட்டுமனை வாங்குவது பற்றிய கனவு என் நெஞ்சிலும் பூக்க ஆரம்பித்தது. முதலில் நம்மாலும் ஒரு வீட்டுமனையை வாங்கிட முடியுமா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அதன் பின் ஏன் முடியாது? என்று தன்னம்பிகையுடன் ஒவ்வோர் அடியாக எடுத்து வைத்தேன். நேரமும் சூழ்நிலையும் ஒத்துழைத்தது.
மனைத் தேர்வு
முதலில் நமக்கான மனையைத் தேர்வு செய்ய வேண்டுமே! அதற்காக நண்பர்களுடன் பல இடங்களுக்குச் சென்று பலவிதமான வீட்டுமனைகளைப் பார்த்து வந்தோம். பார்த்துப் பார்த்து ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து வாங்கினேன். என்னுடன் நண்பர்கள் பத்துப்பேரும் சேர்ந்து வாங்கினார்கள். பத்திரப் பதிவும் இனிதே நடந்து முடிந்தது.
நாங்கள் இப்போது ஒரு குழுவாக உருவாகிவிட்டோம். வீட்டுமனை வாங்குவது என்றால் வெறும் பத்திரப் பதிவோடு முடிந்து விட்டதா என்ன? அதற்கான பட்டா பெற வேண்டுமே! அடுத்த சில மாதங்கள் சென்றதும் நாங்கள் வாங்கிய வீட்டுமனைக்கான பட்டா பெறுவதற்காக விண்ணப்பித்தோம். அதற்கான கிராம நிர்வாக அதிகாரியைச் சந்தித்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து அவரிடம் ஒப்படைத்தோம். உடன் அதற்கான ஒப்புகைச் சீட்டினையும் பெற்றுக் கொண்டோம்.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டதால் அதனைப் பெற்றுக்கொண்ட நாங்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்றோம். அந்த ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டிருந்த நான்காவது வெள்ளிக்கிழமை எப்போது வரும் என்று காத்திருந்தோம். அந்த நாளும் வந்தது. அதில் குறிப்பிட்டிருந்தபடி அனைத்து ஆவணங்களுடன் சென்றோம். அன்றே எங்கள் அனைவருக்கும் பட்டா கிடைத்துவிடும் என்று நினைத்திருந்தோம்.
கடைசியில் எங்கள் அனைவருக்கும் பெருத்த அளவில் ஏமாற்றமே கிடைத்தது. அன்று மட்டுமல்ல அதற்கு அடுத்தடுத்த வாரங்களிலும் திருப்பி அனுப்பப்பட்டோம். நம்பிக்கையும் கொஞ்சங்கொஞ்சமாக நழுவிக் கொண்டிருந்தது.
அரசு அலுவலர்களின் அஜாக்கிரதை
இப்படியாக வருடக்கணக்கில் அலைக்கழிக்கப்பட்டோம். இதற்காக சர்வேயரையோ அல்லது மற்ற அலுவலர்களையோ நான் குற்றம் குறை சொல்லப் போவதில்லை. அவர்களுக்கும் அவ்வளவு வேலைப் பளு. அவர்கள் என்னதான் செய்ய முடியும். ( ஆனால் வேலைக்கு வருவதென்னவோ பத்தரை அல்லது பதினொண்ணுக்குத்தான்)
வெளியிலும் நிலங்களை அளந்து குடுத்துவிட்டு வர வேண்டுமல்லவா?
நாங்களும் அலைந்து அலைந்து என் நண்பர்கள் எல்லோரும் நம்பிக்கையைச் சுத்தமாக இழந்து விட்டார்கள். அவர்கள் முறையான வழியில் போனால் பட்டா கிடைக்காது என இடைத்தரகர்களை அணுக ஆரம்பித்தார்கள். அல்லது இடைத்தரகர்கள் அவர்களை நாடி வந்தார்கள் எனச் சொல்லலாம். ஆனால் நான் மட்டும் நம்பிக்கையோடு இருந்தேன். என் நண்பர்கள் நினைத்ததுபோல இடைத்தரகர்களில் பட்டா ஒன்றுக்கு ரூபாய் பத்தாயிரம் வரைக்கும் கொடுத்து தங்களுக்கான பட்டாக்களை வாங்கிவிட்டார்கள். என்ன ஆனாலும் சரி என்று நானும் காத்திருந்தேன். ஒன்றும் நடக்கவில்லை.
வட்டாட்சியரைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்தேன். அவரும் நடவடிக்கை எடுக்கக் கோரி எழுத்துப் பூர்வமாக உத்தரவிட்டார். அப்படியும் காரியம் ஆகவில்லை. “உங்க பத்திரத்துல ஒரு டாக்குமெண்ட் இல்ல. நீங்க யாருகிட்ட நிலம் வாங்கினீங்களோ அவங்களையே கேட்டு வாங்கிட்டு வாங்க” என்றார் சர்வேயர். பத்திரப் பதிவு அலுவலகத்திலேயே அனைத்துப் பக்கங்களும் வரிசை எண் போடப்பட்டுத்தான் பதிவுசெய்யப் பட்டிருந்தது. இதில் எந்தப் பக்கத்தைக் கேட்டாரோ தெரியவில்லை.
நானும் பொறுமையாக ஏகப்பட்ட அலைச்சல்களுடன் காத்திருந்தேன். சாமானியர்களால் அப்படிப் பொறுமை காத்திடவோ கண்ட நேரத்திற்கும் அலைந்திருக்கவோ முடியாதுதான். இறுதியில் அதிர்ஷ்ட தேவதை அழைத்தாள். ஆம் எனக்கும் பட்டா கிடைத்துவிட்டது. அது சும்மா கிடைத்ததல்ல. அதன் பின்னே என் உழைப்பு (பொறுமை+அலைச்சல்) இருக்கிறது. இந்தப் பொறுமையும் அலைச்சலும் பலருக்கு இருப்பதில்லை. அரசு அலுவலகங்களில் காரியம் சாதிக்க இது அவசியம். இதில் மற்றவரைக் குற்றம் சொல்ல அந்தப் பலருக்கும் தகுதியில்லை.
நிகழ்ந்த பேரற்புதம்
பட்டாதான் கிடைத்துவிட்டதே என்று இருந்துவிட முடியாது, இருந்துவிடக் கூடாது. அதன் பின் சிட்டா, அடங்கல் என்ற ஒரு விஷயமும் இருக்கிறது. அவற்றை நமது மனை அமைந்துள்ள ஏரியாவின் கிராம நிர்வாக அலுவலரிடமே (VAO) வாங்கிவிடலாம். அதற்கு அனைத்து விதமான அசல் ஆவணங்களோடும் நாம் அவரை நாடிச் செல்ல வேண்டும்.
நானும் அப்படித்தான் சென்றேன். இதற்கு இனி எத்தனை மாதங்கள் அலைய வேண்டுமே என நினைத்துக் கொண்டு ‘நெஞ்சில் பேருறுதி கொண்டு’ சென்றேன். அங்கு எனக்குப் புதுவிதமான அனுபவம் ஏற்பட்டது. அந்த அலுவலர், ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார். சொன்னேன். அசல் ஆவணங்களை வாங்கிப் பார்த்தவர் சரசரவென சிட்டா, அடங்கலை உடனே போட்டுக் கொடுத்துவிட்டார். இது அவரைப் பொறுத்தவரை ஒரு சாதாரண காரியமாகத் தெரிந்தாலும் எனக்குப் பேரற்புதமாகத் தெரிந்தது. இம்மாதிரியான அற்புதங்களை நிகழ்த்தக்கூடிய அலுவலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என அவரை மனதுக்குள் பாராட்டிவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பினேன்.

