உனக்கு விரும்பியதை படி !
- ஆக்கம் : அபூ ஸலாம், காயல்பட்டினம் மாணவரணி
பள்ளிக்கூட வாழ்க்கை முடிந்து கல்லூரியை தெரிவு செய்ய கூடிய கட்டத்தில் பல மாணவர்கள் யோசிக்கக்கூடிய கால கட்டம் இது. பன் முனைகளிலிருந்தும் ஆலோசனைகள், அறிவுரைகள் வந்த வண்ணம் இருக்கும்.
எதை தேர்ந்தெடுத்துப் படிப்பது ?
பெற்றோர் சொல்வதையா ?
நண்பர்கள் சொல்வதையா ?
உறவினர்கள் சொல்வதையா ?
ஆசிரியர்கள் சொல்வதையா ?
என யாரை திருப்திக்கொள்ள வைப்பது என மாணவர்கள் சிந்துத்துக் கொண்டிருப்பீர்கள்.
ஆனால், உண்மையில் இவர்கள் யாரையும் உங்களால் திருப்திப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அறிவுரை வழங்கிய பலர் ஆறு மாதத்தில் அறியாதவர்களாக மாறிவிடுவார்கள்.
நாம் ஒன்றை தெரிவு செய்து படிக்கும் போது பல விஷயங்களையும் அலசி ஆராய வேண்டும்.
ஏனென்றால் நாம் படிக்கும் இந்த படிப்பு தான் இறுதி வரை நமது வாழ்க்கை பயணத்தில் உறுதுணையாக இருக்கப் போகிறது.
மற்றவர்கள் சொல்லை கேட்டு ஒன்றை படிப்பதை விட, நமக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது ? அந்த துறை மார்க்க வரம்புக்கு உட்பட்ட எந்த துறையாக இருந்தாலும் அதை நாம் தெரிவு செய்யலாம்.
ஆனாலும், அதன் சாதக பாதகங்களை ஆராய வேண்டும். அதன் பிறகு தெரிவு செய்வதே சிறந்ததாக இருக்கும்.
ஒரு துறையை தேர்ந்தெடுக்கும் முன் அந்த துறையை பற்றியான விவரங்களை நாம் முழுமையாக தெரிந்து வைத்துகொள்வது அவசியம்.
ஒரு துறையில் நுழையும் முன் தொலைநோக்கு பார்வை மிக அவசியம்.
எதிர்காலத்தில் எந்த துறைக்கு ஆட்கள் தேவை என்பதை உணர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
மலிந்து போன துறைகளை தேர்ந்தெடுத்துப் படித்தால் அதற்கு வேலை கிடைப்பது மிகக் கடினம்.
உதாரணமாக, பிளாஸ்டிக் இந்த பூமிக்கு கேடு என்பதால் உலகம் முழுவதும் அதன் பயன்பாட்டை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ள படுகிறது. எனவே, நாம் துறையை சார்ந்த படிப்புகள் படிக்கும் போது எதிர்காலத்தில் வேலை என்பது கேள்விக்குரியாகிவிடும்.
அதனால், பிளாஸ்டிக் தொழில்நுட்பத்திற்கு மாற்று என்ன என்பதை கண்டறிந்து இயற்கைக்கு உகந்த தொழில்நுட்பத்தை கற்கும் போது வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
அன்புள்ள மாணவ, மாணவிகள் தங்களது துறையை பல முறை யோசித்து அந்த துறையில் தடம் பதித்த பலரை சந்தித்து ஆலசனைகளை பெற்ற பின்பே தேர்ந்தெடுப்பது நல்லது.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் சாதிக்க வாழ்த்துகிறோம் !
நன்றி: உணர்வு