Wednesday, July 8, 2020

உளவியல் என்றால் என்ன?

உளவியல் என்றால் என்ன?

உளவியல் அல்லது மனோதத்துவம் (Psychology) என்பது மனதின் செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் பயன்பாட்டு ஒழுங்கு முறையாகும்.

இந்தத் துறையின் தொழில்முறை ஆய்வாளர் ஒரு உளவியலாளர் எனப்படுவர். உளவியலாளர் சமூக நடத்தை ,விஞ்ஞானிகள் என்றும் வகைப்படுத்தப்படுவர். உளவியல் ஆய்வு என்பது அடிப்படை அல்லது செயல்முறை சார்ந்ததாகக் கருதப்படும். உளவியலாளர்கள் தனிப்பட்ட மன செயல்பாடுகளின் பங்கினை மற்றும் சமூக ஒழுக்கத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கிக்கும் முறையாகும்.

உளவியல் என்றால் என்ன?

உளவியல் என்பது மனித மனம் மற்றும் மனிதன் நடந்துகொள்ளும் விதத்தைப்பற்றி ஆராயும் பிரிவு ஆகும். மனிதனைச் செயல்படுத் தூண்டுகிற பலவிதமான சிந்தனைகள், உணர்வுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்ற அம்சங்கள் இந்தத் துறையில் ஆராயப்படுகின்றன. இதற்கென்று பல பரிசோதனைகளும் உள்ளன. பலதரப்பட்ட மனித செயல் பாடு சார்ந்த விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கும். தீர்ப்பதற்கும் இந்த உளவியல் பற்றிய அறிவு பயன்படுத்தப்படுகிறது. இதில் மன நலப் பிரச்னைகளுக்கான மதிப்பீடுகள் மற்றும் சிகிச்சை முறைகள் ஆகியவை உள்ளடங்கி இருக்கின்றன.

உளவியலாளர் என்பவர் யார்?

உளவியலாளர் என்பவர் உளவியல் துறையில் பட்டங்களைப் பெற்றவர், இவர் மனிதர்களுடைய செயல்பாடுகளைப்பற்றி, அவர்களுடைய நடவடிக்கைகளைப்பற்றி நான்கு அறிந்த நிபுணர் ஆவார். உளவியலாளர்கள் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி மனிதர்களுடைய எண்ணங்கள், உணர்வுகள், புரிந்து கொள்ளுதல் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை எந்தெந்த காரணிகளால் பாதிக்கப்படுகின்றன என ஆராய்கிறார்கள். பொதுவாக உளவியலாளர்களிடம் வருகின்றவர்களுக்கு பல விதமான பிரச்னைகள், சவால்கள் இருக்கலாம். உதாரணமாக, சிலருக்கு உறவு சார்ந்த பிரச்னைகள், சிலருக்கு பெற்றோரிடம் பிரச்னைகள், சிலருக்கு வளர் இளம் பருவம் பற்றிய பிரச்னைகள், சிலருக்கு வாழ்க்கை முறை மாற்றங்களால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், சிலருக்கு நாள்பட்ட நோய்கள்... இப்படிப் பல்வேறு பிரச்னைகளால் இவர்கள் உளவியலாளரிடம் வரும்போது, அவர்கள் சான்று அடிப்படையிலான ஊகங்களை வைத்துத் தலையீடுகளை உருவாக்கி, அதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் சவால்களை அவர்கள் சந்திக்கவும், சமாளிக்கவும் உதவுகிறார்கள். பதற்றம், மனச்சோர்வு, உண்ணுதல் குறைபாடு, அச்சக் குறைபாடு, அளவுக்கு அதிகமாக பொருட்களை பயன்படுத்துதல் போன்ற மனநலக் குறைபாடு உள்ளவர்கள் உளவியலாளர்களிடம் வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய மருத்துவத் திறன்களைப் பயன்படுத்தி இவர்களுக்கு உதவுகிறார்கள்.உளவியலாளர்கள் தரும் சிகிச்சையின் அடிப்படை அறிவியலும், கட்டமைப்பும் ஒரே மாதிரி இருந்தாலும், அவர்கள் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் விதம் பல வகைகளில் அமைகிறது.