சொந்த வீட்டிற்குச் சில யோசனைகள்

வீடு கட்டுவதில் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை வேறு. இன்றைக்குள்ள நிலை வேறு. இன்று வீடு கட்டுபவர்களை விட அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்குபவர்களே அதிகம். இதற்குக் காரணம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் வீட்டு மனைகள், கட்டுமானப் பொருள்கள் ஆகியவற்றின் விலையேற்றம். அதுமட்டுமல்ல இப்போத்து கட்டுமானத்திற்கு மிக அவசியமான மணல் போன்றவற்றிற்கு நிலவும் தட்டுப்பாடும் ஒரு காரணம். இன்றைக்குள்ள பரபரப்பான வாழ்க்கையில் இவை ஒவ்வொன்றிற்கும் அலைந்து திரிந்து வீட்டைக் கட்டப் பெரும்பாலானவர்களுக்குப் பொறுமை இல்லை.
சொந்த வீட்டின் அவசியம்
இன்றைக்கு உள்ள இந்த நிலையிலும் தங்களுக்கெனச் சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டு சிறிய தோட்டம் அமைத்துச் சந்தோஷமாக வாழ ஆசைப்படுவர்கள் உண்டு. நகருக்குள் மனை வாங்க இயலாத காரணத்தால் நகர்ப் பகுதியை விட்டுவிட்டு புறநகர்ப் பகுதிகளில் சமாளிக்கும் வகையில் வாங்கி கடன் வாங்கி வீடு கட்டுகிறார்கள்.
அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கினால் குடிபுகுமுன் மொத்தப் பணத்தையும் செலுத்திவிட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஆனால் கட்டப்படும் தனி வீடுகளில் அது இல்லை. சிலவற்றை முடிக்க முடியாமல் போனால் கூட நாளடைவில் முடித்துக்கொள்ளலாம் என்கிற வசதி உள்ளது. இப்போதெல்லாம் வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு முன்னுரிமை தருகிறார்கள். இன்றைய தலைமுறை இளைஞர்கள் குறிப்பாக நடுத்தர வருவாயுள்ளவர்கள் சொந்த வீட்டின் அவசியத்தை நன்குணர்ந்துள்ளனர்.
திருமணத்திற்கு முன்பே வீடு வாங்குவதில் ஆர்வமாகவும் முனைப்பாகவும் இருக்கிறார்கள். திருமண ஜோடியைத் தேடும் விளம்பரங்களில் எல்லா வசதிகளையும் வீட்டு உபயோகப் பொருள்களையும் கொண்ட சொந்த வீடு உள்ளது என்பதைப் பெருமையுடன் சொல்வதைப் பார்க்க முடிகிறது. இச்சூழ்நிலையில் தனி வீடு கட்டுபவர்கள் சந்திக்கும் சிரமங்களை முன்கூட்டியே புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் தீர்மானித்துச் செயல்படுவது நல்லது.
அளைவைக் கூட்ட வேண்டாம்
கட்டப்படும் வீட்டின் வரைபடம் தயாரிக்கும்போதே பட்ஜெட்டுக்குத் தகுந்தவாறு தயாரிப்பது அவசியம். வீடு கட்ட முற்படும்போது மனதில் எழும் ஆசைகள், கனவுகள் பட்ஜெட் தொகையை மறக்கடித்துவிடும். ‘வீடு கட்டும்போது பார்த்துக்கொள்ளலாம்’ ‘அட்ஜெஸ்ட் செய்துவிடலாம்’ ‘சமாளித்து விடலாம்’ என்றெல்லாம் தோன்றும். ஆனால் இம்மாதிரி அஜாக்கிரதை வீட்டைக் கட்டி முடிக்க முடியாமல் திணற வைக்கக்கூடும்.
வரைபடத்தில் உள்ள அளவுகளில் ஓரடி கூட்டினால் நாம் திட்டமிட்ட பட்ஜெட்டில் பெரிய அளாவு துண்டு விழும். இதை இப்போதே நினைவில் கொள்ளலாம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் வீடு கட்டினார். வானம் தோண்டப்பட்டுக் கிடந்த நிலையில் நண்பரின் மனைவில் வந்து பார்த்துள்ளார். வானம் தோண்டப்பட்ட நிலையில் அறைகள் சிறியதாகத்தான் தெரியும். ஆனால் கட்டி முடிக்கும்போதுதான் அதன் முழு வடிவத்தை நாம் காண முடியும். மனைவிக்கு சமையலறையும் படுக்கையறையும் சிறியதாக இருப்பாகத் தோன்றியுள்ளது.
கணவர் குறைபட்டுக்கொண்டார். நண்பரும் மனைவியின் விருப்பதிற்கிணங்க அறையை அகலப்படுத்தியுள்ளார். இரண்டு மூன்று அடிகள்தான் அகலப்படுத்தினார். ஆனால் அவர் திட்டமிட்டிருந்த பட்ஜெட்டில் 5 லட்சத்திற்மும் மேல் அதிகரித்தது.
காற்று வர வழிசெய்வோம்
வீட்டினுள் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டுமானால் வீட்டினுள் காற்று நுழைந்து வெளியேறும் வகையில் கதவுகளையும், ஜன்னல்களையும் அமைக்க வேண்டும். கதவுக்கு நேராக கதவு, ஜன்னலுக்கு நேராக ஜன்னல் அமைத்தால் காற்றோட்டம் நன்றாக இருக்கும். எல்லா அறைகளிலும் ஜன்னல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் ஆரோக்கியத்திற்கு வெளிச்சமும் காற்றும் அவசியம்
பரணைத் தவிர்ப்போம்
படுக்கையறை அறைகயின் எல்லாப் பக்கங்களில் பரண் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் வரவேற்பறையிலும் தேவையில்லாமல் பரண் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் பரண் அமைக்கும்போது அதில் தூசிகள் அடையும். ஒட்டடைகள் உருவாகும். அதுபோல பல்லி, கரப்பான், ஆகியவற்றின் வசிப்பிடமாக இம்மாதிரியான பரண் ஆகிவிடும்
தளத்தை உயர்த்துவோம்
பொறியாளரின் முறையான ஆலோசனையைப் பெற்று வீட்டுத் தளத்தின் உயரத்தைப் பத்தடிக்கு மேல் சற்று உயர்த்தினால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். கோடைக் காலத்தில் மொட்டை மாடியிலிருந்து வீட்டினுள் இறங்கும் வெயிலும் தக்கம் சற்றுக் குறைவாக இருக்கும். தென்னை மட்டைகளை மொட்டை மாடி முழுவதும் இல்லாவிட்டாலும் படுக்கையறை, வரவேற்பறைப் பகுதிகளிலும் பரப்பிவைத்தால் வெயிலின் தாக்கம் பெருமளவு இருக்காது.
தளங்களை மேம்படுத்துவோம்
கூடுமான வரையில் வழுக்கும் தளங்களை அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படியான வழுக்கும் டைல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குப் புழங்குவதற்கு ஏற்றதாக இருக்காது. குளியலை, கழிவறை போன்ற அறைகளில் சொரசொரப்பான டைல்களையே அமைக்க வேண்டும்.
மின் இணைப்பையும் திட்டமிடலாம்
சமையலறை, படுக்கையறை, கழிவறை போன்ற அறைகளில் நமது உபயோகத்திற்குத் தகுந்தவாறு விளக்குகளை அமைத்துக்கொள்ள வேண்டும். மின்சிக்கனம் அவசியம் என்பதால் எல்லா அறைகளுக்கும் அதிக மின் சக்தியை எடுக்கும் விளக்குகள் பொருத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும் எங்கெங்கு மின் இணைப்பு தேவைப்படும் என்பதை முதலிலேயே தீர்மானித்து கட்டிடத்திற்குள்ளே குழாய்களைப் பதித்துவிடுவது நல்லது. கட்டிடம் கட்டி முடித்த பிறகு குழாய் இணைப்பிற்காகத் துளையிடுவதைத் தவிர்க்கலாம்.
கடைசியாகத் சில வார்த்தைகள்
வீட்டின் கூரையில் விழும் மழை நீரை விரயம் செய்யாத வகையில் எல்லா மழை நீரையும் நேரடியாக நீரைச் சேமிக்கலாம். இல்லையெனில் பூமிக்குள் இறக்கலாம். அதற்கான முறையான மழை நீர் சேகரிப்பு நடைமுறைகளின் படி அமைக்கலாம். மேலும் வாஸ்து, ஐஸ்வர்யம் என்ற பெயரில் அதிக அளவு செடிகோடிகளை வீட்டிற்குள் வளர்க்காதீர்கள் வீட்டிற்குள் பூச்சிகளும் மரவட்டைகளும் கொசுக்களும் தொல்லை தர ஆரம்பித்துவிடும்.