மருத்துவ உளவியலாளர்கள்: 

இவர்கள் பாதிக்கப்பட்டவருடைய உள்ளம் சார்ந்த அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்கிறார்கள். அதன் மூலம் அவர்களின் உள்ளம் சார்ந்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறார்கள், முன்னிறுத்துகிறார்கள். அசாதாரணமான உளவியலைப்பற்றிப் படித்த உளவியலாளர்கள், பதற்றம், மனச்சோர்வு, போதைப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துதல், அவற்றிற்கு அடிமையாதல் போன்ற மனநலப் பிரச்னைகளைக் கொண்ட மக்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள், அவர்கள் குணம் பெற உதவுகிறார்கள்.    ஆலோசகர்கள்: பொதுவாக ஓர் ஆலோசகரிடம் வருகிறவருக்கு எந்தவிதமான மனநோயும் இருப்பதாகக் காணப்பட்டிருக்காது, அதே சமயம் அவர்களிடம் மனநலம் சார்ந்த சில பிரச்னைகள் காணப்படலாம். அவற்றைப் பேசி புரிந்து கொள்வதற்காக இவர்கள் ஆலோசகரிடம் வருகிறார்கள். இப்படி வருகிறவர்களிடம் ஆலோசகர்கள் பேசி அவர்களிடம் சமநிலையிமையை உண்டாக்கியிருக்கிற பிரச்னை என்னவாக இருக்கும் என்று கண்டறிகிறார்கள், அதை குணப்படுத்துகிறார்கள். பொதுவாக மனநல ஆலோசகரிடம் வருகிறவருக்கு பலவிதமான பிரச்னைகள் இருக்கக்கூடும். உதாரணமாக, தங்களுடைய அன்புக்குரியவரின் மரணத்தைத் தாங்க இயலாதவராக இருக்கலாம், சிலர் இப்போதைய அல்லது முந்தைய உறவுகளில் இருக்கும் பிரச்னைகளைத் தாங்க முடியாமல் சிரமப்படலாம், சிலர் நடவடிக்கை சார்ந்த பிரச்னைகளின் மூலம் பாதிப்புகளைச் சந்திக்கலாம். இவர்கள் ஒவ்வொருவரிடமும் மனநல ஆலோசகர்கள் விரிவாகப் பேசுகிறார்கள், அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் மனப்போக்கை மாற்றிக்கொள்வதற்கு, புகைப்பழக்கத்தை விடுவதற்கு, அவர்களுடைய வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுகிறார்கள்.

பள்ளியில் உள்ள உளவியலாளர்கள்: 

இவர் குழந்தைகள், வளர் இளம் பருவத்தினருடன் இணைந்து பணியாற்றுகிறார், அவர்களுடைய கற்றல் மற்றும் வளர்ச்சிக்குத் துணை புரிகிறார்.     பள்ளி உளவியலாளர்கள் கல்வி நிறுவனங்களுடன் இணைந்தும் பணியாற்றக் கூடும். அல்லது கல்வி சார்ந்த கொள்கைகளை உருவாக்குகின்ற நிர்வாக அமைப்புக்களுடனும் சேர்ந்து பணியாற்றக்கூடும்.வழக்கு சார்ந்த உளவியலாளர்: இவர் சட்டச் செயல்முறைகள் சார்ந்த உளவியல் அம்சங்களை ஆராய்கிறார், உதாரணமாக, குற்றவியல் விசாரணைகளில் கோட்பாடுகளை அமல்படுத்துதல், குற்ற எண்ணத்துடன் செயல்படுகிற ஒருவருக்கு என்னவிதமான உளவியல் பிரச்னை இருக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ளுதல், குற்றம் செய்தவர்களுக்குச் சிகிச்சை வழங்குதல் போன்றவை. வழக்கு சார்ந்த உளவியலாளரைக் ‘குற்றவியல் உளவியலாளர்’ ‘ சட்ட உளவியலாளர்’ அல்லது ‘கிரிமினாலஜிஸ்ட்’ என்றும் அழைப்பதுண்டு.

நரம்பியல்-உளவியலாளர்: 

இவர் மூளைக்கும் அதன் நரம்பியல்- உளவியல் செயல்பாடுகளான பார்வை, ஞாபக சக்தி மற்றும் நுகரும் சக்தி ஆகியவற்றுக்கும் உள்ள உறவைப்பற்றி ஆராய்கிறார். மூளைக்காயம் அல்லது பிற நரம்பியல் பிரச்னைகளான பக்கவாதம், டிமென்சியா, கட்டி மற்றும் மூளைச்சிதைவுப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் புனர்வாழ்வுக்கு இவர் உதவுகிறார்.