மனைவி சொத்தில் கணவனுக்கு உரிமை உண்டா?

ஒரு சொத்துக்கு வாரிசுதாரர்கள் எந்த வகையில் உரிமை கோர முடியும் என்பது அந்தச் சொத்து எந்த வகையில் வந்தது என்பதைப் பொறுத்து இருக்கிறது. பூர்வீகச் சொத்தாக இருந்தால் அதில் உடைமையாளரின் மகனுக்கும் பின் அவருடைய பேரனுக்கும் உரிமை உண்டு.
அதே சமயத்தில் ஒருவர் தன் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தாக இருந்தால் அந்தச் சொத்துக்கான உரிமை அவருக்கு மட்டுமே உரித்தானது. அந்தச் சொத்தில் மற்ற எவரும் உரிமை கோர முடியாது. அவருடைய காலத்திற்குப் பிறகு அந்தச் சொத்தை தன் விருப்பப்படி யாருக்கும் எழுதி வைக்கும் உரிமை அவருக்கு உண்டு. அது எவருடைய தலையீடுக்கும் அப்பாற்பட்டது.
அவரது வாரிசோ, உறவினரோ யாரும் அந்தச் சொத்தின் மீது உரிமை கொண்டாடவும் முடியாது. இன்னொரு முறையில் பார்த்தால் மனைவியின் சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா என்னும் ஒரு கேள்வி வருகிறது. மேற்சொன்ன முறையில் பார்த்தால் ஒரு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்து வந்தாலும், அது அந்தப் பெண்ணுக்கு மட்டுமே உரிமை உடைய சொத்து.
அதாவது பெற்றோர் தன் பெண்ணில் நலத்திற்காக அவருக்கு ஒரு சொத்தை எழுதிவைக்கிறார் என்றால், அந்தச் சொத்து அவளுக்கு மட்டுமானதுதான். ஒரு கணவன் தன் சுய சம்பாத்தியம் மூலம் தன் மனைவி பெயருக்கு ஒரு சொத்தை வாங்குகிறார் என வைத்துக்கொண்டால் அந்தச் சொத்திலும் கணவன் உரிமை கொண்டாட முடியாது.
எந்த வகையில் ஒரு பெண்ணின் பெயரில் சொத்துப் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் அதற்கு அந்தப் பெண் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் ஒரு பிரிவு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்து வந்தாலும் அது அவருக்கு மட்டுமே உரிமை உடைய தனிபட்ட சொத்து என்கிறது. இதன்படி கணவன், மனைவி பெயரில் இருக்கும் சொத்தில் தனக்கும் உரிமை உண்டு எனச் சொந்தம் கொண்டாட முடியாது என்பது தெளிவாகிறது. ஒரு பெண் தனக்கு உரிமைப்பட்ட சொத்தைத் தன் காலத்திற்குப் பிறகு யாருக்கும் எழுதி வைக்க முடியும்.
கணவன் தன் வருமானத்தின் மூலம் வாங்கிய சொத்தை மனைவி பெயரில் பத்திரப் பதிவு செய்திருந்தாலும் அந்தச் சொத்தில் கணவருக்கு உரிமை இல்லை. அதே சமயம் சட்டப்படி அந்தச் சொத்தைப் பெற ஒரு வழி இருக்கிறது. அந்தச் சொத்து வாங்கியதற்காகச் செலுத்தப்பட்ட பணம் தன்னால் மட்டுமே அளிக்கப்பட்டது என்பதை உரிய ஆவணங்களுடன் நிரூப்பிக்கும்பட்சத்தில் இது சாத்தியம்.