பணி சார்ந்த உளவியலாளர்: 

இவர் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடமிருந்து சிறந்த செயல்திறனைப் பெறுவதற்கும், ஊழியர்கள் தங்கள் பணியில் திருப்தி அடைவதற்கும் உதவுகிறார். இந்தத்துறையில் அனுபவம் பெற்ற உளவியலாளர்கள் நிறுவனங்களுக்கும் அவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பல வகைகளிலும் உதவுகிறார்கள்: ஊழியர்களை ஊக்கத்துடன் செயல்படச் செய்வதற்கான வியூகங்களை உருவாக்குதல், ஒவ்வொரு பணிக்கும் சிறந்த நபர்களைத் தேர்ந்தெடுத்தல், தனி நபர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள உதவுதல், அவர்கள் தங்கள் பணி வாழ்க்கையைத் திட்டமிட உதவுதல், ஒரேமாதிரியான வேலையைச் செய்து சலிப்படைந்த ஒருவர் அதைச் சமாளிக்க உதவுதல் போன்றவை. ஒரு குறிப்பிட்ட பொறுப்புக்கு ஒரு குறிப்பிட்ட நபர் பொருந்துவாரா இல்லையா என்பதை மதிப்பிடுவதற்கான உளவியல் பரிசோதனைகளையும் பணி சார்ந்த உளவியலாளர்கள் வடிவமைக்கலாம், பயன்படுத்தலாம்.

உளவியல் மதிப்பீடு என்றால் என்ன?

உளவியல் மதிப்பீடு என்பது, ஒருவர் எப்படிச் சிந்திக்கிறார், எப்படி உணர்கிறார், எப்படி நடந்துகொள்கிறார், சில குறிப்பிட்ட தூண்டுதல்களுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறார் என்பதைப்பற்றிய விவரங்களை ஓர் உளவியலாளர் கண்டறியும் வழிமுறை ஆகும். உளவியல் மதிப்பீடு என்பது பல முறைகளில் நடத்தப்படுகிறது. உதாரணமாக, சம்பந்தப்பட்டவருடன் உரையாடுதல், அவருடைய நடவடிக்கைகளைக் கவனித்தல், மதிப்பிடுதல், முறையான உளவியல் பரிசோதனைகளை நடத்துதல், பிற நிபுணர்களைத் தொடர்புகொண்டு தொடர்புடைய விவரங்களைப் பெறுதல் போன்றவை.

குறிப்பு: உளவியல் மதிப்பீடு என்பது ஒரு பரிசோதனையின் அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது, பிறகு இந்தப் பரிசோதனையின் முடிவுகள் நிபுணரால் மதிப்பிடப்பட்டு, புரிந்துகொள்ளப்பட்டு வெளியிடப்படுகின்றன.பல்வேறு மதிப்பீடு முறைகளில் சேகரிக்கப்பட்ட வெவ்வேறு விவரங்களை நிபுணர்கள் தொகுக்கிறார்கள், அதன் அடிப்படையில் ஒருவருடைய திறன்கள் மற்றும் நடவடிக்கைகளைப்பற்றிய ஒரு முழுமையான அறிக்கையை உருவாக்குகிறார்கள். இந்த விவரத்தின் அடிப்படையில் அவருக்கு எத்தகைய சிகிச்சை தேவை என்பது சிபாரிசு செய்யப்படுகிறது. உதாரணமாக, ஒரு குழந்தை அல்லது இளைஞருடைய உளவியல் மதிப்பீட்டை வைத்து அவருடைய கல்வி அல்லது பணி வாழ்க்கையைத் திட்டமிடலாம், மனநல பாதிப்பு கொண்ட ஒருவருடைய மதிப்பீட்டைக் கொண்டு அவருக்கு எத்தகைய சிகிச்சை தரவேண்டும் எனத் திட்டமிடலாம். மனநல மதிப்பீட்டில் சேகரிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு, ஓர் உளவியல் அறிக்கையாக வெளியிடப்படுகின்றன.

உளவியல் பரிசோதனை என்றால் என்ன?