ஆவணங்கள் சரிபார்ப்பு அவசியம்

ஒரு வீடோ நிலமோ வாங்குகிறோம் என்றால் அந்தச் சொத்து நமக்கு உரிமையானது என்பதை எப்படி உறுதி கூறுகிறோம். சொத்து தொடர்பான ஆவணங்கள் எல்லாம் நமது பெயரில் பதியப்பட்டிருந்தால்தான் அந்தச் சொத்துக்கு உரிமையாளர் ஆவோம். ஆவணங்களில் பிழை இருந்தால் நமது உரிமை கேள்விக்குள்ளாக்கப்படும். இப்போது எல்லாம் காகிதத்தில் இருக்க வேண்டும். வெறும் வாக்கு, வாய்ச் சொல்லுக்கு எந்த அர்த்தமும் இல்லை. அதனால் சொத்து வாங்கும்போது ஆவணங்களைச் சரிபார்ப்பது முக்கியமான விஷயம்.
நாம் வாங்கும் சொத்தின் அனைத்து விவரங்களையும் அதன் மூலப் பத்திரத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம். சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்துகொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண். அந்தச் சொத்தை அடமானம் வைத்து ஏதேனும் கடன் வாங்கப்பட்டிருந்தாலும் அதுவும் தெரிந்துவிடும். சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதிக் கொடுத்திருந்தாலும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.
சொத்து தொடர்பான ஆவணங்களில் முக்கியமானது வில்லங்கச் சான்றிதழ். சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்துகொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண். அந்தச் சொத்தை அடமானம் வைத்து ஏதேனும் கடன் வாங்கப்பட்டிருந்தாலும் அதுவும் தெரிந்துவிடும். சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதிக் கொடுத்திருந்தாலும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.
அசல் ஆவணம் இல்லாமல் நகல் ஆவணத்தை வைத்து சிலர் சொத்தை விற்கத் துணிவார்கள். அப்படியிருக்கும்பட்சத்தில் நகல் ஆவணத்தை வைத்து இறுதி முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அசல் ஆவணம் உண்மையிலேயே தொலைந்துவிட்டதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். சில விஷயங்கள் வில்லங்கச் சான்றிதழில் வராமல் போக வாய்ப்புள்ளது. அசல் ஆவணங்களை வங்கியில் வைத்துக் கடன் வாங்கியிருக்கக்கூடும். அதனால் இவற்றைத் தெளிவாக உறுதிசெய்துகொள்வது அவசியம்.
மேலும் சொத்தை விற்பவர் கொடுக்கும் ஆவணத்தையும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து நகல் ஆவணத்தையும் வாங்கிச் சரிபார்க்க வேண்டும். இரண்டிலும் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கின்றனவா எனச் சரிபார்க்க வேண்டும். முக்கியமாக சர்வே எண், பத்திரப்பதிவு உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். பத்திரத்தில் உள்ள கையொப்பத்தைச் சரிபார்ப்பது அவசியம். உங்களிடம் தரப்பட்ட முழுவதும் போலியாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

வீடு என்ற பெருங்கனவு

சொந்த வீடு என்பது எல்லோருக்குமே அமைந்துவிடாது. சொந்த வீடு என்ற பெருங்கனவை அடைய எவ்வளவு மெனக்கெட வேண்டும் என்பதை அதில் அனுபவ ரீதியாக உணர்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். என்னுடைய சொந்த வீடு கதையைப் படித்தால் அது உங்களுக்குப் புரியும்.
எனக்கு இப்போது 68 வயதாகிறது. தோட்டத்துடன் ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது என்னுடைய வாழ் நாள் கனவு. 5 ஆயிரம் சதுரடி மனை வாங்கி, தோட்டத்துடன் கூடிய ஒரு வீட்டைக் கட்டி என் கனவை நனவாக்கினார் என் கணவர். ஆனால், கட்டிய வீட்டில் நிறைவாக வாழமுடியவில்லை.
என் கணவருக்கு வெளியூருக்குப் பணி மாற்றல் ஆனது. சொந்த வீட்டை விட்டுவிட்டு அங்கு ஒரு சிறிய வீட்டில் வாடகை வீட்டில் குடியேறினோம். சொந்த வீட்டில் இருக்க முடியவில்லையே என்ற கவலை. இருந்தாலும் எங்கோ ஒரு இடத்தில் சொந்த வீடு இருக்கிறதே என்பதில் ஆறுதல் கிடைத்தது.
காலத்தின் கொடுமையை என்ன சொல்வது? என் கணவர் திடீரென மாரடைப்பால் இறந்தார். இடி என் தலையில் இறங்கியது. அவரின் மாதச் சம்பளம் என்ன? வரவு, செலவு என்ன? என்று எதுவும் எனக்குத் தெரியாது.
அவர் என்னிடம் இதைப் பற்றியெல்லாம் சொன்னதும் இல்லை. நான் கேட்டதும் இல்லை. அது அந்தக் காலம். எங்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் இருந்தனர். இருவரும் அப்போது படித்துகொண்டிருந்தார்கள்.
என் கணவர் பொதுத்துறை வங்கியில் பணிபுரிந்தார். அப்போதெல்லாம் இந்தளவுக்கு சம்பளம் கிடையாது. வங்கியில் வீட்டுக் கடன் வேறு இருந்தது. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வங்கி மூலம் கிடைத்த தொகையோ மிகமிக சொற்பமாக இருந்தது.
என் பிள்ளைகளைக் கரையேற்ற வேண்டும். தடுமாறி நின்ற எனக்கு அந்த வீடுதான் வாழ்வின் ஊன்றுகோலாக இருந்தது. வீட்டை விற்று அதன் கடனை அடைத்தேன். மீதிப் பணத்தில் சிறு தொகையை எடுத்து 3,500 சதுரடிக்கு ஒரு மனையை வாங்கி, வீட்டின் மீது இருந்த ஆசையை அப்போதைக்குத் தணித்துக் கொண்டேன்.
இதன் பின் எனக்குத் தெரிந்த சிறுசிறு தொழில்களைச் செய்தேன். காலம் ஓடியது. என் மகன் இன்ஜினீயரிங் படித்துமுடித்தான். சொந்தமாக தொழில் செய்ய நினைத்தான். நான் ஏற்கனவே வாங்கி போட்டிருந்த அந்த மனை உள்ள இடம் நன்றாக வளர்ச்சி அடைந்திருந்தது. வீடு கட்டலாம் என பூமி பூஜையும் போட்டிருந்தேன்.
ஆனால் மகன் சொந்த தொழிலில் முதலீடு போடுவதற்கு பணம் கேட்டான். வேறுவழியில்லாமல், பூமி பூஜை போட்ட நிலத்தை விற்று அவனுக்குப் பணம் கொடுத்தேன். அவன் தொழிலும் நல்லபடியாக வளர்ந்தது. மகனுக்குத் திருமணம். குழந்தை பிறப்பு எல்லாம் நடந்தது. ஆனால் என் வீட்டுக் கனவு முழுமை பெறாமல் இருந்தது.
நான் நடத்திவந்த சிறுசிறு தொழில்களையும் முடிவுக்குக் கொண்டுவந்து, பணத்தைத் திரட்டி னேன். என் பிள்ளைகளிடம் என்னுடைய வீடு ஆசையைக் கூறினேன். “யாருடைய பணமும் எனக்கு வேண்டாம். என் உழைப்பில் கிடைத்த பணத்தில் வீடு கட்ட வேண்டும்” என்றேன். அதற்கு பிள்ளைகள் ஒத்துழைத்தார்கள்.
இருக்கும் பணத்தில் மனை வாங்கினேன்.என் மகன் இன்ஜினியர் என்பதால் அவனே வீட்டுக்கான பிளான் போட்டுக் கொடுத்தான். மளமளவென்று வேலைகள் நடந்தன. அழகாக, கம்பீரமாக எழும்பியது என்னுடைய கனவு வீடு.
என்னால் நம்ப முடியவில்லை. இது என் வீடா? கடவுளுக்கு நன்றி சொன்னேன். என் மகன் பிறந்தபோது எப்படி என் மனம் சிறகடித்துப் பறந்ததோ, அதேபோன்ற பரவச அனுபவம் என் வீட்டின் கிரகப் பிரவேசத்தின் போதும் ஏற்பட்டது.
என்னைப் பொறுத்தவரையில் வீடு என்பது சொத்து மட்டுமல்ல, என்னுடைய வாழ்க்கை அனுபவத்தை அடுத்த தலைமுறைக்குக் காட்டும் காலக் கண்ணாடி.
- விமலா பாலகிருஷ்ணன், வேளச்சேரி, சென்னை
வீடு வாங்குவது, கட்டுவது தொடர்பாக உங்களுக்குப் பல விதமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அதிலுள்ள சிரமங்களையும் சுவாரசியங்களையும் எங்களுக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in
கடிதத் தொடர்புக்கு:
சொந்த வீடு, தி இந்து,
கஸ்தூரி மையம், 124,
வாலாஜா சாலை, சென்னை- 600 002.

மனையைத் தேர்வு செய்வது எப்படி?

நமக்கான இடத்தில் சிறியதாகத் தோட்டம் அமைத்து ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் கனவு.
ஆனால் வீட்டு மனையை நம்பி யாரிடம் வாங்குவது? அப்படியே வாங்கினாலும் அதை முறையாக எப்படிப் பதிவு செய்வது என்பதில் சரியான புரிதல் இல்லாததாலேயே நிறையப் பேர் மனை வாங்குவதற்குத் தயங்குகிறார்கள்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
வீட்டு மனையைத் தேர்வு செய்யும்போது முக்கியமாகச் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். வீட்டு மனையை வாங்குவதற்கு முன், நேரடியாக மனை இருக்கும் இடத்துக்குச் சென்று, அந்த ஊரின் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் வாங்கும் நிலத்தின் தன்மை எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் வாங்கப்போகும் மனைக்கு அருகில் இருக்கும் சாலைகள் எத்தகையவை, இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் சாலை விரிவாக்கம் நடப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றவா?
அல்லது உங்களின் மனைக்கு அருகில் ஏதாவது தொழில் நகரம், தகவல் தொழில்நுட்பப் பூங்கா போன்றவை வரவிருக்கின்றதா என்பதையெல்லாம் கூடுமானவரை அலசி ஆராய்ந்தபின்தான் மனை வாங்கும் முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும்.
உங்கள் மனையையொட்டிக் கொண்டுவரப்படும் திட்டங்களால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்களைக் கருத்தில் கொண்டு வீட்டு மனையை வாங்குவதற்கான முதல் அடியை எடுத்துவைக்க வேண்டும்.
ஆவணங்களைச் சரிபார்த்தல்
மனைக்கான பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களை ஒருமுறைக்கு இருமுறை வில்லங்கம் இருக்கிறதா எனச் சரிபார்க்க வேண்டும். மனையை விற்பவர் அவரின் பங்குக்கு ஒரு வில்லங்கச் சான்றிதழைக் கொடுப்பார். மனையை வாங்கும் நீங்கள், அந்த மனை குறித்த விவரங்களை சப்-ரெஜிஸ்ட்ரரர் அலுவலகத்தில் கொடுத்து, உங்களுக்குச் சந்தேகம் தோன்றும் காலம் வரைக்குமான வில்லங்கச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
மனையின் சர்வே எண் முக்கியம்
நீங்கள் வாங்கும் மனையின் சர்வே எண், ஆவணங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா எனச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஒரு மாவட்டத்துக்கு உட்பட்டு வட்டங்கள் இருக்கும். வட்டங்களுக்கு உட்பட்டவை கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கிராமத்தில் இருக்கும் நிலத்துக்கும் ஒதுக்கப்படும் புல எண்தான் சர்வே எண் எனப்படும்.
இந்த சர்வே எண்ணை மனை விற்பனையின்போது மிகவும் கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும். பொதுவாக ஒரு நிலம் தொடர்பான தரவுகள் பதிவுத் துறையிலும், வருவாய்த் துறையிலும் இருக்கும்.
உங்களுக்கு விற்கப்படும் மனையின் உரிமை நீங்கள் வாங்கும் நபரிடம்தான் உள்ளதா என்பதை உறுதி செய்யும் ஆவணம்தான் பட்டா. இதில் குறிப்பிட்ட மனை இருக்கும் கிராமத்தின் பெயர், வட்டத்தின் பெயர், மாவட்டத்தின் பெயர் போன்ற விவரங்கள் இருக்கும்.
மேலும் மனைக்குரிய பட்டா எண், மனையின் உரிமையாளரின் பெயர், சர்வே எண் அதன் உட்பிரிவு, நிலத்தின் தன்மை, நிலத்தின் பரப்பளவு ஆகியவை அடங்கியிருக்கும். பட்டாவில் உள்ள விவரங்களை முழுக்கச் சரிபார்த்தபின் மனையை வாங்குவதே சிறந்த வழியாகும்.