உளவியல் பரிசோதனை என்பது, ஒருவருடைய மனப்போக்கு மற்றும் புத்திசாலித்தனத் திறன்களைப் பரிசோதிப்பதற்காக நடத்தப்படுகிறது. இந்தப் பரிசோதனைகள் தரநிலைப்படுத்தப்பட்ட உளவியல் மற்றும் அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைகின்றன.உளவியல் பரிசோதனையின் வடிவமைப்பு பலவிதமாக மாறுபடலாம். உதாரணமாக, சில பரிசோதனைகளில் பேனா, பென்சில் கொண்டு தாளில் ஏதாவது எழுத வேண்டியிருக்கலாம், கணினி சார்ந்த பரிசோதனைகளும் உள்ளன. சில பரிசோதனைகளில் புதிர்கள் தரப்பட்டு அவற்றை விடுவிக்குமாறு கேட்கப்படலாம், சில பரிசோதனைகளில், மதிப்பிடப்படுகிறவர் ஓவியங்களை வரையவேண்டியிருக்கலாம். கணக்குகளைப் போடவேண்டியிருக்கலாம், அவருக்குச் சொல்லப்பட்ட ஏதாவது ஒரு விவரத்தை நினைவுக்குக் கொண்டுவர வேண்டியிருக்கலாம். சில மனநல பரிசோதனைகளில் சம்பந்தப்பட்டவர் பிறருடன் எப்படி பழகுகிறார்,     எப்படி நடந்து கொள்கிறார் என்பவையும் அளவிடப்படலாம்.இந்தப் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில், ஒரு தனி நபருக்குள் இருக்கும் திறன்கள் மற்றும் அவருடைய சாத்தியங்களைப்பற்றிய தங்களுடைய கருத்துகளை உளவியலாளர்கள் வழங்குகிறார்கள். மதிப்பிடப்படும் நபருக்குத் தெரியாத விஷயங்களை ஊகித்து அறியும் உத்திகளும் உள்ளன. உதாரணமாக கருப்பொருள் அடிப்படையிலான தன்னை அறிதல் பரிசோதனை மற்றும் ரோர்ஸ்கார்ஷ் பரிசோதனை.

ஓர் உளவியல் பரிசோதனையில் எந்தெந்த அம்சங்கள் மதிப்பிடப்படுகின்றன?

ஓர் உளவியல் பரிசோதனையில், பலவிதமான தன்மைகள் மதிப்பிடப்படுகின்றன:தகவமைப்புப் பதிவுமுறை மதிப்பீடுகள்: இந்த மதிப்பீடுகள் ஒருவருடைய சமூக மற்றும் இயல்பான திறன்களை மதிப்பிடுவதற்காக நடத்தப்படுகின்றன. உதாரணமாக ஒரு குழந்தை சமூகச் சூழல்களில் எப்படி நடந்துகொள்கிறது, பள்ளியில் அல்லது வீட்டில் பல்வேறு சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கான வாழ்க்கைத் திறன்கள் அதற்கு உள்ளவனவா போன்றவற்றை மதிப்பிடுவதற்கு இந்தப் பரிசோதனை பயன்படும். பொதுவாக இந்தப் பரிசோதனை அறிவாற்றல் பரிசோதனையுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. குறிப்பாக, தினசரி நடவடிக்கைகளைச் செய்ய இயலாதவர்கள் அல்லது குறைவான அறிவாற்றல் பிரச்னை உள்ளதோ என்று சந்தேகிக்கப்படுகிறவர்களுக்கு இந்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

திறனறிதல் பரிசோதனை: 

இந்தப் பரிசோதனை, பல்வேறு செயல்பாடுகளை ஒருவரால் செய்ய இயலுகிறதா என்பதை மதிப்பிடுகிறது. உதாரணமாக, சிலர் இயக்கவியல் சார்ந்த செயல்பாடுகளில் மற்றவர்களைவிடச் சிறந்து விளங்குவார்கள், சிலர் மொழி மற்றும் புரிந்து கொள்ளுதல் திறன்களில் சிறந்து விளங்குவார்கள், சிலர் படைப்புணர்ச்சி சார்ந்த விஷயங்களில் சிறந்து விளங்குவார்கள். இப்படி வெவ்வேறு திறன்களில் ஒருவர் எவ்வளவு திறமைசாலி என்பதை அளவிடுவதில் இந்தப் பரிசோதனை கவனம் செலுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஒருவர் சரிப்படுவாரா என்பதைத் தீர்மானிப்பதற்கு இந்தப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம், ஒருவருடைய திறன்கள் அடிப்படையில் அவருக்கு ஏற்ற வேலையைத் தீர்மானிப்பது எளிதாகிறது.

அறிவாற்றல் பரிசோதனைகள்: 

இந்தப் பரிசோதனைகள் ஒருவருடைய பிரச்னையை தீர்க்கும் திறன், தர்க்கரீதியில் சிந்திக்கும் திறன், மொழி வளம், புரிந்துகொள்ளும் திறன், ஞாபகத்திறன் போன்றவற்றை மதிப்பிடுகின்றன. இவற்றைப் புத்திசாலித்தன பரிசோதனைகள், IQ பரிசோதனைகள், பொதுத் திறன் பரிசோதனைகள் என்றும் அழைப்பார்கள், இவை பெரும்பாலும் கல்வித்துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்கள் தங்களுடைய திறன்களை அடையாளம் கண்டு முழு சாத்தியங்களை எட்டுவது இந்தப் பரிசோதனைகள் மூலம் சாத்தியமாகிறது.