வில்லாவில் சுகமாக ஓய்வெடுக்கலாம்

இல்லம் என்பது இன்பம் சேர்க்க வேண்டும். ஆடி ஓடி உழைத்துக் களைத்து நமக்கு உரிமையான இல்லத்துக்குத் திரும்பும்போது ஓய்வெடுக்கத் தோதுவான அறையும் அறைக்கலன்களும் இருந்தால் அதற்கு ஈடு இணையே இல்லை.
அந்த வகையில் சாய்வு நாற்காலிகளுக்கு எந்தச் சாதாரண அறையையும் அசாதாரண அழகாக்கும் வலிமையுண்டு. வரவேற்பறை, படுக்கையறை, படிக்கும் அறை என ஒவ்வொரு அறைக்கும் ஏற்றவாறு இந்தச் சாய்வு நாற்காலிகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.
இப்போது நீங்கள் கட்டும் வில்லா அல்லது வாங்கும் அப்பார்ட்மெண்ட் போன்ற நவீன வீடுகளுக்கு ஏற்ற நவீன சாய்வு நாற்காலிகள் சந்தையில் புதிதாக அறிமுகமாகியிருக்கின்றன.
உங்கள் வீட்டில் எந்தவொரு இடத்தையும் அழகானதாகவும் வசதியானதாகவும் மாற்றும் திறன் இந்த நவீன சாய்வு நாற்காலிகளுக்கு உண்டு. இந்தச் சாய்வு நாற்காலிகள் வீட்டை மிகச் சிறந்த முறையில் அலங்கரிக்கின்றன. அதோடு, சொகுசாக ஓய்வெடுக்கவும் உதவுகின்றன. இவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கான சில ஆலோசனைகள்:
வசதியாகப் படிக்க...
புத்தகப் பிரியர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் இப்போது புதுமையான சாய்வு நாற்காலிகள் கிடைக்கின்றன. இந்த நாற்காலிகளை வரவேற்பறையிலும் வைக்கலாம்.
முட்டை நாற்காலிகள்
இந்த முட்டைவடிவ நாற்காலிகளையும் அர்னி ஜேக்கப்சென்தான் முதலில் வடிவமைத்தார். பெரிய வரவேற்பறைக்கு ஏற்றது. உங்கள் வரவேற்பறையைக் கூடுதல் நவீனமாக்குவதற்கு இவை உதவும்.
எப்படியோ விதவிதமான நாற்காலிகள் சந்தையில் புழக்கத்துக்கு வந்துவிட்டன. வசதியான வீட்டை வாங்கிக்கொண்ட நீங்கள் விலா நோக உழைத்து வரும்போது உங்களை ஆதரவுடன் எதிர்கொள்ளும் வில்லாவில் வசதியான நாற்காலிகளையும் வாங்கிப் போட்டால் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் அல்லவா?
குட்டித் தூக்கம் போட..
பரபரப்பான வேலைகளுக்குப் பிறகு வார இறுதியில் வீட்டில் குட்டித் தூக்கம் போடுவதற்கு இந்த நாற்காலி பயன்படும்.
வண்ணமயமாகும் ஓய்வு
உங்களுக்குப் பிடித்த நிறத்தில், பிடித்த வடிவில் இந்த நாற்காலியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வண்ணங்களின் ரசிகர்களுக்கு ஏற்றது.
அன்னப் பறவை நாற்காலிகள்
1958-ல் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த அர்னி ஜேக்கப்சென் வடிவமைப்பாளர் என்னும் இந்த அன்னப் பறவை நாற்காலிகளை கோபென்ஹேகனில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்காக வடிவமைத்தார்.
இப்போதும் இந்த நாற்காலி நவீனத்துக்கு அடையாளமாக விளங்குகிறது. பெரிய வசதியான நாற்காலிகளை வாங்க விரும்பினால் இந்த அன்னப்பறவை நாற்காலிகள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
கால்களும் ஓய்வெடுக்கட்டும்!
இந்தச் சாய்வு நாற்காலிகள் கால்கள் ஓய்வெடுப்பதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நிற்க நேரமில்லாமல் வேலைக்காக ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு வீட்டில் ஓய்வெடுக்க இந்த நாற்காலி உதவிசெய்யும்.

வசதியான வில்லாக்கள்

அழகிய கடற்கரைப் பகுதிகளிலோ, நதியோரங்களிலோ, ஏரிகளை ஒட்டியோ வில்லாக்களைக் கட்டி விற்கும் போக்குக்கு இப்போது பெரிய வரவேற்பு. பெரும் பணக்காரர்கள் மட்டும் வில்லாக்கள் கட்டினார்கள் என்பது பழைய கதை. இப்போது ஓரளவு வசதி வாய்ப்பு உள்ள அனைவருமே வில்லாக்களை அமைக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்த வில்லாக்கள் எனும் வழக்கம் ரோமர்களிடம் தொடங்கியது. ரோமப் பேரரசின் காலத்தில் உயர் குடியினர் வசிப்பதற்காகக் கட்டப்பட்டவை வில்லாக்கள்.
வசீகரமான ரோமர்களின் வில்லாக்கள் கால ஓட்டத்தில் பலவகையான கட்டிடக் கலை அம்சங்களையும் உள்வாங்கிக்கொண்டு தமது வடிவங்களைக் காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டே வருகின்றன.
ரம்மியமான தோற்றம்
கற்கள், மரம், செங்கற்கள் ஆகியவற்றால் ஆன வடிவமைப்பில் எழுந்து நிற்பவை அவை. ஆரம்ப காலத்தில் இத்தகைய வில்லாக்களின் சுவர்கள் சிமெண்ட் கொண்டே உருவாக்கப்பட்டன. பின்னர் இந்தச் சுவர்களைக் கற்களைக் கொண்டு கட்டிக்கொண்டனர்.
அழகிய ஓடுகளால் இந்த வில்லாவின் கூரைகளைச் சரிவாகவோ சமதளமாகவோ ஏற்படுத்திக்கொண்டனர். வில்லாவின் தரைத் தளத்தை கான்கிரீட் மூலம் வளப்படுத்தினர். பொதுவாக ரோமர்கள் வில்லாக்களை அமைக்கும்போது, ஒரு திறந்த வெளி மைதானமும், குளமும் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள்.
கோடைக் காலங்களில் வெளிச்சமும், காற்றும் எளிதாகக் கிடைக்கும் வகையில் வில்லாக்கள் அமைக்கப்படும். இரவு நேரங்களில் உள்புறங்களில் காணப்படும் இடைவெளிப் பகுதியில் எண்ணெய் விளக்குகளை ஒளிரவிடுவார்கள். அப்போது ரம்மியமான தோற்றத்தில் வில்லாக்கள் மின்னும்.
அந்தஸ்தின் அடையாளம்
வில்லாக்களைப் பல பகுதிகளாக அமைத்துக்கொள்வார்கள். குடும்பத்தினர், விருந்தினர், வேலையாள்கள், அடிமைகள் போன்ற அனைவருக்கும் இடமளிக்கும் வகையில் ஒரு ரோமன் வில்லா பரந்து விரிந்து இருக்கும். இது போக வீட்டில் விலங்குகளைப் பராமரிக்கும் பகுதியும், தானியங்களைச் சேமிக்கும் கிடங்கும் அமைக்கப்படும். இப்படியாக ஒட்டுமொத்தக் குடும்பத்தின் தேவையையும் சமாளிக்கும் வகையில் ஒரு முழு வில்லா இருக்கும்.
ரோமன் வில்லா என்பது வெறும் வீடல்ல. அது அந்தஸ்தின் அடையாளம். அந்த வீட்டில் வசிக்கும் தலைவர் சமூகத்தில் பெற்றிருக்கும் கவுரவத்தைச் சிறப்பிக்கும் வகையில் வில்லா அமையும். அவரது அதிகாரத்தையும் சமூக மதிப்பையும் அது எடுத்துக்காட்டும்.
ஆகவே வில்லா அமைக்கும் அனைவருமே அதைத் தங்களால் இயன்ற அளவு ஆடம்பரமாக அனைத்து வசதிகளும் கொண்டதாகவே அமைப்பார்கள். பார்ப்பவர்கள் கவனத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே தங்கள் வில்லா ஈர்த்துவிட வேண்டும் என்பது மட்டுமே அவர்களது கவனமாக இருக்கும்.
இளைப்பாறுதலுக்கான இடம்
நகர்ப்புறத்தில் அதிக இட வசதி இருக்காது என்பதால் அங்கே அமைக்கப்படும் வில்லா எனும் வீடு சிறிய அளவிலான ஆனால் தேவையான வசதிகளைக் கொண்டதாக அமைக்கப்படும்.
எனவே புற நகர்ப் பகுதியிலோ, கிராமங்களிலோ தங்களுக்குத் தேவையான பெரிய அளவிலான வில்லாக்களை உயர் குடியினர் கட்டிக்கொள்வார்கள். கோடை காலங்களில் அங்கே சென்று தங்களது பொழுதைக் கழிப்பதை வழக்கமாக்கி வைத்திருந்தனர்.
விவசாய வணிகம் தொடர்பான நடவடிக்கைகளிலும் ரோமர்களுக்கு அதிக ஆர்வம் உண்டு. எனவே கிராமப் பகுதிகளில் நிலங்களை வாங்கி அதையொட்டி வில்லாக்களை பண்ணை வீடுகளைப் போல் கட்டி வசிப்பார்கள். இவர்கள் கடற்கரையோர வில்லாக்களைக் கட்டுவதிலும் ஆர்வம் காட்டினர்.
நகரத்தின் இறுக்கமான வாழ்விலிருந்து சிறிது இளைப்பாற வேண்டி இந்தக் கடற்கரையோர வில்லாக்களுக்கு வருவார்கள். ஆரோக்கியமான கடற்காற்று வளைய வளைய வரும் வீடுகளில் சில காலம் தங்கியிருந்து ஆசுவாசம் அடைந்து மீண்டும் பரபரப்பான நகரத்து வாழ்க்கைக்குத் திரும்புவார்கள்.
வில்லாக்கள் பல வகையான வேலைகளுக்கும் உதவும்படியான வசிப்பிடங்கள். வில்லாக் களிலேயே சில அலுவலகப் பணிகள் நடைபெற அவசியமான அறைகள் அமைக்கப்படும்.
வர்த்தகச் சந்திப்புகள், விருந்தினர் சந்திப்புகள் ஆகியவற்றுக்கான சவுகரியங்களும் இடம்பெற்றிருக்கும். எல்லா சவுகரியங்களும் உள்ள வில்லா ஒன்று இருந்தால் வசதியாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறதா?

அடுக்குமாடி வீட்டை அழகாக்க ஸ்டிக்கர் போதும்!

கம்பீரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு ஃப்ளாட் வாங்கிவிட்டீர்கள். உங்கள் ஃப்ளாட்டில் உயர்தர சோபாக்கள் அடுக்கப்பட்ட வரவேற்பறையின் குறுக்கே ஓர் மின்கம்பம் சாய்ந்து நின்றால் எப்படி இருக்கும்?
அகலமாகக் கிளை பரப்பி நிற்கும் ஓர் ஆலமரம் படுக்கை அறையில் முளைத்திருந்தால் எப்படி இருக்கும்? மாடிப் படிக்கட்டுகளில் குட்டிப் பூனைகள் அங்குமிங்கும் துள்ளித் திரிந்து விளையாடினால் எப்படி இருக்கும்?
இப்படி நம் வழக்கமான சலிப்புத்தட்டும் வாழ்க்கையில் புதுமைகளைப் புகுத்தி நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ள வழிசெய்கின்றன சுவர் ஸ்டிக்கர்கள்.
பெயிண்ட் தேவையில்லை
உங்கள் வீட்டு வரவேற்பறையை வசீகரமாக மாற்ற வேண்டும் என நினைத்தால் இனி விலை உயர்ந்த பெயிண்டுகளைப் பூச வேண்டியதில்லை. அவ்வளவு ஏன் வால்பேப்பர் (wallpaper) எனப்படும் சுவர் காகிதங்களைக்கூட வாங்க வேண்டியதில்லை.
சுவர் காகிதம் அல்லது பெயிண்டு என்பவை ஒட்டுமொத்தமாக ஒரு அறையின் சுவர் முழுவதையும் வேறு தோற்றத்துக்கு மாற்றுபவை. முழுச் சுவருக்கும் பளீர் நிறத்தில் பெயிண்ட் பூசுவது பழைய பாணி. சுவரின் ஒரு சிறிய பகுதிக்கு மட்டும் வேறுவிதமான தோற்றம் தருவது புதிய பாணி.
நவீன அழகியல் கோட்பாடு இன்று மாறிவிட்டது. அழகூட்டுவது என்றால் அங்குமிங்குமாகச் சில நகாசு வேலைப்பாடுகள் செய்வதுதான். அத்தகைய நவீன வீட்டு அலங்காரத்துக்கு உகந்தவை சுவர் ஸ்டிக்கர்கள்.
குறைந்த செலவில் நிறைய அழகு
இவற்றைப் பயன்படுத்துவது சுலபம், துரிதமாக ஒட்டிவிடலாம், உங்கள் சவுகரியத்துக்கு ஏற்ப எந்தப் பகுதியிலும் ஒட்டிக் கொள்ள முடியும். விலையும் குறைவு. வெறும் ரூ.300 முதல் விதவிதமான சுவர் ஸ்டிக்கர்கள் விற்கப்படுகின்றன. ஆனால் மாயாஜாலம் போல உங்கள் ஃப்ளாட்டின் தோற்றத்தை அவை முற்றிலுமாக மாற்றிவிடும்.
சுவாரசியமான, நவீன வடிவங்களில் சுவர் ஸ்டிக்கர்கள் கிடைக்கின்றன. சுவர்களில் மட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருட்கள், மேஜை, நாற்காலி போன்ற சாமான்களின் மீதும் ஒட்டி அழகு பார்க்கலாம்.
கேலி, கிண்டல் ததும்பும் சுவர் ஸ்டிக்கர்கள், 3டி டிஜிட்டல் அச்சுகள், ஈர்க்கும் சுவர் கலை புகைப்படங்கள் என நீங்கள் விரும்பும் ஸ்டிக்கர்களை எங்கு வேண்டுமானாலும் ஒட்டலாம். சிறிது காலம் கழித்து அவற்றை அகற்றிவிட்டு வேறு படங்களும் ஒட்டலாம்.
எங்கும், எப்படியும்!
உயிரோட்டமற்ற பகுதி என்றால் வீட்டிலிருக்கும் சுவிட்ச் போர்டுதான். அத்தகைய சுவிட்ச் போர்டைப் பார்த்துப் பார்த்து சிரித்து ரசிக்கும்படி மாற்றும் ஸ்டிக்கர்கள் உள்ளன. சுவிட்ச் போர்ட்டுக்குள் மின்சாரம் எப்படிப் பாய்கிறது, அதிலிருந்து வெளியேறும் மின்சாரம் மற்ற கருவிகளை எப்படி இயக்குகிறது என்பது போன்ற அறிவியல் சார்ந்த விஷயங்களைக் கேலிச் சித்திரம் போல் காட்டும் ஸ்டிக்கர்கள் இவை.
வெறும் கறுப்பு வெள்ளை நிறங்களைக் கொண்டு மாயாஜாலம் செய்யும் சுவர் ஸ்டிக்கர்கள், நாட்டியப் பேரொளிகளை உங்கள் அறை சுவர்களில் நடனமாடச் செய்யும் ஸ்டிக்கர்கள், கேலி கிண்டல் கூடிய ஸ்டிக்கர்கள், குழந்தைகளை ஈர்க்கும் ஸ்டிக்கர்கள், மனிதர்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள், விளையாட்டு, இசை இப்படி கலைநயம் மிக்க ஸ்டிக்கர்கள், செல்லப் பிராணிகள், பூச்சிகள், வண்ண வண்ணப் பூக்கள், மரங்கள், பறவைகள், வடிவியல் வடிவங்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் இப்படி விதவிதமாக உள்ளன.
‘என்ன பொழுதுபோகாம சுவரை வெறித்துப் பார்த்துகிட்டிருக்க!’ என யாரும் உங்களை இனிமேல் கேட்க மாட்டார்கள். சுவரைப் பார்ப்பதன் மூலமே உங்கள் பொழுதை சுவாரசியமாகக் கழிக்கலாம்.