கல்வி / சாதனைப் பரிசோதனைகள்: 

இந்தப் பரிசோதனைகள் ஒரு குறிப்பிட்ட தலைப்பை ஒருவர் எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார் என்பதை மதிப்பிடப் பயன்படுகின்றன. உதாரணமாக கணிதம், வாசிப்பு போன்ற திறன்களை ஒருவர் எந்த அளவுக்குப் பெற்றிருக்கிறார் என்பதை அறிதல், அவற்றைக் கற்பதில் அவருக்கு ஏதேனும் சிரமங்கள் உள்ளனவா என்று அடையாளம் காணுதல் போன்றவை. இந்த வகையிலான பரிசோதனைகள் பெரும்பாலும் கல்வித்துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன, ஒரு குழந்தையின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு இவற்றை நிபுணர்கள் பயன்படுத்துகிறார்கள்.வழக்கு சார்ந்த உளவியல் பரிசோதனைகள்: இந்தப் பரிசோதனைகள் பொதுவாக அறிவாற்றல், ஆளுமை, நரம்பியல்-உளவியல் ஆகிய மதிப்பீடுகளின் தொகுப்பாக அமைகின்றன. இதன்மூலம் ஒருவர் ஒரு குறிப்பிட்ட குற்றத்தைச் செய்தாரா இல்லையா என்பதை தீர்மானித்து உறுதிசெய்ய இயலும். ஆகவே இந்தப் பரிசோதனைகள் பெரும்பாலும் சட்டத்துறையில் செய்யப்படுகின்றன.மனநல மதிப்பீடு: இந்தப் பரிசோதனை ஒருவருடைய மருத்துவ வரலாறு, குடும்ப வரலாறு, இப்போதைய மனநல நிலை ஆகியவற்றைப்பற்றிய விவரங்களைச் சேகரிக்கிறது, இதன்மூலம் அவருக்கு ஏதேனும் மனநலப் பிரச்னை இருக்கக்கூடுமா என்பதை அடையாளம் காண்கிறது. இதன்மூலம் பிரச்னையை அடையாளம் காணுதல், சிகிச்சை வழங்குதலுக்கு உதவுகிறது.

நரம்பியல்-உளவியல் பரிசோதனை: 

இந்தப் பரிசோதனை ஒருவருடைய மூளை எப்படி இயங்குகிறது என்பதை ஆராய்கிறது. அவருடைய மூளையில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதை அடையாளம் காண்கிறது. உதாரணமாக, மூளைக்காயம் கொண்ட ஒருவர் அல்லது டிமென்சியா அபாயம் உள்ள ஒருவருடைய ஞாபகத்திறன் பரிசோதிக்கப்படலாம் அதன் அடிப்படையில் அவருடைய மூளையின் இயங்குதிறனில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பது தீர்மானிக்கப்படலாம்.ஆளுமை மதிப்பீடு: இந்தப் பரிசோதனை ஒருவருடைய ஆளுமைப் பண்புகளில் கவனம் செலுத்துகிறது. இதைக்கொண்டு ஒருவர் அதிகம் அகவயத் தன்மை கொண்டவரா அல்லது புறவயத்தன்மை கொண்டவரா சுய உறுதிப்பாடு கொண்டவரா, அல்லது பிறருடன் பழகத் தயங்குபவரா என்பது போன்ற விஷயங்களைக் கண்டறியலாம். இதன்மூலம் அவர்கள் வெவ்வேறு வாழ்க்கைச் சூழல்களுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள் அந்தச் சமயங்களில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதை மதிப்பிடலாம்.

Psychology - பொதுவான உளவியல்

Psychotherapy - நடை முறையில் நோயாளிகளுக்கும், மக்களுக்கும் சிகிச்சை கொடுத்தல்

Psychiatry - மனோத்தத்துவம்

Neuro sciences - நரம்பியல்

Behavioral therapy - அன்றாட வாழ்க்கையில் / செய்முறையில் பிரச்சனை மற்றும் தீர்வு

Occupational therapy - சில வேலைகளின் கடினமான போக்கால் மனிதன் செயல்முறையில் மாற்றம்

counseling - பேசி புரிந்து தீர்வினை நோக்கிய வழி

மேற்கூறிய அனைத்தும் பொதுவான உளவியலில் வரும் சுற்றுபுறத்தையும் மனிதர்களையும் கண்டு, இணக்கத்தோடு மனநிம்மதி பெற்று வாழ்வதே உளவியலின் நோக்கம்.

No comments:

Post a Comment