வருங்காலத்துக்கான கூரை

முந்தைய காலத்தில் மரங்களை வெட்டி அதைக் கட்டுமானப் பொருளாகக் கொண்டு கூரை வீடுகள் கட்டப்பட்டன. பிறகு ஓடுகள் போன்ற பலவிதமான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கூரைகள் அமைக்கப்பட்டன.
கட்டுமானத் துறையின் வளர்ச்சி கூரை வீடுகளுக்கு விடை தந்தன. ஆனாலும் பாரம்பரிய வீடுகள் இன்றும் ஓடுகளுடன் அழகாகக் காட்சியளிக்கின்றன.
ஒருபக்கம் வீட்டுக் கட்டுமானத்துக்குக் கூரைகள் அமைப்பது குறைந்தாலும் இன்னொரு பக்கம் தொழிற்கூடங்கள் அமைக்க கூரைகள் பயன்படுத்துவது தொடர்ந்தது. ஆஸ்பெஸ்டாஸ் கட்டுமானப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்ததும் இது அதிகரித்தது.
சில வீடுகளும்கூட ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டன. ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பது மிக எளிது ஒப்பீட்டளவில் விலையும் மிகக் குறைவு. அதனால் வீட்டின் மாடிப் பகுதி பெரும்பாலும் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் கொண்டு அமைக்கப்பட்டன. ஆனால், ஆஸ்பெஸ்டாஸ் கட்டுமானப் பொருளில் தீமைகள் உண்டு. அது வெப்பத்தை உமிழக் கூடியது.
இன்று கூரைகள் அமைப்பதில் பல புதிய தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. அவற்றுள் ஒன்றுதான் சிலிகான் பாலிகார்பனேட் கூரைகள்.
மாற்றுப் பொருட்களை நாம் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருப்பவை அதன் அனுகூலமான அம்சங்கள் தான். மேலும் கையாள்வதற்கு எளிதானதாக இருக்க வேண்டும். வெப்பத்தைத் தாங்கக் கூடியதாக இருக்க வேண்டும். பராமரிப்புச் செலவு குறைவாக இருக்க வேண்டும்.
விலையும் கட்டுக்குள் இருக்க வேண்டும். இம்மாதிரியான சிறப்பம்சங்களை இந்த சிலிகான் பாலி கார்பனேட் கொண்டுள்ளது. இந்தப் பொருள் கூரை அமைப் பதற்கு மட்டுமின்றி தளம் அமைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
பாலி கார்பனேட்டின் சிறப்பம்சங்கள் இதன் எடை தாங்கும் திறன் மிக அதிகம். எளிதாகக் கையாளக் கூடிய அளவில் இதன் எடையும் மிகக் குறைவு. இதனால் கட்டுமானத்தைப் பிரிப்பதும் இடம் மாற்றுவதும் எளிது. மேலும் கட்டிடத்தின் மொத்த எடையும் இதனால் குறையும். கட்டுமானத்தின் உறுதி ஸ்டீல் கூரை கட்டுமானத்தைவிடவும் அதிகமாக இருக்கும்.
பிறகு ஸ்டீல் கூரைகளைப் பயன்படுத்தும்போது அவை துருப்பிடிக்கும், தேய்மானமும் ஆகும். ஆனால் இந்த மாற்றுப் பொருளில் அந்தக் கவலை இல்லை. இவை துருப்பிடிக்கும் தன்மை அற்றவை. கூரைக் கட்டுமானங்கள் மட்டுமின்றிக் கதவுகள், அலமாரிகள் போன்றவற்றின் கைப்பிடிகளையும் இதைக் கொண்டு தயாரிக்க முடியும். எடை குறைவாகவும் கையாள எளிதாகவும் இருக்கும்.
வெப்பம் அதிகமாகத் தாங்கும் வாய்ப்புள்ள கட்டிடப் பகுதிகளில் இந்த பாலி கார்பனேட் பொருட்களைப் பயன்படுத்தலாம். இது அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியது என்பதால் விபத்துகளைத் தவிர்க்கலாம். பாலி கார்பனேட் 200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாங்கக் கூடியது. சிலிகான் பாலி கார்பனேட், கண்ணாடி, நைலான் ஆகியவற்றைக் கலந்து பாலி கார்பனேட் தயாரிக்கிறார்கள்.
பாலியெஸ்டர், பாலி அமைட் ஆகிய வேதிப் பொருள்களும் இதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தக் கலவையை விருப்பதிற்கேற்ப உருவாக்க குறைந்த நேரமே ஆகும். அதனால் உற்பத்திச் செலவு குறைவாகத்தான் இருக்கும்.
மேலும் இந்தப் பொருள்கள் இன்றைக்குச் சென்னையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனால் கிடைப்பதும் மிக எளிது. கண்ணாடி, பிளாஸ்டிக், ஜிப்சம், ஃபைபர் போன்ற பொருட்களுக்கான பாலிகார்பனேட் சிறந்த மாற்றுப் பொருளாகும். இந்தப் பொருள் இப்போது சந்தையில் அதிகம் விரும்பப்படும் பொருள் எனச் சொல்லப்படுகிறது.